கடந்த வருடம் வெளியாகி வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்று, விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட ‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த Kenanya பட நிறுவனமும், அப்படத்தின் இயக்குநர் கார்த்திக்கும் மீண்டும் ‘உள்குத்து’ என்ற படத்தின் மூலம் இணைந்து பணிபுரியவுள்ளனர். இதன் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதில் ‘அட்டக்கத்தி’ தினேஷும், நந்திதாவும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பால சரவணன், ஜான் விஜய், ஸ்ரீமன், சரத் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ‘மன்மத ராசா’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை சாயாசிங் தன்னுடைய திருமணத்திற்கு பின்பு மீண்டும் இந்தப் படத்தில் முற்றிலும் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தின் மிகப் பெரிய ஆச்சரியமே சண்டை இயக்குனர் திலிப் சுப்புராயன்தான், பல திரைப்படங்களில் பல்வேறு நடிகர்களை சண்டை காட்சிகளில் வில்லத்தனம் பிழிய வேலை வாங்கிய திலீப், இந்தப் படத்தில் ஒரு வில்லனாகவே அறிமுகமாகிறார். படத்திற்கு ருசி சேர்க்கும் வகையில் பிரபல சமையல் கலை நிபுணர் தாமோதரனும் இந்தப் படத்தில் ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.
சமீபகாலமாக எல்லோராலும் பாராட்டப்படும் இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். P.K. வர்மா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K..L. படத்தொகுப்பு செய்ய.. விதேஷ் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார்.
இந்த ‘உள்குத்து’ திரைப்படம் Action, thriller ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. மீன் விற்கும் வியாபாரிகளை கதைக் களனாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த ‘உள்குத்து’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நாகர்கோவிலில் துவங்குகிறது. 45 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.
இந்தப் படத்தை பற்றி இயக்குநர் கார்த்திக் கூறுகையில், “மீன் விற்பவர்களின் வாழ்வியல் மிகவும் வித்தியாசமான ஒன்று. அவர்களை பற்றிய படம் என்றதும் படக் குழுவினர் அனைவரின் ஒருமித்தக் கருத்தும் கதையின் களம் நாகர்கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு நாகர்கோவில் பகுதி, இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.
என் முதல் படமான ‘திருடன் போலீஸ்’ ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகப் பிரமுகர்கள் இடையேயும், ஊடகங்கள் இடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த ஆதரவுக்கு இந்த நேரத்தில் நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தப் படத்தை தொடர்ந்து எனக்கு மீண்டும் இந்த ‘உள்குத்து’ படம் மூலமாக இரண்டாவதாகவும் வாய்ப்பளித்த Kenanya films தயாரிப்பாளர் செல்வகுமாருக்கு என் உள்ளளவும் நன்றி..’ என்றார்.
படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!