பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், டிஸ்னி – யு டிவியின் தென்னிந்திய தலைமை செயல் அலுவலருமான கோ.தனஞ்செயன் திரைப்படங்கள் பற்றிய புத்தகத்திற்கான சிறப்பு தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.
இன்று மாலை புதுதில்லியில் விக்யான் பவனில் நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதினை வழங்கினார்.
தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய திரைப்படங்கள்: 1931 முதல் 2013 வரை என்கிற தலைப்பில் தனஞ்செயன் எழுதிய இப்புத்தகத்தில் 1931 முதல் 2013-ம் ஆண்டுவரையிலும் தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைப்படங்கள், இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இதுவரையிலும் திரையிடப்பட்ட தமிழ் படங்கள் பற்றியும் ஆராய்ந்து, பல அரிய புகைப்படங்களுடன் 614 பக்கங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் நமது நாட்டின் கலாச்சார பெருமைகளை நிலைநாட்டிய படங்களை பற்றிய தொகுப்பும் இந்தப் புத்தகத்தில் உண்டு. இந்திய சினிமாவில் 83 ஆண்டுகளாக கோலோச்சும் தமிழ் சினிமாவின் பெருமை பற்றியும், தேசிய அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த நடுவர்களுக்கும் சமர்ப்பிக்கபட்ட புத்தகம் இது.
தனஞ்செயன், எம்.பி.ஏ பட்டப் படிப்பு படித்த ஒரு வியாபார மேலாண்மை அதிகாரி ஆவார். தற்போது டிஸ்னி – யு.டி.வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவர் சினிமா பற்றிய பல ஆய்வு கட்டுரைகளை பல்வேறு பத்திரிகைகளில் எழுதி புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-ம் ஆண்டு ஆங்கிலத்தில் இவர் எழுதிய ‘பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா’ என்ற புத்தகம் சர்வதேச அரங்கில் பெரும் பெயரை ஈட்டியது.
தேசிய விருதினை பெற்றது பற்றி தனஞ்செயன் கூறும்போது, “இன்று என் வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள். என் மனைவி மற்றும் அவர் தந்தையின் முன்னிலையில் ஜனாதிபதியின் கையால் என் எழுத்துக்கு கிடைத்த விருது, தமிழ் சினிமாவுக்கு உரித்தானது. தமிழ் சினிமாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்த என் புத்தகத்திற்கு கிடைத்த இந்த விருதால், தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு பெருமையும் கிடைத்துள்ளதாகவே நினைக்கிறேன். இத்தருணம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த விருது மேலும் எழுத என்னை ஊக்குவிக்கிறது.” என்றார் நெகிழ்ச்சியோடு..!