full screen background image

‘ட்ராப் சிட்டி’ படத்தில் இடம் பெறும் ‘பேரனாய்ட்’ பாடலை எழுதி பாடியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

‘ட்ராப் சிட்டி’ படத்தில் இடம் பெறும் ‘பேரனாய்ட்’ பாடலை எழுதி பாடியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ‘ட்ராப் சிட்டி’ என்கிற படத்துக்கு, தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட ‘தி ஏடிஜி’(அஸ்வின் கணேஷ்) இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடல்களை சோனி மியூசிக்கின் ‘தி ஆர்சர்ட்’ நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது. ‘ட்ராப் சிட்டி’யின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி அவர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தப் படத்தில் முதன்மைத் தனிப்பாடலான, ‘பேரனாய்ட்’ (அச்ச உணர்வு) பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து இசையமைப்பாளர், பாடகர் ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 6.30 நிமிடங்கள் ஒலிக்கும் பேரனாய்ட் பாடல், ட்ராப் சிட்டி’ படத்தின் முக்கியப் பாடல். ‘ட்ராப் சிட்டி’ திரைப்படத்தின் டீஸரும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

‘பேரனாய்ட்’ என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த வேளையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது.

ஒருபுறம் ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ்’ என்கிற கோஷங்கள் உலகம் முழுவதும் பல்வேறு தளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இப்பாடலை வெளியிடுவது மிகவும் பொறுத்தமானதாக அமைந்துள்ளது.

உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் வெற்றிகளையும், இழப்புகளையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கு அதன் வரிகள் வலிமை சேர்த்துள்ளது . முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன.

ஏடிஜியின் ‘பேரனாய்ட்’ பாடல் 2020-ம் ஆண்டுக்கான மிக முக்கியமான அறிவுரையை முன் வைக்கிறது. வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை உரக்கச் சொல்கிறது.

பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு ஒமர் குட்டிங்  உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.

நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. “என்ற பாடலின் வரிகள் மிக ஆழமானதாக அமைந்துள்ளது.

உலகமே அச்சத்திலும் பதற்றத்திலும் சிக்கியிருக்கும் வேளையில் இந்த பேரனாய்ட்’ பாடல் ஒரு மந்திரமாக ஒலிக்கும். அந்த மந்திரம் நம்பிக்கையை விதைக்கும். புதிய நம்பிக்கை ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கும்.

ஜி.வி.பிரகாஷ் கண்ணே கண்ணே..’ எனப் பாடலில் கசிந்துருகும்போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்கிற வலியுறுத்தல், அவரது குரல் மூலம் வலுவாகப் பதிவாகிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்தப் பாடலின் கருவும் அதன் வரிகளும் அப்படியே பொருந்திப் போகின்றன.

அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.

‘பேரனாய்ட்’ உருவாக்கம் குறித்து இசையமைப்பாளர் ஏடிஜி பேசுகையில், “நான் ஜெர்மன் இசைக் கலைஞர் ஹான்ஸ் ஸிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். இசைக் கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்” என்றார்.

பாடலில் பங்காற்றியது குறித்து கூறிய ஒமர் குட்டிங், “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதை எளிதில் செய்யலாம். உங்கள் வாக்கை செலுத்தி உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுங்கள்.

மாற்றத்திற்கான உங்களின் பங்களிப்பை நல்குங்கள். அதன் மூலம் வெறுப்பை, அச்சத்தைப் போக்குங்கள்.. நானும், என்னைப் போன்ற கலைஞர்களும் எங்கள் தளங்களை உண்மையான மாற்றத்தை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும் முயற்சியில் இந்தப் பாடல் என்பது ஒரு பகுதியே…” என்றார்.

ராப் பாடகி சா-ராக் பேசும்போது, “திறன் வாய்ந்த பன்முகத் தன்மை கொண்ட கலைஞர்களான ஒமர் குட்டிங், ஜி.வி.பிரகாஷ், தி ஏடிஜி ஆகியோருடன் இணைந்து இந்த பேரனாய்ட்’ ஆல்பத்தில் பணியாற்றியது ஒரு உச்சக்கட்ட அனுபவம்.

சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிரப் பிரச்சினையை தனித்துவத்துடன் புத்துணர்வு பொங்கும் வகையில், எடுத்துரைக்கும் பணியில் இணைந்து செயல்பட்டதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்…” என்று சொல்லி நெகிழ்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், “ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச் சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்.

இது போன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில், வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்படுட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறது.

Our Score