சமீபத்தில் வெளிவந்த `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
‘பிச்சைக்காரன்’ படத்தைத் தெலுங்கில் வெளியிட்டவர்களே இந்தப் படத்தையும் தெலுங்கில் வெளியிடவுள்ளனர்.
கர்நாடகாவிலும் இந்தப் படம் வெற்றிக் கனியை பறித்ததையடுத்து, இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்வதற்காக நடிகர் உபேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மலையாள மொழிக்கான மொத்த டப்பிங் மற்றும் ரீமேக் உரிமையை ‘WRITER IMAGINATIONS’ நிறுவனத்தின் உரிமையாளரான மகாவிஷ்ணு வாங்கியிருக்கிறார்.
மேலும், ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேனை, இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் பலர் தங்கள் வீட்டிற்கே அழைத்துத் தங்களது பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றனர்.
பெரிய ஹீரோக்கள் படங்கள், அதிக பட்ஜெட் படங்கள் மத்தியில், குறைந்த பட்ஜெட் படமென்றாலும் தரமான படமாக இந்தப் படம் வெளிவந்துள்ளது. மேலும், தரவிறக்கம் செய்யும் பல வலைத்தளங்கள் இருக்கையிலும், ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது இப்படத்தின் தரத்தையும், மதிப்பையும் உயர்த்துகிறது என்றே சொல்லலாம்.