ஸ்ரீசங்கேஷ்வர் கிரியேஷன்ஸ் மற்றும் நியூ மூன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘துணிந்தவன்’.
‘கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ படங்களில் நடித்த தேஜ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மதால்ஷா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். குங்ஃபூ மாஸ்டராக நிஜ குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கிறார். குங்ஃபூவில் 8 பிளாக் பெல்ட் வாங்கியவர். உலகம் முழுவதும் இதுவரை 10,000 மாணவர்களுக்கு யிற்சியிளித்துள்ளார். இவர்களுடன் சூரி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்திற்கு கதை, திரைக்கதையை ஹீரோ தேஜ் எழுதுகிறார். புதுமுகம் அஜீத் இயக்குகிறார். இவர் ‘காந்தம்’ படத்தின் அசோஸியேட் இயக்குநராகப் பணி புரிந்தவர். பிரேம் ஒளிப்பதிவைக் கையாள, சபேஷ் சாலமன் இசையமைக்கிறார். இவர் ஹரீஸ் ஜெயராஜின் உதவியாளர். மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளிக்க, கூல் ஜெய்ந்த் நடனம் அமைக்கிறார். ரோஹித், திலீப் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படம் பற்றி பேசிய இயக்குநர் அஜீத், “கதாநாயகன் தேஜ் வேலை விஷயமாக சீனா செல்கிறார். அங்கு ஒரு மாபியா கும்பல் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை எதார்த்தமாக கவனித்து விடுகிறார். உடனே அந்த கும்பல் அவரை கொலை செய்ய முற்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து சீனா சென்று மாணவர்களுக்கு குங்ஃபூ பயிற்சி அளித்து வரும் மாஸ்டர் ராஜநாயகம், கதாநாயகன் தேஜ்யை காப்பாற்றி பத்திரமாக சென்னை அனுப்பி வைக்கிறார்.
ஹீரோவை பின் தொடர்ந்து சென்னை வரும் மாபியா கும்பல் கதாநாயகியைக் கடத்தி வைத்துக் கொண்டு, பிளாக் மெயில் செய்கிறது. இனி மாபியா கும்பலுடன் கதாநாயகன் தேஜ் மோதுவதுதான் கதை.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சைனாவில் நடைபெற உள்ளது. பாடல் காட்சிகள் வட இந்தியாவின் குளிர் மாநிலங்களில் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆக்ஷன், திரில்லர், காதலுடன் உருவாகிறான் ‘துணிந்தவன்’..” என்றார்.