full screen background image

தொடரும் – சினிமா விமர்சனம்

தொடரும் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Rejaputhra Visual Media நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.ரஞ்சித் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் மோகன்லால், ஷோபனா, மணியம்பிள்ளை ராஜூ, இர்ஷாத் அலி, பிரகாஷ் வர்மா, பினு பாப்பு, பர்ஹான் பாஸில், சஜியோ அடிமாலி, தாமஸ் மேத்யூ, அமிர்தவர்ஷினி, இளவரசு, பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து – கே.ஆர்.சுனில், தருண் மூர்த்தி, இயக்கம் – தருண் மூர்த்தி, ஒளிப்பதிவு – ஷாஜி குமார், படத்தொகுப்பு – ஷபீக், நிஷாத் யூசூப், இசை – ஜேக்ஸ் பிஜோய், ஒலிப்பதிவு – விஷ்ணு கோவிந்த், நிர்வாகத் தயாரிப்பு – அவந்திகா ரஞ்சித், உடை வடிவமைப்பு – சமீரா சனீஷ், ஒப்பனை – பட்டணம் ரஷீத், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

 இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் அடுத்த படைப்பு இது.

ஒரு சின்ன சிறிய கதையை வைத்து மிக மிக சுவாரசியமான திரைக்கதையினால் அதை நகர்த்தி மெஸ்மரிசம் செய்யக்கூடிய அளவுக்கான ஒரு அழகான இயக்கத்தை கொடுப்பதினால்தான் மலையாள திரைப்படங்கள் இந்திய முழுவதுமே பேசப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.

சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக இருந்த சண்முகம் இப்போது ஓய்வு பெற்று விட்டு தமிழக கேரள எல்லைகள் அமைந்திருக்கும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் குடியிருந்து வருகிறார். அவருடைய மனைவி ஷோபனா. ஒரு மகன். ஒரு மகள். இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சண்முகத்தின் காட்ஃபாரான ஸ்டண்ட் மாஸ்டரான பழனி என்ற பாரதிராஜா, சண்முகத்திற்கு ஒரு பழைய அம்பாசிடர் கார் ஒன்றை வழங்கியிருக்கிறார். அந்தக் காரை வாடகைக்காராக ஓட்டி வருகிறார். சண்முகம் பெரும்பாலான நேரங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை அந்த கார் மூலமாக அழைத்துச் சென்ற வருகிறார். தன் வீட்டருகே இருக்கும் பள்ளிக்கு போகும் சிறுமிகளை அழைத்துக் கொண்டு செல்கிறார். இப்படியாக அவருடைய வருமானமும், வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் அவருடைய மாஸ்டர் பழனி சென்னையில் காலமாகிவிட அவருடைய இறுதிச் சடங்கிற்காக சென்னை சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிய சண்முகத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவருடைய அம்பாஸிடர் காரில் கஞ்சா கடத்தியதாக காரைப் பறிமுதல் செய்து போலீஸ்  ஸ்டேஷனில் வைத்திருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி சென்று தன்னுடைய காரை கேட்கிறார் சண்முகம். அதை சப் இன்ஸ்பெக்டர் தர மறுக்கிறார். இதனால் இருவருக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இருக்கிறது.

லீவு முடிந்து பணிக்குத் திரும்பும் இன்ஸ்பெக்டரிடம் தன்னுடைய காரை திருப்பித் தரும்படி கேட்கிறார் சண்முகம். சப்-இன்ஸ்பெக்டரைவிடவும் இன்ஸ்பெக்டர் மிகப் பெரிய நல்லவராக சண்முகத்திற்கு தெரிகிறார். இன்ஸ்பெக்டரும் காரை சண்முகத்திடம் கொடுக்கச் சொல்கிறார்.

அதனால் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு சண்முகம் காரை எடுக்கின்ற பொழுது இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் தங்களை அருகில் ஓரிடத்தில் நடக்கும் கான்ஸ்டபிளின் தங்கை திருமணத்தில் ட்ராப் செய்துவிட்டு போகும்படி செல்கிறார்கள். அதனால் அவர்களை ஏற்றிக் கொண்டு அந்த இடத்திற்கு செல்கிறார் சண்முகம்.

மீண்டும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் மூவரையும் ஏற்றிக் கொண்டு ஒரு மலைப்பிரதேசத்திற்கு செல்ல வேண்டிய என்ன நேர்கிறது சண்முகத்திற்கு..! அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருப்பங்களும், எதிர்பாராத சம்பவங்களும்தான் இந்தப் படத்தின் மீதி கதை.

மோகன்லால் என்ற நடிப்பு அரக்கனின் நடிப்பை எப்படி வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும் ரசிக்கலாம். அப்படி ஒரு நடிப்பு ராட்சசனுக்கு இந்தப் படமும் சரியாகவே தீனி போட்டு இருக்கிறது.

ஒரு அப்பாவியான கார் டிரைவராக தன்னுடைய காரையும் தன்னுடைய குடும்பத்தையும் நேசித்து ரசித்து வாழ்ந்து வரும் அந்த சண்முகம் குடும்பமும் காரும் ஒரே நேரத்தில் சின்னா பின்னமாகும் அந்த சூழல் வந்த பிறகு எப்படி தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டுகிறார் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய மனதில் ஆழமாக அமர்ந்த பின்பு வெறித்தனத்தை காட்டியிருக்கிறார் சண்முகமாக நடித்திருக்கும் மோகன்லால்.

சட்டென்று மகனை கை நீட்டி அடித்துவிட்டு அதன் பிறகு மகன் தன்னிடம் பேச வேண்டுமே என்பதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு வாட்ஸ் அப்பில் குரல் வழியாக செய்தி அனுப்புவதும் அதை எப்படி பகிர்ந்து கொள்வது என்பது கேட்டுக் கொண்டு செய்வதும் நெகிழ வைக்கும் காட்சி. மனைவியையும் மகன், மகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பதும்… நண்பர்கள் இடையே நட்பை பேணுவதும்… ஒரு சராசரி ஒரு எளிய மிடில் கிளாஸ் மனிதன் என்ன செய்வானோ அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் லாலேட்டன்.

போலீஸ் ஸ்டேஷனில் தன்னுடைய காரை இப்படி ஒரு சிக்கலில் மாட்டிவிட்டார்களே என்று ண்பர்களிடம் ஒரு கோபப்பட்டு பேசும்போதும், அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போலீஸ் விரித்த வலையில தன்னை அறியாமலே சிக்கிக் கொண்டு இந்தக் குழப்பத்தில் தவிக்கின்ற நிலைமையும் தன்னுடைய நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

மலைக்கு சென்றுவிட்டு மறுநாள் வீடு திரும்பி விட்டு காலைப்பொழுதில் மனைவியிடம் இருந்து அதை மறைக்க முடியாமல், மறைக்கத் தெரியாமல், மாட்டிக் கொண்டு பின்பு தப்பிப்பதற்காக பல பொய்களை சொல்லி பதட்டத்தை உண்டு பண்ணும் அந்தக் காட்சிகளில் லாலேட்டனை அத்தனை பேருக்குமே பிடித்துப் போகிறது.

லாலேட்டன் என்ற நம்முடைய பக்கத்து வீட்டு சண்முகத்தின் இந்த அற்புதமான நடிப்புக்காகவே இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு லாலேட்டனுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அவருடைய ஆஸ்தான, பிரியமான நாயகி ஷோபனா இந்த படத்திலும் தன்னுடைய அற்புதமான நடிப்பை காண்பித்து இருக்கிறார். சாதாரணமான மிடில் கிளாஸ் குடும்ப தலைவி கதாபாத்திரம் கடைசியாக போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளாகி பெரும் அவஸ்தைப்படும் நேரத்திலும் தன்னுடைய கோபத்தை கண்களாலேயே காட்டி எரித்து விடும் காட்சியில் அந்த சோபனாவின் கண்களுக்கும் ஒரு சல்யூட். அவருடைய நடிப்புக்கும் ஒரு சல்யூட்.

யார் அந்த இன்ஸ்பெக்டராக நடித்தவர் என்று இப்போது கேரளாவே கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை தன்னுடைய முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார் இன்ஸ்பெக்டராக நடித்த பிரகாஷ் வர்மா. அவருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். இவர் நல்லவரா… கெட்டவரா.. வில்லனா… ஹீரோவா… என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு சிரித்தபடியே வில்லத்தனத்தை செய்யும் இவரை மனதாரப் பாராட்டலாம்.

கஞ்சா விற்றவனிடம் அறை வாங்கிய கோபத்தில் காரை தரமாட்டேன் என்று சொல்லும் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பினு பாப்பு, கடைசியில் பரிதாபமாக உயிரை இழக்கின்ற வரையிலும் ஒரு இயல்பான ஒரு மனிதனாக.. ஈகோ பிடித்த ஒரு போலீஸ்காரனாக… தன்னுடைய குணாதிசயத்திற்கேற்ற நடிப்பை காண்பித்திருக்கிறார்.

அதேபோல் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருப்பவரும் தன்னுடைய சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டும் அல்ல. மகன், மகளாக நடித்தவர்கள், மணியம்பிள்ளை ராஜூ, பக்கத்து வீட்டுக்காரர்களாக நடித்தவர்கள், மற்ற போலீஸ்காரர்கள் என்று அனைவருமே மிகச் சிறப்பான இயக்கத்தினால் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பழனியாக நடித்திருக்கும் இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கும்படியான வேடத்தையே ஏற்றிருக்கிறார்.

மலையாள தேசமே ஒரு மண்ணும் மழையும் சார்ந்த பகுதிதான். படத்தின் துவக்கக் காட்சிகளிலேயே நிலச்சரிவு ஏற்பட்ட இடமும், வளைத்து வளைத்து செல்கின்ற அந்தப் பாதையும் இரவு நேரத்தில் பார்க்கும் பொழுதே அவ்வளவு அழகாக காட்சி அளிக்கிறது.

ஒளிப்பதிவாளர் மிகுந்த பிரயத்தனப்பட்டு, கஷ்டப்பட்டுத்தான் இந்தப் படத்தில் வேலை செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய கடின உழைப்பையும் கொடுத்திருக்கிறார். அவருடைய உழைப்புக்கேற்ற பலன் திரையில் தெரிகிறது. மழைக் காட்சிகளும், வெயில் காட்சிகளும் கட்டுக்குள் நடக்கும் திரில்லர் காட்சிகளும் சேர்ந்து ஒளிப்பதிவையும் ஒரு நடிகராகவே நமக்குக் காட்டியிருக்கிறது.

இரண்டு பாடல்களின் காட்சிகளை மாண்டேஜ் காட்சிகளாக வைத்து கதையை நகர்த்தி இருக்கின்றனர். பின்னணி இசையும் சோகத்தை பிழிந்து எடுத்து நம் மனதில் எங்கும் மூலையில் இருந்த அந்த சோக ரசனையை தட்டிவிட்டு, தூண்டிவிட்டு படத்துக்குள் நம்மை ஆழ வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

படத் தொகுப்பாளர் கொண்டு வந்து கொடுத்த அத்தனை காட்சிகளையும் எப்படி நெருக்கி எவ்வளவு அழகாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு மிக அழகாக படைத்து ஒப்பனை செய்து இருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

தமிழ்ப் படங்களை மட்டுமின்றி மலையாளப் படங்களிலும் இப்போது இளையராஜாவின் புகழ் பரப்பப்படுகிறது. இளையராஜாவின் பாடல்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்காகவும் இந்தப் படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

கேரளாவில் பத்தினாம்திட்டா மாவட்டத்தில் நடக்கும் ஒரிஜினல் கதை தமிழ் டப்பிங்கிற்காக கம்பம்-கூடலூர் பகுதியில் நடப்பதாகக் காட்டப்பட்டு கம்பம், தேனி, மதுரை என்றெல்லாம் பேசப்படுகிறது. இட்ஸ் ஓகே..!

எப்போதும் தமிழர்களை கேலிக்கூத்தாக்கும் மோகன்லாலின் பட வரிசையில் இந்தப் படம் கொஞ்சம் புண்ணியத்தை செய்திருக்கிறது. மோகன்லாலின் தமிழ்நாட்டு பாசம், தமிழ்ப் படங்களின் நேசம்.. தமிழ் ஸ்டண்ட் மாஸ்டர் மீதான பாசம், சபரிமலை பக்தர்கள் மீதான கரிசனம், இளையராஜாவின் இசை மீதான வெறி.. என்று பலவற்றையும் வைத்து தமிழையும், தமிழர்களையும் சமன் செய்திருக்கிறார்.

ஆனாலும் கஞ்சா மட்டும் தமிழ்நாட்டு வழியாகவே கேரளாவுக்குள் வருவதாகச் சொல்லியிருப்பதையும், தமிழர்கள் கேரளாவுக்குள் வந்து கஞ்சா விற்பதாகச் சொல்லியிருப்பதையும் ஏற்பதற்கில்லை..!

இப்போது கேரளாவில் சில நடிகர்களே கஞ்சா பயன்படுத்தி போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த்தாக்க் கைதாகியிருப்பதும் மலையாளிகள்தான். இயக்குநர் இதைக் குறித்து வைத்துக் கொள்வது நல்லது!

தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன. கேரளாவில் இல்லை. அங்கே நடப்பதெல்லாம் வர்க்கப் பலிதான் என்று பல கட்டுக் கதைகளை சொன்னாலும், எழுத்தறவில் சென்டம் அடித்திருக்கும் கேரளாவிலும் ஜாதிப் பிரச்சினை காதல் கல்யாணத்தில் நிறையவே தலை தூக்கும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காக அவருக்கு ஒரு தனி பாராட்டுக்கள்!

பொதுவாக பழிக்குப் பழி வாங்கும் திரைப்படங்களை நாம் எப்போது ஆதரிப்பதில்லை. ஆனால் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வேறு வழியே இல்லாமல் எதிராளிக்கு தண்டனையை கொடுத்துவிட்டு தங்களுக்கு தங்களை தண்டனை தேடிக் கொள்பவர்களை இது ஒரு வகையான சினிமா என்ற வகையில் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

கடைசியில் “குற்றம் செய்துவிட்டேன். இப்போது நீதியின் முன்னால் வந்து நிற்கிறேன்” என்று சண்முகம் சொல்வதைப்போல இந்தப் படத்தின் கதையையும் இயக்குநர் அமைத்திருக்கிறார் என்பதால் இதில் நாம் எந்த குறையும் சொல்வதற்கில்லை.

 ஒரு அட்டகாசமான ஆக்சன், திரில்லர், சஸ்பென்ஸ் திரைப்படத்தை எந்த அளவுக்கு மிகச் சிறப்பான இயக்கத்தினால் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்திருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி.

குற்றத்தை செய்தவனுக்கு தண்டனை வாங்கி தர இயலாமல் போனால் தாங்களே தண்டனை கொடுத்துவிட்டு அதற்கு பிறகு அவர் செய்த குற்றத்தை வெளிப்படையாக சொல்ல வைத்து தண்டனையை ஏற்க தயார் என்று சொல்வதெல்லாம் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மனிதனின் மனோபாவம்.

அப்படி ஒரு மனோபாவம் கொண்ட சண்முகம் என்ற சாதாரண ஒரு மனிதனின் கதைதான் இந்தப் படம். படம் முடிந்து வெளியில் வரும் பொழுது நிச்சயமாக நீங்கள் அந்த சண்முகம் என்கின்ற அந்த மனிதனுக்காக இறக்கப்படுவீர்கள். பரிதாபப்படுவீர்கள். அதே சமயம் கொஞ்சம் சந்தோஷமும் படுவீர்கள். அதுதான் அந்த இயக்குநரின் சாதனை !

இந்த படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்களும்..! வாழ்த்துக்களும்..!

RATING : 4 / 5

Our Score