‘ரோஜா மாளிகை’ படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘தோள் கொடு தோழா.’
இந்தப் படத்தில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். கதாநாயகிகளாக மும்பையை சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ இருவரும் நடிக்கிறார்கள்.
மேலும், ஹரி, ராகுல் , பிரேம் என்று மூன்று புதுமுகங்களும் படத்தில் அறிமுகமாகிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷிணி, சிங்கம் புலி, முத்துக்காளை ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ், இசை – லியோ பீட்டர், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், கலை இயக்கம் – செந்தில், நடன இயக்கம் – அசோக் ராஜா, சண்டை இயக்கம் – தளபதி தினேஷ், பாடல்கள் – விவேகா, சுந்தர், தயாரிப்பு மேற்பார்வை – P.மனோகரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கெளதம், தயாரிப்பு – பர்ஸ்ட் லுக் மூவிஸ்.
இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி படத்தினை துவக்கி வைத்தனர்.
படம் பற்றி இயக்குநர் கெளதம் பேசும்போது, “தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும்விதமான கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறது.
படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில்தான் அனைவரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது. அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவுதான் இந்த ‘தோள் கொடு தோழா’ திரைப்படம். இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
தமிழ் புத்தாண்டு அன்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்குகிறது.
படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடை பெற உள்ளது…” என்றார்.