full screen background image

“இந்தப் படத்தில்தான் எனக்கு லாபம் கிடைத்துள்ளது” – தயாரிப்பாளர் ரவீந்தர் பேச்சு..!

“இந்தப் படத்தில்தான் எனக்கு லாபம் கிடைத்துள்ளது” – தயாரிப்பாளர் ரவீந்தர் பேச்சு..!

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் திரைப் பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகர், தயாரிப்பாளர் நிதின் சத்யா பேசும்போது, “நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்தப் படம். இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்தப் படம் சிறப்பாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்…” என்றார்.

நடிகர் ராதாரவி பேசும்போது, “நிதின் சத்யா, ரவிந்தர் இருவரும் எனது நீண்ட கால நண்பர்கள். நிதின் போன்ற உழைப்பாளிகளுக்கு உதவுவது அனைவரது கடமை. திரைக் கலைஞர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் ரவீந்தர். அவர் அழைத்ததால்தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

s.r.prabhu

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “காதல் படங்கள் இப்போது தமிழ் சினிமாவின் தேவை. தொடர்ந்து வெற்றிகரமான படங்களை எடுத்து வரும் தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ், அடுத்து தோனியின் தயாரிப்பில் படம் இயக்குகிறார், அவர் திறமைசாலி, அவருக்கு எனது வாழ்த்துகள். இந்த படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது, வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

நடிகர் அபிஷேக் பேசும்போது, “காதல் படங்கள் எடுப்பதற்கு ஒரு பொறுப்பு தேவை. படம் வெளியான பிறகு, ஒளிப்பதிவாளர் அனைவராலும் பேசப்படுவார். நிதின் சத்யா அனைவருக்கும் இடம் கொடுக்க ஆசைப்படுபவர். அனைவரையும் மேலே தூக்கி விட கூடியவர். இயக்குநர் உடைய அர்ப்பணிப்பு அனைவரையும், அவருடன் இணைந்து பயணிக்க வைக்கிறது. இந்தப் படத்திற்கு வெற்றிகள் குவிய வேண்டும்..” என்றார்.

நடிகை சனா பேசும்போது, “என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மொழி தெரியாத எனக்கு காட்சிகளை சரியாக புரிய வைத்து, என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கும் நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் R.அரவிந்த் பேசும்போது, “புது இயக்குநர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அதையும் தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்தப் படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.” என்றார்.

நடிகர் மகத் பேசும்போது, “இது எனது 16-வது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குநர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன், அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ரமேஷ் இந்த படத்தில் அறிமுகமானது எனக்கு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். இந்த படம் பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்தபோது, ரவீந்தர்தான் உதவினார். அவருக்கு எனது நன்றிகள். நிதின் சத்யா, ரவீந்தர் போன்ற ஆட்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அனைவருக்கும் நன்றிகள்.” என்றார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் பேசும்போது, “நிதின் சத்யாவிற்கும், எனக்கும் இடையேயான புரிதல் சிறப்பானதாக இருக்கும். திரைப்படத்தை அதிக ஆர்வத்துடன் எடுக்க கூடியவர் நிதின். மகத் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை, விவேக் பிரசன்னா போன்ற ஆகச் சிறந்த நடிகர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இவர்கள் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் அறிவும், திறமையும் அதிகமாக உடையவர்கள். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் தயாரித்ததில் இந்தப் படம்தான் எனக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.” என்றார்.

Our Score