தினேஷ் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில், புதிய இயக்குனர் கார்த்திக் இயக்க வெளிவர தயாராக இருக்கும் ‘திருடன் போலீஸ்’ படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நா முத்துகுமார் இயற்றிய , ஹரிஹர சுதன் – பூஜா பாடிய ‘பேசாதே …, பார்வைகள் வீசாதே’ இசை உலகில் ஒரு மெல்லிய தென்றலாய் வீச , நரேஷ் ஐயர் -ரோஷினி பாட மறைந்த கவிஞர் வாலி இயற்றிய ‘ மூடு பனிக்குள் ஓடி திரியும் மேகம் போல மயக்க நிலை ‘ பாடல் கேட்பவர்களை மெய் மறக்க செய்து மயக்க வைக்கிறது.
“பாடலின் வரிகளுக்கும் இனிமைக்கும் சற்றும் குறைவில்லாத காட்சி அமைப்பை நாங்கள் வழங்கி உள்ளோம். இசையின் வெற்றி படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும். இந்த இரண்டு இனிமையான பாடல்களுக்கு இசை அமைத்து ,படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏகமாக எகிற வைத்து இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. எனக்கு மறைந்த கவிஞர் வாலி ஐயாவுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் என்னுடைய தயாரிப்பாளர்கள் சரண் மற்றும் செல்வா எனக்கு அவருடைய பாடலை படமாக்க வாய்ப்பு தந்தது மறக்க முடியாதது.
இந்த பாடல் சரண் அவர்களின் தயாரிப்பில் உருவான் ‘ ஆரண்ய காண்டம்’ படத்துக்காக எழுதப்பட்டது. ஆனால் படமாக்கப்படவில்லை. இந்த பாடலை எனக்கு கொடுக்கும்படி சரண் சாரிடம் கேட்டபோது ‘அதற்கேற்ப நல்ல டியூனை நீ யுவனிடம் வாங்கினால் தருகிறேன்…’ என்றார் . நான் யுவனிடம் சொல்ல தயக்கம் இன்றி சட்டென்று ஒப்புக் கொண்டு இந்த அருமையான படலை இசை வடிவமாக வழங்கினார். இப்போது பாடல்களுக்கு கிடைத்துள்ள அதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். படம் வரும் செப்டம்பர் மாதம் படம் நிச்சயமாக வெளிவரும்…” என்று நம்பிக்கையாக கூறுகிறார் புதிய இயக்குனர் கார்த்திக்.