நயன்தாரா நடிப்பில் உருவாகி, வரும் வியாழக்கிழமையன்று வெளியாகவிருக்கும் ‘கனெக்ட்’ படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரெளடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’. இந்தப் படத்தில் நயன்தாரா, சத்யராஜ், வினய், அனுபம் கெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘மாயா’, ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஸ்வின் சரவண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 22, வியாழக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது.
நயன்தாரா நடித்துள்ள படம் என்பதால் படத்திற்கு சிறிதளவு வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இடைவேளை விடப்படாது என்று இயக்குநர் அறிவித்திருப்பது திரையுரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய படம் என்பதால் இடைவேளையே இல்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் சுவாரஸ்யம் குறையக் கூடாது என்பதால் இடைவேளை இல்லாமலேயே இப்படத்தை வெளியிடவும் படக் குழு முடிவு செய்துள்ளது.
ஆனால் இப்படி இடைவேளையே இல்லாத இந்த படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்களும் முடிவெடுத்துள்ளார்களாம்.
ஏனெனில் இப்போதைய நிலையில் திரையரங்குகளில் வசூலாகும் டிக்கெட் கட்டணத்தைவிடவும் அங்கே கேண்டீனில் விற்கப்படும் தின்பண்டங்களின் மூலமாகக் கிடைக்கும் வசூல்தான் தியேட்டர்களுக்கு மிகப் பெரிய தொகை. அதை இழக்க அவர்கள் விரும்பவில்லையாம். இதனால்தான் தியேட்டர் உரிமையாளர்கள் இதை எதிர்க்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இப்போது இந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.