full screen background image

“தி பேமிலி மேன்-2’ இணையத் தொடர் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும்” – சீமான் எச்சரிக்கை…!

“தி பேமிலி மேன்-2’ இணையத் தொடர் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும்” – சீமான் எச்சரிக்கை…!

“தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன்2’ இணையத் தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் தி பேமிலி மேன் என்னும் வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீஸன் வெளியான நிலையில் ஒரு வருடம் கழித்து இதன் இரண்டாவது சீஸன் வரும் ஜூன் 4-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

இந்த இரண்டாவது பாகத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் தொடரின் டிரெயிலர் சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அப்போதுதான் சமந்தா இந்தத் தொடரில் பெண் விடுதலைப் புலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதே தெரிய வந்தது.

டிரெயிலரில் வந்திருக்கும் கருத்துப்படி சமந்தா ஒரு மனித வெடிகுண்டாக சென்னைக்கு வந்து ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்ய நினைக்கிறார். அதைத் தடுப்பதற்காக டெல்லியில் இருக்கும் மத்திய உளவுத் துறை அதிகாரியான மனோஜ் வாஜ்பாய் சென்னை வருகிறார். இதுதான் கதை. இதில் தமிழர்களை கொலையாளிகள் போல சித்தரிக்கும் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த டிரெயிலரை பார்த்துவிட்டே பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டமும், அதில் இடம் பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக் களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப் பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப் புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல.

ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப் பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப் போராட்டம் வாயிலாகவும், சட்டப் போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதி கேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத் தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள் நாட்டுப்போரை நடத்தி நச்சுக் குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீது சிறு தாக்குதல் கூடத் தொடுக்காது மரபு வழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும்… அற வழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப் புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணைய வெளியில் ஒளிபரப்புவதை ஒரு நாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஏற்கனவே, மிகத் தவறாக எடுக்கப்பட்ட இனம்’, ‘மெட்ராஸ் கபே’ போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, ‘தி பேமிலி மேன்-2’ எனும் இணையத் தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும்.

அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்…” என்று சீமான் எச்சரித்துள்ளார்.

Our Score