Shiju Thameen’s Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
வரும் மார்ச் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.
கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஷிஜு தமீன்ஸ் பேசும்போது, “இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் “மெமரீஸ்”. இது எனது முதல் படம். எங்கள் படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு தேவை நன்றி..” என்றார்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசும்போது, “இப்படம் எனது இரண்டாவது படம். க் எனது முதல் படம். இப்படம் சீட் எட்ஜ் திரில்லர். நாங்கள் எல்லோரும் புதியவர்கள், மக்களிடம் நீங்கள்தான் எங்கள் படத்தைக் கொண்டு செல்ல வேண்டும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.
ஒளிப்பதிவாளர் கிரண் நுபிதால் பேசும்போது, “தமிழில் எனக்கு இது முதல் படம். மிகச் சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில்தான் நான் இணைந்தேன். என் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளதாக நம்புகிறேன்” என்றார்.
எழுத்தாளர் விபின் கிருஷ்ணா பேசும்போது, “இது எனது முதல் மேடை. இந்த மேடைக்காக எங்கள் டீம் பல நாள் காத்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு வந்த பல தடைகளைத் தாண்டி இப்படம் முடிய எங்கள் தயாரிப்பாளர் ஷிஜு தமீன்தான் காரணம். அவருக்கு நன்றி. வெற்றி தேர்ந்தெடுத்த எந்த கதையும் சோடை போகாது. இப்படத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு நன்றி. ஷ்யாம் எனது பல கால நண்பர். பல வருடங்களாக நாங்கள் இணைந்து வேலை பார்த்து வருகிறோம். அஜயன் பாலா சார் தமிழில் வசனங்களை அட்டகாசமாக செய்துள்ளார். மார்ச் 10-ம் தேதி எல்லோரும் தியேட்டரில் இப்படத்தைப் பாருங்கள்..” என்றார்.
வசனகர்த்தா அஜயன் பாலா பேசும்போது, “லாக் டவுனுக்கு முன்பாக இயக்குநர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் கதை சொன்னபோது நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைய இருந்தது. ப்ரவீன் ஷியாம் இருவரையும் கொஞ்சம் விட்டால் நம்மை குழப்பி விடுவார்கள். இது நான் லீனியரில் ஒரு மாறுபட்ட சைக்கோ திரில்லராக இருக்கும். வெற்றியின் திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். உங்களைப் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும்” என்றார்.
நாயகி பார்வதி அருண் பேசும்போது, “இதுதான் எனது முதல் தமிழ்ப் படம். ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு எல்லாமே காட்டில்தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சின்னதுதான். ஆனால் உங்களுக்குப் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
நடிகர் வெற்றி பேசும்போது, “8 தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடங்களாகப் பேசிக் கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன். ஆனால் நான்தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப் படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.
இயக்குநர் ப்ரவீன் பேசும்போது, “மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும்போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும்போது படம் எளிதாகப் புரியும். இந்தப் படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியத்தைத் தரும்” என்றார்.
இயக்குநர் ஷியாம் பேசும்போது, “நான் மலையாளி. தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர்களைத் தேடினபோது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ‘ஜீவி’ படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக் கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள்” என்றார்.