புதிது, புதிதாக அமைப்புகள் தோன்று தமிழக அரசியல் சூழலை கலக்கியடித்துக் கொண்டிருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த கி.வீரலட்சுமி என்ற பெண்மணி தமிழர் முன்னேற்றப் படை என்கிற அமைப்பைத் துவக்கி பல்வேறுவகையான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.
சமீபத்தில்கூட மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாளுடன் இணைந்து போராடினார். தமிழ், தமிழர் என்கிற கொள்கை முழக்கத்தோடு களத்தில் குதித்திருக்கும் இவர்களின் பார்வை இப்போது நடிகர் விஷால் மீது பாய்ந்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்றுவதற்கு செய்வோம் என்றும் செய்ய மாட்டோம் என்று தீர்மானமாகச் சொல்லாமல் புதிய நிர்வாகிகள் ஆளுக்கொரு செய்தியாக வெளியில் சொல்லி வருகிறார்கள்.
மேலும் தமிழகத்தின் அனைத்து வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் குறிப்பாக ஈழம், காவிரி நீர் போன்றவைகளுக்கு இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் தமிழ்த் திரையுலகமே ஒன்று திரண்டு போராடியது. இதில் நடிகர் சங்கமும் அடக்கம். இனிமேல் இது போன்ற பொதுப் பிரச்சினைகளுக்காக நடிகர் சங்கம் களத்தில் குதிக்காது என்று சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் கூறியிருந்தார்.
இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் நடிகர் விஷாலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழர் முன்னேற்ற படை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பின் தலைவி கி.வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கோரிக்கை மட்டுமன்றி, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கையான ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்பதை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உதாசீனப்படுத்தி பேசியதற்கு நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு அவர் சொன்ன கருத்தை திரும்ப பெற வேண்டும்.
‘தென்னிந்திய நடிகர் சங்க’த்தை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என்று உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
நடிகர் விஷால் காவேரி நதி நீர் பிரச்சினை மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ தலையிடாது என்று சொன்னதற்கு காவேரி நதி நீர் பிரச்சினைக்கு போராடிய விவசாயிகளிடமும் திரைத்துறையினரிடமும் மன்னிப்பு கோர வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு நடிகர் விஷால் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் முன்னேற்ற படையின் முற்றுகைப் போராட்டம் வரும் நவம்பர் 6-ம் தேதியன்று தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தின் எதிரிலும், நடிகர் விஷாலின் அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இடங்களிலும் நடைபெற இருக்கிறது..” என்று தெரிவித்துள்ளார்.
ச்சும்மா இருப்பவர்களை இப்படி உசுப்பிவிட்டே.. உசுப்பிவிட்டே….?