பெண்களுக்கு பெருமை சேர்க்கும்வகையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘தகவல்’. பெண்கள் ஆண்களின் செக்ஸ் தேவைக்காகவே, பாலியல் நுகர்வுக்காகவே படைக்கப்பட்டவள் அல்ல என்பதை வேறொரு கோணத்தில் சொல்கிறதாம் இந்தப் படம்.
சசீந்தரா என்ற மலையாள இயக்குநர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இது இவரது முதல் தமிழ்ப் படம். இவர் மலையாள இயக்குநர் பரதனிடம் 5 படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இதில்லாமல் 24 வேறு மலையாளப் படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றியவராம்.. இந்தப் படம் நேரடி தமிழ்ப் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று நண்பர்கள்.. அவர்களுக்கு ஒரு பெண்ணிடம் சிநேகம் உண்டு.. ஒரு சூழலில் அவர்களிடையே பரவும் ஒரு சின்ன செய்தியால் அந்த மூவரின் வாழ்க்கையும் திசை மாறுவதோடு, அந்தப் பெண்ணும் ஒரு வலியைச் சுமக்க வேண்டியதாகிறதாம்.. சமுதாயப் பிரச்சினையை மையமாக வைத்துதான் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். நாட்டில் தினம்தோறும் நடைபெற்று வரும் கற்பழிப்புச் சம்பவங்களை ஒழிக்க.. ஒரு முதன்மையான வழிமுறையை இந்தப் படத்தில் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர். பாலியல் கொடுமைகளைச் செய்வோருக்கு மன்னிப்பு என்ற வார்த்தை தேவைதானா என்கின்ற கேள்விக்குறியை இந்தப் படம் நிச்சயம் எழுப்பும் என்று உறுதியுடன் சொல்கிறார் இயக்குநர் சசீந்தரா.
இந்தப் படத்தில் தேஜா, ரிஷி, டிம்பிள், மயில்சாமி, ரிஷிபாவா, ரகு, ஜூபைல் ராஜ், சாம் ஜீவன், பிரபான்ச், ஸ்ரீஷா உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
படத்தில் நடித்திருக்கும் நடிகை டிம்பிள் படம் முழுவதும் கண் பார்வையற்றவராக மிக பிரமாதமாக தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறாராம். இதற்காக கண் பார்வையற்றவர்களிடத்தில் சென்று சில நாட்கள் பயிற்சியெடுத்து அவர்களைப் போலவே இயல்பாக நடித்துக் காண்பித்து இயக்குநரை அசத்தியிருக்கிறார் டிம்பிள். நிச்சயம் இந்தப் படத்தின் மூலமாக டிம்பிளுக்கு அவார்டு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறது இந்தப் படத்தின் டீம்.
சிபி ஜோஸப்பும் கிஷோர் ஆர்.சங்கரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். பி.சி.மோகனன் எடிட்டிங் செய்திருக்கிறார். சாஜித் தென்றல், ஜோதிஸ் இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். ஜித்து ஜோஸ் தயாரிக்க எழுதி, இயக்கியிருக்கிறார் சசீந்தரா.
படம் மதுரை, தேனி, கம்பம், உத்தமபாளையம் மற்றும் கேரளப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அச்சன்கோவில் அருகேயிருக்கும் மசாகனி என்னுமிடத்தில் தரைமட்டத்தில் இருந்து 380 அடி உயரமுள்ள ஓரிடத்தில் படமாக்கப்பட்டுள்ளதாம். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்க்கிறது..!