ராகதேவி புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரித்திருக்கும் படம் ‘தகடு.’
இந்தப் படத்தில் பிரபா மற்றும் அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். மற்றும் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், ஆர்.தீபக் ராஜ், மிப்பு, ராம் கிரண், பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எஸ்.கார்த்திகேயன், இசை – சார்லஸ் மெல்வின்.எம், பாடல்கள் – இளைய கம்பன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஷ், கலை – வி.சிவகுமார், சண்டை பயிற்சி – சூப்பர் குட் ஜீவா, நடனம் – அஜய் சிவசங்கர், ராக் சங்கர், தயாரிப்பு – ராகதேவி புரொடக்ஷன்ஸ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.தங்கதுரை
படம் பற்றி இயக்குநர் எம்.தங்கதுரை பேசும்போது, “தனது பேராசையால் உலகையே அடைய நினைத்த பல மன்னர்கள் உண்டு. ஆனால் பேராசை கொண்ட மன்னர்கள்தான் மண்ணோடு மண்ணாக போனார்களே ஒழிய, இன்றுவரை அந்த பேராசை என்னும் பெரும் பேய், ஏதோ ஒரு வடிவில் அழியாமல் உலாவி கொண்டுதான் இருக்கிறது.
அப்படி பேராசை கொண்ட ஒருவனோடு பயணிக்கும் கல்லூரி மாணவர்களின் ஒரு அசாத்தியமான பயணம்தான் இந்த ‘தகடு’ திரைப்படம்.
கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் பாடத்தில் வரும் ஒரு வரலாறு சம்மந்தப்பட்ட ஒரு இடத்தை தேடி போகிறார்கள். அப்போது அவர்கள் தேடி போனது கிடைக்காத சூழலில், முக்கியமான வேறு ஒன்றை பார்க்கிறார்கள்.. அது என்ன..? அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதும்தான் இந்த ‘தகடு’ படத்தின் திரைக்கதை.
இந்த படத்திற்காக ஆந்திராவில் உள்ள கங்குந்தி கோட்டை என்ற கோட்டையில் முதன்முறையாக படிப்பிடிப்பு நடத்தினோம். அங்கு யாரும் இதுவரை படிப்பிடிப்பு நடத்தியது கிடையாது. அந்த இடத்திற்கு கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும் அப்படி நடந்து சென்று கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம். மேலும் கிருஷ்ணகிரி, ஒகேனக்கல், சென்னை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது…” என்றார்.