இந்திய சமூகத்தில் மலிந்து கிடக்கிற காதலில்லாத திருமணங்களின் ஊடே, திருமணத்தில் இணைய முடியாத காதலர்களை பற்றிப் பேசும் திரைப்படம் ‘தடயம்’.
‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியான ‘தடயம்’ சிறுகதையே, இந்தப் படத்தின் கதைக் கரு என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக கனி குஸ்ருதி நடித்திருக்கிறார். ‘அபிநயா’ குழுவில் பயிற்சி பெற்ற இவர், 2000 முதல் 2006 வரை வசந்தசேனா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பாரத் ரங் மகோத்சவ்’ தேசிய திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்திருக்கிறார்.
நாயகனாக கணபதி முருகேசன் அறிமுகமாகிறார். நான்கு வருடங்கள் கூத்துப் பட்டறையில் முழுநேர நடிகராக இருந்த இவர், இருபதிற்கும் மேற்பட்ட தயாரிப்புகளில், 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
இசையமைப்பாளராக ஜஸ்டின் கெனன்யா அறிமுகமாகிறார். ப்ரவீன் பாஸ்கர் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
இத்திரைப்படத்தை, தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரான எழுத்தாளர் தமயந்தி எழுதி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர்கள் சமுத்திரகனி, மீரா கதிரவன், பரத் பாலா ஆகியோருடன் பணிபுரிந்திருக்கிறார். மேலும் பல மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் தமயந்தி, “தன்னைப் புரிந்து கொள்ள முடியாத தனது காதலனிடமிருந்து விலகினாலும் அவனது காதல் நினைவுகளிலேயே வாழ்ந்து, இப்போது தன்னந்தனியே படுத்த படுக்கையில் இருக்கும் கதாநாயகியை, அவளின் காதலன், ஒரு மழை நாளில் சந்திக்கிறான்.
அவள் வசிக்கும் குடிலில், அவன் நுழைகிறபோதே அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழையின் நடுவில். அந்த ஒற்றை அறைக்குள், அந்தக் காதலர்களின் சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக மாற்றித் தந்திருக்கும் திரைப்படம்தான் இந்த ‘தடயம்..” என்றார்.
ஒரேயொரு காட்சியிலேயே முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது என்பது இத்திரைப்படத்திற்கான தனிச் சிறப்பாகும்.
முழுக்க முழுக்க ‘கிரவுட் ஃபண்டிங்’ தயாரிப்பில் சுயாதீன திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த ‘தடயம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.