full screen background image

2 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு வசூலைக் குவிக்கும் தெலுங்கு படம்..!

2 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு வசூலைக் குவிக்கும் தெலுங்கு படம்..!

ஒரு குறும்படம் எடுக்கவே இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும். இதே தொகையில் ஒரு முழு நீள திரைப்படத்தையே எடுத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமில்லையா..?

புதுமை விரும்பியான ராம்கோபால்வர்மாதான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. சென்ற வெள்ளியன்று ஆந்திராவில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவொரு திகில், சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படம். இந்த “ஐஸ்க்ரீம்:” திரைப்படத்தின் பட்ஜெட் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 832 ரூபாய் என்கிறார் ராம்கோபால்வர்மா.

படத்தில் நடித்த நவ்திப், தேஜஸ்வி, சந்தீப்தி உள்பட எந்த நடிகர், நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லையாம். உடைகளைகூட நடிகர்களே அவர்களது வீட்டில் இருந்துதான் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். நடிகர்களை போலவே தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லையாம்.

இந்த படத்திற்கான செலவென்று பார்த்தால் ஷூட்டிங் எடுத்த வீட்டிற்குக் கொடுத்த வாடகைதானாம்.. அதுவும் மிகக் குறைவாம். அதோடு கேமிராகூட சாதாரணமானது என்கிறார் ராம்கோபால்வர்மா. கடைசியில் சில ஜிகினா வேலைகள் மட்டும் செய்யப்பட்டதாம்..

தற்போது இந்த படம் எதிர்பாராதவகையில் பெரும் வெற்றி பெற்று வசூலை குவித்திருப்பதால் இந்த படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ராம்கோபால்வர்மா.

இந்த படத்தின் வெற்றி விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் நிச்சயம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை பதிலுக்கு கிண்டல் செய்தார் ராம்கோபால்வர்மா. இதனால் கோபப்பட்ட மீடியாக்கள் இந்தப் படத்தை புறக்கணிப்பதாகச் சொல்ல.. பிரச்சினை தீவிரமானது..

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு டிவி சேனலில் இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திலும் பத்திரிகையாளர்களுக்கும், ராம்கோபால்வர்மாவுக்கும் இடையே முட்டல் மோதல் நடக்க பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

மேலும் இந்தப் படத்தின் ஹீரோயின் தேஜஸ்வாணி ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருப்பதாக ஒரு செய்தியை பட ரிலீஸூக்கு முன்பாகவே பரப்பியிருந்தனர். இதை நம்பி ஒரு கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து படத்தை பார்க்க.. படத்தில் அப்படியொரு காட்சியே இல்லையாம்.. ஆனாலும் படம் ராம்கோபால்வர்மாவின் ஸ்டைலிலேயே கவர்ச்சியுடனேயே இருக்க.. இயக்குநர் ஏமாற்றவில்லை என்று நம்பி படத்தை பார்த்திருக்கிறது ரசிகர் கூட்டம்.

ஆனால் இந்தப் படத்திற்கு அனைத்து பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஒட்டு மொத்தமாக 0 மார்க் கொடுத்து ராம்கோபால்வர்மாவுக்கு நோஸ் கட் கொடுத்துள்ளன.

இதனால் கடும்கோபத்தில் இருக்கும் ராம்கோபால்வர்மா “விமர்சனம் எழுதத் தெரியாதவர்கள்தான் இப்போது சினிமா பத்திரிகைகளில் விமர்சனம் எழுதுகிறார்கள்” என்று பதிலுக்குத் தாக்கியிருக்கிறார்.

இந்தச் சண்டை இரண்டு பக்கமும் மும்முரமாக நடந்து கொண்டிருக்க.. இந்த களேபரத்தில் தியேட்டர்களில் இந்தப் படத்திற்கு அமோக வசூலும் கிடைத்துக் கொண்டிருக்கிறதாம்..

விமர்சனம் பூஜ்யம்.. ஆனால் வசூல் அள்ளுது..!

என்னவொரு முரண்பாடு பாருங்கள்..!

Our Score