இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கும் மேல் பெற்றுக் கொடுத்த தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்ணும் இந்த சாந்தி செளந்தரராஜன்தான்.
2006-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பி பெறப்பட்டது.
இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகள போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். இவருடைய வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாக உருவாகிறது.
வீராங்கனை சாந்தியின் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, படமாக்கப்பட உள்ளது.
இத்திரைப்படத்திற்கு ‘சாந்தி செளந்தரராஜன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன்முறையாக தயாரிப்புத் துறையில் இறங்கி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தில், சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு துவங்கும் நாளன்று படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படும்.
ஒளிப்பதிவு – கோபிநாத் D.தேவ், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – சங்கத் தமிழன், கலை இயக்கம் – காளி, ப்ரேம் குமார், ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, ஒப்பனை – ரஞ்சித் அம்பாடி, உடை – ஜேம்ஸ் ஆப்ரஹாம், பாடல்கள் – யுகபாரதி, வசனம் – பொன்.பார்த்திபன்.
இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மாமாங்கம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இந்த ஜெயசீலன் தவப்புதல்வி, இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குநராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், கத்தார், ஓமான் போன்ற இடங்களிலும் நடைபெற உள்ளது.
பெண்களின் திறமை மற்றும் வலிமையையும், பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் படத்தின் பல காட்சிகள் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகிறது.