full screen background image

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக இரண்டு தயாரிப்பாளர் சங்கத்தினரும் ஒன்றிணைந்த கூட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்கினார்கள்.

இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  எந்தச் சங்கத்தில் சென்சாருக்கு அனுப்ப வேண்டிய அங்கீகாரக் கடிதம் பெறுவது முதற்கொண்டு சங்க உறுப்பினருக்கு பிரச்சினை என்றால் எந்தச் சங்கம் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்துவது என்பதுவரையிலும் பிரச்சினைகள் வெடித்தன.

இதனால் இதனை சரி செய்யும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைக் கருதி, ஒருங்கிணைந்த கூட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் கருதி செப்டம்பர் 17 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிவாகிகள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் இணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக இரண்டு சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு ’ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக் குழு(Joint Producers Committee or JPC)’ அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியின் முதல் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தற்போது தயாரிப்பில் உள்ள திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள படங்களின் வெளியீட்டிற்கு உதவுவது என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

விளம்பர செலவுகளை குறைப்பது குறித்தும், விபிஎஃப் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் முக்கைய முடிவுகள் எடுக்கப்படும்.

ஃபெப்சியுடன் பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒப்பந்தங்கள் செய்யப்படும்.

மேலும் ஒவ்வொரு மாதமும் இரு முறை இந்தக் குழுவினர் சந்தித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்கான செயல்பாடுகளை இணைந்து முடிவெடுத்து செயல்படுத்த உறுதி செய்யப்பட்டது…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவின் சார்பில் தமிழ்த் திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, கே.முரளிதரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளான முரளி ராமநாராயணன், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளான டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.லலீத்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score