திருட்டு விசிடி ஒழிப்பு மற்றும் பட வெளியீட்டுகளை முறைப்படுத்துதல் தொடர்பாக தமிழ்த் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பினர் வடபழனி, ராதாபார்க் ஹோட்டலில் இன்று மதியம் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வெளியிட்டனர்.
அத்தீர்மானங்கள் இவைகள்தான்..
1.தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் பல சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். ஆகவே, இனிமேல் குறிப்பிட்ட பத்து நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
பட வெளியீடுகளை முறைப்படுத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் ஆறு பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும்.
2. இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படும் படங்களை பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் துணை புரியும் வலைத்தளங்களை முடக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் முறையிடவும், சட்ட ரீதியாக அவைகளை முடக்கப் போராடுவது.
3. தமிழ்த் திரையுலகைக் காக்கவும், திருட்டு விசிடியை அடியோடு ஒழிக்கவும் 2004-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்த அம்மா அவர்களுக்கு இந்தக் குழு தனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
4. இடையில் தமிழகத்தில் ஆட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்களைத் தொடர்ந்து திருட்டு விசிடிக்கள் மீண்டும் தலையெடுத்து கரையான் வீட்டை அழிப்பது போல தமிழ்ச் சினிமாவை அழித்து வருகின்றன.
ஆகவே இந்த திருட்டு விசிடிக்களால் சினிமா உலகத்தையே நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர், நடிகைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் இவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் பேரணி ஒன்றை வரும் டிசம்பர் 2-ம் தேதியன்று நடத்தவுள்ளது குறித்து மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு கடிதம் ஒன்றை அளித்துள்ளோம்.
இந்தப் பேரணியின் முடிவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
5. இந்தத் திருட்டு விசிடி என்பது திரையுலகினர் அனைவரும் இணைந்து அழிக்க வேண்டிய தீய சக்தி என்பதால் இதில் இதனை ஒழிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு திருட்டு விசிடிக்களை விற்பவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டுமென ரஜினிகாந்த்-கமல்ஹாசன் முதல் இன்றுவரையிலான கதாநாயகர்கள்வரையிலும் அனைத்து நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுக்க வேண்டுமென்றும் இந்தக் குழு கோரிக்கை வைக்கிறது.