போற போக்கை பார்த்தா எல்லா தமிழ்ச் சினிமாவையும் இனிமேல் கோர்ட்டுதான் ரிலீஸ் செய்யும் போலிருக்கு.. டதிருமணம் என்னும் நிக்காஹ்ட படத்துக்கு தடை கேட்டு இன்றைக்கு கோர்ட் படியேறியிருக்கிறது ஒரு கூட்டம்..
சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான் இந்தப் படத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இந்த படம் நாளை(30–ம் தேதி) வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கொள்கை தவறாகவும், அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்தால், மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ‘வேலாயுதம்’ என்ற படத்தில் மன உணர்வுகளை புணப்படுத்தும் விதமாக காட்சிகளை எடுத்திருந்தார். தற்போது ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்திலும் முஸ்லிம் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ளார். எனவே ரவிச்சந்திரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20–ந் தேதியே புகார் செய்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை 30–ந் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்திரவிடவேண்டும்…”
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனர், சென்சார் வாரியத்தின் மண்டல அதிகாரி, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
படத்துக்குத் தடை விதிக்கப்படவில்லையென்றாலும் படம் நாளை வெளிவருவது சந்தேகம்தான்..! இப்படியே ஒவ்வொரு மதத்துக்காரங்களும் கேஸ் போட்டுக்கிட்டேயிருந்தா கடைசீல பெயரே இல்லாமல் மதக் குறியீடே இல்லாமல்தான் கல்யாணத்தையும், காட்சிகளையும் காட்டணும் போலிருக்கு..!
தமிழ்நாட்டில் ஜனநாயகம் சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டேயிருக்கிறது..!