நடிகர் வாராகி இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் ‘சிவா மனசில புஷ்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
அரசியல் களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ‘சிவா மனசில புஷ்பா’ படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இருவருமே நாயகன் வாராகியின் ஜோடியாக நடித்துள்ளனர். கே.ராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தவசிராஜ், விஜயகுமார், நியூஸ் 7 சுப்பையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – குவேரா, எடிட்டிங் – சதீஷ்குமார், இசை – அருணகிரி, பாடல்கள் – காதல் மதி, அஸ்மின், நடனம்: மஸ்தான், ராபர்ட், இணைத் தயாரிப்பு – சுஜிதா செல்வராஜ், மக்கள் தொடர்பு – எஸ் ஷங்கர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.
படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆகியோர் சந்தித்தனர்.
நடிகரும், இயக்குநருமான வாராகி படம் பற்றிக் கூறுகையில், “இதுவொரு அரசியல் படம். “ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது. மக்களை ஆளும் அரசியல்வாதிகள் இரட்டை வேடதாரிகளாக நாடகமாகக் கூடாது என்று சொல்ல எடுத்துள்ள படம். படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றிப் பெறும்…” என்றார்.
நாயகி ஷிவானி குரோவர் கூறுகையில், “நான் ஏற்கெனவே தமிழில் நடித்திருந்தாலும், ‘சிவா மனசில புஷ்பா’ எனக்கு முக்கியமான படம். என் பாத்திரம் என்னவென்று விளக்கமாக சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். இந்த வேடத்தில் நடிப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. எனது இயக்குநர் – ஹீரோ வாராகி அதைப் பார்த்துக் கொள்வார். அந்த அளவு துணிச்சலான மனிதர் அவர். மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார்…” என்றார்.
நாயகி ஜிஸ்மி கூறுகையில், “சிறு வயதிலிருந்தே மலையாளப் படங்களில் நடித்துள்ளேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு மிகப் பெரிய அறிமுகத்தைத் தந்துள்ளார் வாராகி. அவருக்கு மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நான் நடிப்பதை பார்த்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், இந்தப் படம் வெளியாகும்வரை நான் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறேன்.. இல்லை. அந்த அளவு இந்தப் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது…” என்றார்.