full screen background image

பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வரக் காத்திருக்கும் ‘சினம்’ படம்

பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வரக் காத்திருக்கும் ‘சினம்’ படம்

Movie Slides Pvt. Ltd நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜயகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் G.N.R.குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் சினம்’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கமலா தியேட்டரில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பல திரையுலக பிரபலங்களும், படத்தின் குழுவினரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினில் இயக்குர் ஹரி பேசும்போது, “படத்தின் டிரைலரை பார்த்தேன். அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.  படத்தின் கதைக் கரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும். இந்தப் படம் அனைவருக்கும் லாபம் தரக் கூடிய ஒன்றாக இருக்கும்.” என்றார்.

இயக்குநர் அறிவழகன் பேசும்போது, “அருண் விஜய்யின் அர்ப்பணிப்பு அபாரமானது, அவர் எல்லாவற்றில் முழு கவனத்துடன் செயல்பட கூடிய நபர். இந்தப் படத்திலும் தனது முழு உழைப்பை தந்துள்ளார். விஜயகுமார் சார் இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளார். அதற்கு எனது வாழ்த்துகள். இயக்குநர் குமரவேலன் திறமையான நபர். அவருடைய முந்தைய படங்கள் அவருடைய ஆழமான கதையமைப்பை வெளிகாட்டியது. ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் விஷுவலை பார்க்க நான் காத்திருக்கிறேன். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள்..” என்றார்.

நடிகர் சாந்தனு பேசும்போது, “அருண் விஜய்யின் பயணம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும்  ஒன்று. தன்னுடைய திறமையையும், அதையும் தாண்டி  கடின உழைப்பை கொடுத்து தனக்கென தனிப் பாதையை உருவாக்கியுள்ளார். அது திரைத்துறையில் எளிதானதல்ல. விஜயகுமார் சார் தன்னுடைய மகனுக்காக பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும். படத்தின் டிரைலர் சிறப்பாக இருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “நடிகர் அருண் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்குக் கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, அவருடைய பாடும் திறமையை பாராட்டியே ஆக வேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்கு தெரியாது. இயக்குநர் குமரவேலன் திறமையான இயக்குநர். அவருடன் மூன்று படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும்கூட. அவர் இந்தப் படத்தில் சிறப்பான  பணியை கொடுத்துள்ளார்..” என்றார்.  

இயக்குநர் மகிழ் திருமேனி பேசும்போது, “அருண் விஜய் இப்பொழுது பெரிய வெற்றியை அடைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரக் கூடியது. அவர் மிகச் சிறந்த நடிகர் என்பது அவருடைய அனைத்து வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பில் தெளிவாக தெரிகிறது. விஜயகுமார் சார் மிகவும் திறமை வாய்ந்த அதே நேரத்தில் மனிதநேயம் மிக்க ஒரு நபர். இயக்குநர் குமரவேலனுடைய அனைத்து படங்களையும் அவருடைய ரசிகர் போல் பார்ப்பவன் நான். இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

நடிகர் பிரசன்னா பேசும்போது, “பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தைதான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமரவேலனின் திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக் குழுவிற்கு எனது வாழ்த்துகள்..” என்றார்.

இயக்குநர் பார்த்திபன் பேசும்போது, “அருண் விஜய் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது. அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர். இசையமைப்பாளர் சபீர் உடைய பாடல் மயக்கும் அளவில் இருக்கிறது. தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எனது வாழ்த்துகள்.” என்றார்.

இசையமைப்பாளர் சபீர் பேசும்போது, “மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன்தான் பணியாற்றியுள்ளோம். அருண் விஜய் சார் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்த பாடல் சுலபமானது அல்ல. அது தொழில் முறை ஆட்களால் மட்டுமே உணர்வுடன் வெளிகாட்ட முடியும், அதை அவர் கொடுத்தார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் கதையோடு சேர்ந்து பயணிக்கும்படி இருக்கும். இயக்குநர் குமரவேலன், ஆக்‌ஷன், எமோஷன், அதே நேரத்தில் சமூகத்துடன் சார்ந்து நிற்கும் திரைப்படத்தை உருவாக்க கூடியவர். அவருடன் பணி புரிந்தது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும்.” என்றார்.

நடிகை பாலக் லால்வாணி பேசும்போது, “இது என்னுடைய தமிழ் பேச்சு. மொழி தெரியாமல் எப்படி தமிழ் படத்தில் நடிக்கிறன்னு எல்லோரும் கேட்பார்கள். உணர்வுக்கு மொழி கிடையாது. இந்தப் படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. அதனால்தான் இந்த வாய்ப்பு வந்தபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். என் மேல் நம்பிக்கை வைத்த இயக்குநர், அருண் விஜய் மற்றும் விஜயகுமார் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் மிக நல்ல படம். தியேட்டரில் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்..” என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசும்போது, “இந்தப் படம் தியேட்டரில்தான் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புபடுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரமாக காளி வெங்கட் கதாபாத்திரம் இருக்கும்.

எனது முந்தைய யானை’ படத்திற்கும், இந்தப் படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்தப் படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கிறது. தை உருவாக்கிய இயக்குநர் குமரவேலனுக்கு நன்றி.

இந்தப் படத்தை தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்…“ என்றார்.

இயக்குநர் G.N.R.குமரவேலன் பேசும்போது, “என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களையும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.

இந்தப் படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே சொன்னார்.

விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன் பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது.

கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.” என்றார்.

Our Score