தென்னிந்திய சினிமாவில் ‘வெள்ளி விழா நாயகன்’ என்று அனைவராலும் பாராட்டு பெற்ற நடிகர் மோகன் மீண்டும் நடிக்க வருகிறார்.
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் விஜயஸ்ரீ இயக்கவிருக்கும் ‘ஹரா’ என்ற படத்தில்தான் மோகன் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
1977-ம் ஆண்டு ‘கோகிலா’ என்ற கன்னடப் படத்தின் வாயிலாக திரையுலத்திற்கு அறிமுகமான மோகன் 1980-ம் ஆண்டு பாலு மகேந்திராவின் ‘மூடு பனி’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
அன்றிலிருந்து 20 வருடங்கள் 2000-ம் வருடம்வரையிலும் தமிழ்த் திரையுலகத்தில் கொடி கட்டிப் பறந்தார். 3 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சில்வர் ஜூப்ளி படத்தைக் கொடுத்து வந்ததால் வெள்ளி விழா நாயகன் என்றே மோகனை அழைத்தார்கள்.
கால ஓட்டத்தில் மோகனுக்கும் வாய்ப்புகள் குறையவே கடைசியாக 2008-ம் ஆண்டு சுட்ட பழம் என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்த கையோடு திரையுலகத்தில் இருந்து ஒதுங்கியிருந்தார் மோகன்.
தமிழில் பல நல்ல வாய்ப்புகள் வந்தும் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் இல்லை என்று மறுத்துவிட்டார். தற்போதுதான் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் மோகன்.
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் விஜயஸ்ரீ இயக்கவிருக்கும் ‘ஹரா’ என்ற படத்தில்தான் மோகன், கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
இந்த ‘ஹரா’ திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியாவின் ஜெயஸ்ரீ விஜய் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
நல்ல கதாபாத்திரம் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியோடு இருந்த மோகன், தனக்கு வந்த குணச்சித்திர வேடங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு காத்திருந்தார்.
தற்போது இயக்குநர் விஜயஸ்ரீயிடம் கதையைக் கேட்டவுடன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது இத்தனை வருட காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது என்று பூரித்துப் போனார் மோகன்.
இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்படும்.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐ.பி.சி. சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.
இப்படம் குறித்த மேலும் பல சுவாரசிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்.