full screen background image

“சிலம்பம் கலை பெரிய அளவில் வளர்ந்ததற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம்” – ‘சிலம்பம்’ பட விழாவில் பவர் பாண்டி மாஸ்டர் பேச்சு!

“சிலம்பம் கலை பெரிய அளவில் வளர்ந்ததற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம்” – ‘சிலம்பம்’ பட விழாவில் பவர் பாண்டி மாஸ்டர் பேச்சு!

லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளரான  ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய  திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள்.

டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு  குமார்.M ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் சார்லஸ் படத் தொகுப்பு செய்ய, கென்னடி நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.  பொன்னேரி புயல் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.  இணை இயக்குநராக ஏ.அருண்குமார் பணியாற்ற, தயாரிப்பு நிர்வாகியாக கோவிந்தராஜ் பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 16-ம் தேதி சென்னை பிரசாத் லேபில் கோலாகலமாக நடைபெற்றது.

ந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர் பாண்டியன், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் கூல் சுரேஷ், ஸ்டண்ட் யூனியன் தலைவர் கே.அசோக், செயலாளர் சுகுமார், பொருளாளர் ஜான், இயக்குநர் ரவி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றி பேசிய இணை இயக்குநர் அருண்குமார் பேசுகையில், “திசை எங்கும் தமிழர்களின் வெற்றி தீ பரவும் சூழலில்,  ஒழுக்கத்திற்கும், வீரத்திற்கும் அடையாளச் சின்னமாக விளங்கும் நமது பாரம்பரிய கலையான சிலம்பம் கலையை போற்றும் விதமாகவும், அதை மாணவர்களிடையே ஊக்குவிக்கும்விதமாகவும், தயாரிப்பாளரான ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி அவர்களது இயக்கத்தில் உருவான ‘சிலம்பம்’ திரைப்பட விழாவுக்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வருக வருக என சிலம்பம் திரைப்பட குழு சார்பில் அன்போடு வரவேற்கிறோம்.” என்றார்.

படத்தின் இயக்குநர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி பேசுகையில், “இந்தப் படத்தில் நிறைய சிலம்பம் மாஸ்டர்களை வச்சி பண்ணியிருக்கோம். எழில் மாஸ்டர் அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார், ஆதம்பாக்கம் துரை மாஸ்டர், ஜோதி மாஸ்டர் ஆகியோர் அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

எனக்கும் ஆசான் பவர் பாண்டியன் மாஸ்டர்தான். என் பிள்ளைகளுக்கும் ஆசான் அவர்தான். இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஹீரோக்கள் அவரிடம் தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் மிகப் பெரிய இடத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஸ்டண்ட் யூனியனில் இருக்கும் சுமார் 600 பேர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான்.

அப்படி ஒருவரிடம் நாங்களும் பயிற்சி பெற்றது பெருமை. ஒழுக்கம் என்ற பாடத்தை அவரிடம் தான் படிக்க வேண்டும். சிலம்பம் என்றாலே ஒழுக்கம்தான், அதையே மிக ஒழுக்கமாக சொல்லிக் கொடுப்பார். அவரை வணங்குகிறேன்.

இந்தப் படத்தில் சிலம்பம் பயிற்சி பெற்ற 300 பேரை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சிலர் ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவார்கள், அதை தவிர்த்துவிட்டு தமிழில் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறோம். 

ஒரு காலத்தில், கராத்தே, பாக்ஸிங் பயிற்சிக்கு பிள்ளைகளை தந்தைகள் அழைத்துச் செல்வார்கள், ஆனால், இப்போது சிலம்பம் பயிற்சிக்கு பிள்ளைகளை அவர்களது தாய்மார்கள்தான் அழைத்துச் செல்கிறார்கள். பயிற்சி முடியும்வரை அவர்கள் உடன் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிலம்பம் மீது மக்களுக்கு ஆர்வம் வந்துவிட்டது. இன்று தெருவுக்கு நூறு பேர் சிலம்பம் பயிற்சி பெறுகிறார்கள். இந்தியா அளவில் சிலம்பம் வளர்ந்து இருப்பதோடு, சிலம்பம் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் அளவுக்கு இந்த கலை உயர்ந்திருக்கிறது.

இந்தப் படத்தின் கதையில் படை பலம், பணம் பலம், அதிகார பலம் அனைத்தையும் வெல்லுகின்ற ஆசானாக சிலம்பரசன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். எப்போ நான் கேமரா முன்பு நிற்பேன்… எப்போது பேட்டி கொடுப்பேன் என்று ஏங்கியிருக்கிறேன். சத்தம் போட்டு கத்தியிருக்கிறேன். அப்போது என் மனைவிதான் ஊக்கம் கொடுத்து, ஒரு நாள் நீங்க, கேமரா முன்பு நிற்பீர்கள் என்று நம்பிக்கை கொடுப்பார், அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், நாங்கள் நினைத்ததுபோல் படம் சிறப்பாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்களும், ஊடகத்தினரும் நினைத்தால்தான் எங்களை வெளியே மக்களிடையே தெரிய வைக்க முடியும். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிலம்பம் பற்றி பல விசயங்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். நீங்கள் அனைவரும் திரையரங்கில் படத்தை பார்க்க வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் டி பேசுகையில், “என்னுடைய பெயர் விக்ரம் உதயவர்மன், விக்ரம் வர்மன் என்றுதான் என்னை இண்டஸ்ட்ரில தெரியும். தி என்பது என்னுடைய புதிய பிராண்ட். நான் அதிகமாக கன்னடம் மற்றும் இந்தி படங்கள் பண்ணிட்டு இருக்கேன். இப்போது அதிகமாக கன்னட படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அதனால் அங்கு செட்டில் ஆகிவிட்டேன்.

ஜோதி சார் நான்தான் இசையமைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதனால், இங்க இருக்கும் என் நண்பர்கள், கலைஞர்களுக்கு திறமை இருந்தாலும் வேலை சரியாக கிடைப்பதில்லை. அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும், என்று நினைத்து இங்கு இருக்கும் என் நண்பர்களை ஒன்றினைத்து தி என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளோம்.

இந்த படத்தின் இசைக்காக தி-யின் வேலை அதிகமாக இருக்கு. இந்த நேரத்தில் இந்தப் படத்தின் இசை உருவாவதற்கு உருதுணையாக இருந்த என் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகி மெளனிகா ரெட்டி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், ஊடகத்தினருக்கு நன்றி. உங்கள் ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம். எனக்கு இந்த அருமையான வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஜோதி சாருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. பாடல்களும், டிரைலரும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.’ என்றார்.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஜி.வி.எம்.குமார் பேசுகையில், “சிலம்பம் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் பிரபலங்கள், படத்தின் இயக்குநர் ஜோதி அவர்கள், கதாநாயகன், கதாநாயகி அனைவருக்கும் பணிவான வணக்கம். ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவது என்பது குழந்தை பெற்றெடுப்பதற்கு சமம். சினிமா பாதை பூக்களால் ஆனது அல்ல, கஷ்ட்டங்களும், துரோகங்களும் நிறைந்தது. அத்தகைய பாதையில் பயணித்து, இன்று வெற்றி பெற்றிருக்கும் ஜோதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

நடிகை சுமா தேவி பேசுகையில், “நான் மலையாள நடிகை, எனக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும். சிலம்பம் தான் எனக்கு முதல் படம். என் சகோதருக்கு ஜோதி மாஸ்டர் நண்பர், அதன் மூலமாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. 14 வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வருகிறேன். இப்போது எனக்கு தமிழ்ப் படத்தில் வாய்ப்பு கொடுத்த ஜோதி மாஸ்டருக்கு நன்றி.” என்றார்.

ஆசான் பவர் பாண்டியன் பேசுகையில், “சிலம்பம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். பாடல்கள் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள சிலம்பம் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. நீங்க, அனைவரும் பல திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்கள். இந்த சிலம்பம்’ படம் எங்கள் ஸ்டண்ட் யூனியனுக்கு மிக முக்கியமான படம், எங்கள் யூனியன் இந்தப் படத்திற்கு ஒரு முன்னோடி என்று சொல்லலாம்.

1980 ஆம் ஆண்டு, உலகத் தமிழ் மாநாட்டில், டேவிட் மேனவ்ராய் என்பவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இடம் ஒரு புத்தகம் கொடுக்கிறார். சிலம்பம் மற்றும் பென்சிங், சிலம்பம் என்ற புத்தகத்தை கொடுக்கிறார். அதை புரட்சித் தலைவர் வாங்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டார்.

என்ன.. இதைப் பற்றி எதுவும் பேசவில்லை, சொல்லவில்லை என்று அவர் நினைத்தார். ஒரு வாரம் கழித்து புரட்சித் தலைவர் புத்தகத்தை எழுதியவரை அழைக்கிறார். அவரிடம் “இந்தப் புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். இந்தக் கலை ஏன் விளையாட்டாக மாறக் கூடாது?.. என்று கேட்டிருக்கிறார். அதன் பிறகுதான் தற்காப்பு கலையாகவும், வீர விளையாட்டாகவும் இருந்த சிலம்பம் விளையாட்டாக உருவம் பெற்றது. இதுதான் சிலம்பம் விளையாட்டின் வரலாறு. 

பிறகு டேவிட் மேனவ்ராய் மூலம் தமிழ்நாடு சிலம்பம் கலை சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, இந்த விளையாட்டு வளர்க்கப்பட்டது. பிறகு 2006-ம் ஆண்டு டாக்டர்.கலைஞர்கள் அவர்கள் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சிலம்பம் விளையாட்டை சேர்த்தார். எனவே, இந்த கலை வளர அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கு உண்டு.

அப்படி ஒரு விளையாட்டில், ஜோதியின் பிள்ளைகள் மாநில அளவில் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இந்தப் படத்தின் கதை.

சிலம்பம் விளையாட்டின் வரலாறு 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  அதேபோல், எங்கள் ஸ்டண்ட் யூனியன் மூலமாகவும் சிலம்பம் கலை வளர்ந்தது. சிலம்பம் கலை வழி வழியாக வளர்ந்து வந்தாலும், அதை உயிருப்புடன் வைத்திருப்பது எங்கள் ஸ்டண்ட் யூனியன்தான்.

சிலம்பம் கலையை சினிமாவில் சிறப்பான பயன்படுத்தி, அதை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து சென்றவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான். சிலம்பம் கலை இன்று இவ்வளவு பெரிய அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான். இதை நான் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

சிலம்பம் நம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கிறது. அப்படிப்பட்ட சிலம்பம் பற்றிய இந்தப் படம் நிச்சயம் மக்களிடையே சென்றடையும். சிலம்பம் கலைக்கு அமெரிககாவில் இருக்கும் தற்காப்பு கலைகளின் அமைப்பு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது, ஆனால் இங்கு அந்த கலை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. எனவே, இந்த படம் வெளியான பிறகு சிலம்பம் கலை பற்றி இதுவரை தெரியாத விசயங்கள் தெரிய வரும், நன்றி.” என்றார்.

ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் பேசுகையில், “நாங்கள் அனைவரும் பவர் பாண்டி மாஸ்டரின் மாணவர்கள், அவர் சொன்னது அனைவரும் உண்மை, அதை நாங்கள் நேரில் பார்த்து வளர்ந்திருக்கிறோம். மாஸ்டரிடம் ஒழுக்கம் முக்கியம் என்று சொல்வார்கள், அதை கற்றுக் கொண்டதால்தான் நாங்கள் இன்று ஒரு இடத்தில் நிற்கிறோம்.

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலர் இந்த வெற்றி பெற்றதற்கு அவர் கற்றுக் கொடுத்த ஒழுக்கம்தான். பொன்னேரி புழழ் ஜோதி அண்ணன் என்று சொல்வார்கள். அவருக்கு அது சரியான பெயர், அவருக்கு அங்கே ஒரு பவர் இருக்கு. அவர் தான் கற்றுக்கொண்டதை, நான் பட்ட வலியை சொல்ல வேண்டும் என்றுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

அவரது பிள்ளைகளையும் கடுமையாக உழைக்க வைத்திருக்கிறார். பசங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்த தம்பி அஜித்துக்கும், வில்லனாக நடித்த ஹரிஷுக்கும் என் வாழ்த்துகள்.

டிரைலர் சிறப்பாக இருக்கு. வசனங்களும் சிறப்பாக இருக்கு. பாடல்களும்  சிறப்பாக இருக்கு, இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். நன்றி.” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “இந்த கை தட்டல்கள் அனைத்தும், சிலம்பம் படத்தின் டீமுக்குத்தான் சேரும். இங்கு நான் வரலாமா.. வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். பிறகு பி.ஆர்.ஓ. கார்த்திதான் சிறிய படம். ஸ்டண்ட் மாஸ்டர் பண்ணியிருக்காங்க. நீங்க வர வேண்டும்” என்று சொன்னார்.

பிறகுதான் ஜோதி சாரிடம் பேசினேன். எவ்வளவு பேருக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். இவருக்கும் கொடுப்போம் என்று வந்தேன். இந்த படத்தில் ”கலையை காசாக்க சொல்றீங்களா” என்ற வசனம் இருக்கு, சிறப்பான வசனம்.

இந்தப் படத்தின் கதாநாயகனின் பெயர் அஜித். அஜித் சாரை வைத்து ஹிட் கொடுத்த பேரரசு சார் வந்திருக்கிறார். அதனால், அஜித், அஜித் சார் இடத்திற்கு போறீயோ இல்லையோ, அஜித் சார் இடத்தை நீங்கள் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வில்லனாக நடித்திருக்கும் ஹரீஷ் நீங்களும் பெரிய இடத்துக்கு செல்ல வேண்டும். கதாநாயகி மெளனிகா ரெட்டி, என்னை யார் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். என் பெயர் என்ன என்று கேட்டுவிட்டார்கள். இருந்தாலும் அவங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நான் பேசும்போது அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள், அதனால் இந்தப் படத்தின் வெற்றி விழாவை விஜய் சார் முதல்வராக பதவியேற்ற நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற வேண்டும்.

விஜய் சார் ஆட்சி அமைத்துவிட்டார்கள், அவருக்கு ஜோதிடம் பார்ப்பவருக்கு ஒரு பதவி கொடுத்தார், அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த ஆட்சியில் ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டுமென்றால் அது பேரரசு ஸாருக்குத்தான்.

காரணம், 15 ஆண்டுகளுக்கு முன்பே விஜய் சாரின் அரசியல் நுழைவைக் கணித்தவர் பேரரசு சார்தான். அதனால் விஜய் சாருக்கு ஒரு அன்பான வேண்டுகோள், நீங்கள் பேரரசு சாருக்கு அரசு பதவி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.. அவருக்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், அமைச்சர் ராஜ்மோகன் சார் நிகழ்ச்சி ஒன்றில் என் ஆடை நன்றாக இருக்கிறது என்று என்னை பாராட்டினார். அந்த வீடியோவும் இப்போது வைரலானது. அதில் பலர் கமெண்ட் தெரிவித்தனர். அதில் சிலது தவறாக இருந்தது. அதற்கு நான் பதில் சொல்கிறேன்.

நீங்கதான் டிவிகே வேண்டும் என்று ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிங்க.. இப்போ அவங்களை நீங்களே குறை சொன்னால் எப்படி? ராஜ்மோகன் சாருக்கு என்ன குறை? அவரை ஏன் குறை சொல்றீங்க? உங்கள் மனநிலை என்னவென்று புரியவில்லை. 

டிவிகே எம்.எல்.ஏ,க்கள் அனைவரும் படித்தவர்கள், ஆனால் அவர்களை கமெண்டில் ஒருமையில் பேசுகிறீர்கள், இது நியாயமா? மைக் முன்னாடி நிற்பது அவங்க நோக்கமல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் அவங்களது நோக்கம்.

எனவே ஐந்து வருடத்திற்கு பொறுமையாக இருந்து, என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டு, சிலம்பம் படக் குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம், திரும்ப வாங்கிடுவாங்க. ஏற்கனவே ஜோதிடருக்கு கொடுத்து புடுங்கிட்டாங்க, இருந்தாலும் கூல் சுரேஷின் அக்கறைக்கு நன்றி.

பாண்டியன் மாஸ்டர் குருகுலம் போல்! அங்கு போகாமல் யாராலும் ஸ்டண்ட் யூனியனுக்கு வர முடியாது. உங்களது பாசம் இந்த மேடையில் தெரிகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் இயக்குநராவதை பாராட்ட வந்திருக்கிறீர்கள்.

நன்றி. பொன்னேரி புழல் ஜோதி, நல்ல பட்டம் தான். நல்ல இயக்குநராக நிற்பதைவிட நல்ல தகப்பனாக நிற்கிறார். அவர் பையனை ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்க வைத்திருக்கிறார்.  திருவண்ணமாலை ஜோதி போல் பவர்புல்லாக இருக்க வேண்டும்.

இந்தியில் பெரிய ஸ்டண்ட் மாஸ்டரான வீர் தேவ்கன், தன் மகன் அஜய் தேவகனை ஹீரோவாக்கினார். அந்தப் படம் பெரிய ஹிட், இன்றும் இந்தியில் அஜய் தேவ்கான் பெரிய ஹீரோதான். இந்த மேடையை பார்க்கும்போது ஜோதி, வீர் தேவ்கானாக தெரிகிறார்.

கூல் சுரேஷ் விஜய் சார் கிட்ட வேண்டுகோள் வைத்ததுபோல், நான் அஜித் சாரிடம் வேண்டுகோள் வைக்கிறேன், நீங்க ரொம்ப கேப் விடாதீர்கள். விட்டா வேறு யாராவது வந்துடுவாங்க. அஜித் சார், கார் ரேஸை சீக்கிரம் முடித்துவிட்டு, திரும்ப வந்துடுங்க, படத்தை ஆர்ம்பிச்சுடுங்க, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேடையில் இரண்டு பெண்கள் சிலம்பம் செய்தார்கள். அது சிறப்பாக இருந்தது. ஒரு காலத்தில் சிலம்பு பெண்களின் கால்களில் இருந்தது, இன்று கைகளில் வந்துவிட்டது. பெண்கள் சிலம்பத்தை சுழற்றுவது பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி சொன்னார்கள். ஆக்‌ஷன் என்றாலே எங்களுக்கு தலைவர் நினைவுதான் வரும். புரட்சித் தலைவர் ஆக்‌ஷன் ஹீரோ. அதற்கு பெப்ஸி விஜயன் மாஸ்டரின் அப்பாதான் காரணம். அதன் பிறகு பெப்ஸி மாஸ்டர் விஜயகாந்துக்கும் மாஸ்டராக இருந்தார். அவர் அரசியலில் ஜெயித்தார். பிறகு விஜய்க்கு மாஸ்டராக இருந்தார். இன்று அவர் முதல்வராகி விட்டார்.

ஒரு குடும்பம் இரண்டு முதல்வர்கள் வர காரணமாக இருந்திருக்கிறது. அனைத்து நடிகர்களாலும் அரசியலில் ஜெயிக்க முடியாது. ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தால்தான் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் சினிமாவின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ எம்.ஜி.ஆர். அவர் முதல்வராகி விட்டார். பிறகு விஜயகாந்த் ஆக்‌ஷன் ஹீரோ. அவர் அரசியலில் ஜெயித்து எதிர்கட்சித் தலைவர் ஆகிவிட்டார். இப்போது  விஜய் ஆக்‌ஷன் ஹீரோ. அவரும் முதல்வராகி விட்டார்.

ஆக மொத்தம், ஒரு நடிகர் அரசியலில் வெற்றி பெற ஆக்‌ஷன் ஹீரோ என்பதுதான் அடிப்படை. அப்படிப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோக்களை உருவாக்குவது இந்த ஸ்டண்ட் மாஸ்டார்கள்தான்.  நான் உட்கார்ந்திருக்கும் நான்கு கால் நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், என்ரு எம்.ஜி.ஆர் சொன்னார். ஒரு கால் பைட் மாஸ்டர்கள் என்று சொல்ல மறந்துவிட்டார். அதுபோல் விஜயின் முதல்வர் நாற்காலியில் ஒரு கால் ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான், அவர்களுக்கு நன்றி.

பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. இசையமைப்பாளர் தி’க்கு பாராட்டு. அவர் பேசிய விதம் நன்றாக இருந்தது. இந்த இசைக்கு நான் மட்டும் பொறுப்பல்ல; பலர் இருக்கிறார்கள் என்று சொன்னார். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

‘கனா’ படத்தில் கிரிக்கெட் வீராங்கனையை சிவகார்த்திகேயன் உருவாக்கி வெற்றி பெற வைப்பார். பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளை விஜய் சார் உருவாக்குவார். இப்படி பல விளையாட்டு படங்கள் வந்திருக்கு, ஆனால் பெண்களை உருவாக்கி வெற்றி பெற வைக்கும் படம்தான் இந்த ‘சிலம்பம்’.

எப்படிகனா’, ‘பிகில்’ படங்கள் வெற்றி பெற்றதோ அதுபோல் ‘சிலம்பம்’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் மோகன்.ஜி பேசுகையில், “ஒரு ஸ்டண்ட் கலைஞர், இயக்குநர் ஆவது சாதாரண விசயம் அல்ல. அது பெரிய முயற்சி. அதற்கு துணையாக இருக்க வேண்டும் என்றுதான் இங்கே வந்தேன். சிலம்பம் குழுவுக்கு என் வாழ்த்துகள். டிரைலர் பார்த்தேன்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த தமிழகத்தில் இருந்த கலாச்சார நிகழ்வுகள் இப்போதும் நம்மை விட்டு விலகாமல் இருக்கு. அதில் ஒன்றுதான் சிலம்பம். இதற்கு தலைவர் முருகன் கடவுள்தான். சிலம்பம் கலையில் நடக்கும் அரசியல் உள்ளிட்ட பல விசயங்களை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், இதற்கு வாழ்த்துகள்.

‘சிலம்பம்’ விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால் அரசு வேலை இருக்கிறது. இது எத்தனை மாணவர்களுக்கு தெரியும், என்று தெரியவில்லை. சிலம்பம் மிக முக்கியமான விசயம், இந்தத் தகவல் ‘திரெளபதி’ படம் பண்ணும் போதுதான்  எனக்குத் தெரிந்தது. அதற்கு பாண்டியன் மாஸ்டர்தான் பயிற்சி கொடுத்தார்.

மாஸ்டர் திரெளபதி-2’ பற்றி கவலை தெரிவித்தார். அது என் தவறுதான். வெளியீட்டு தேதி தவறாக அமைந்துவிட்டது. இப்போது சினிமா இன்புளுயன்ஸர்களிடம் சென்றுவிட்டது. யார் படம் ஓடணும்; ஓடக் கூடாது என்பதை அவர்கள்தான் இன்று முடிவு செய்கிறார்கள்.

முன்பெல்லாம் ஊடகத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் நல்ல விமர்சனங்கள் கொடுத்து படங்களை ஜெயிக்க வைத்தார்கள், இன்று சோசியல் மீடியா இன்புளுயன்ஸர்கிட்ட சென்று விட்டது. சில படங்களை முடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து விடுகிறார்கள், அப்படித்தான் எனக்கும் நடந்தது.

ஆனால், ஓடிடியில் திரெளபதி-2’ படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன். இன்று மத்திய அரசின் ஓடிடி ஒன்று இருக்கிறது. அதில் பணம் கொடுக்க மாட்டார்கள், ஆனால் அனைத்து படங்களையும் அதில் ஒளிபரப்பு செய்யலாம்.

அதுபோல், தமிழ் சினிமாவுக்கு என்று பிரேத்யமான ஒரு ஒடிடி உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் சாரிடம் கோரிக்கை வைக்கிறேன். மத்திய அரசு ஓடிடி நடத்தும் போது தமிழ்நாட்டு அரசால் செய்ய முடியாதா..?

காரணம், ‘சிலம்பம்’ போன்ற படங்கள் ஓடிடியில் வெளியிட கஷ்டப்பட வேண்டும், அதிலும் ஒரு அரசியல் இருக்கு. இதற்காக யாரும் கவலைப்பட மாட்ராங்க. தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கங்களும் இதைப் பற்றி பேசுவதில்லை.

கியூபும் அப்படித்தான். சிறிய படங்களுக்கு பெரிய கட்டணம் கட்ட வேண்டிய தேவை இல்லை. இருந்தாலும் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சிறிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு 30 லட்சம் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. 100 தியேட்டருக்குள் வெளியாகும் படங்களுக்கு அரசு ஒரு மானியம் கொடுக்க வேண்டும்.

இங்கு நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வது மகிழ்ச்சியாக இருக்காது. எனவே தமிழ்நாடு அரசு ஒடிடி ஒன்றை உருவாக்கி சிறு முதலீட்டார்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சோசியல் மீடியா இன்புளுயன்ஸர் பெரிய குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத அவர்கள் ஒரு படத்தை ஓடாமல் செய்ய பெரிய வேலை செய்கிறார்கள். பணத்திற்காக அவர்கள் இதை செய்துக் கொண்டிருக்கிறார்கள். என் படத்திற்கும் அவர்களால்தான் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தமிழ்நாடு அரசு பிரேத்யமாக ஒடிடி ஒன்றை உருவாக்கி, சிறிய படங்களை வாழ வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, இந்த ‘சிலம்பம்’ படத்தில் பணியாற்றியவர்கள் வெற்றி பெற வேண்டும். எனவே இதுபோன்ற சிறிய படங்களுக்கு சிறிய கட்டணம் வாங்கிக் கொண்டு சோசியல் மீடியா இன்புளுயன்ஸர் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சிலம்பம்’ படமும், படத்தில் பணியாற்றியவர்களும் பெரிய வெற்றி பெற வேண்டும்… நன்றி.” என்றார்.

பெப்ஸி விஜயன் பேசுகையில், “சிலம்பம் படத்தின் நாயகி மெளனிகா, மோனிகா பாடல் போல் ஹிட்டாக வேண்டும். நாயகன் அஜித் படத்தில் சிலம்பத்தை சுழற்றுகிறார். பெரிய இடத்திற்கு செல்வார். எங்கள் அருமைக்குரிய இயக்குநர் ஜோதி மற்றும் என் அருமை சகாக்களே அனைவருக்கும் வாழ்த்துகள்.

உண்மையாகவே வெள்ளைக்காரன் இந்தியா மீது படையெடுத்து வந்தது கருப்பு தங்கம் மிளகிற்காகதான். மிளகு கேரளாவில் இருந்துதான் வந்தது என்று சொல்வார்கள். இல்லை.. தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தது.

அப்போது அவர்களிடம் இருந்து மிளகை காப்பாற்றுவதற்காக மூங்கிலை உடைத்து சுழற்று சுழற்று என்று சுத்தினதுதான் சிலம்பம். இதுதான் சிலம்பத்தின் துவக்கம் இதை எனக்கு கற்பித்தவர் என் தந்தை. அவர்தான் எம்.ஜி.ஆருக்கு மாஸ்டர்.

இப்போது எம்.ஜி.ஆர் பள்ளி இருக்கும் இடத்தில்தான் என் தந்தை அனைவருக்கும் பயிற்சி கொடுப்பார். சிலம்பம் ஆசான் என்றால் அதற்கு பொறுத்தமானவர் பாண்டியன் மாஸ்டர்தான். அவர்தான் பலருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து, ஸ்டண்ட் யூனியனில் சேர ஒத்துழைப்பு கொடுத்தவர். நானே அவரிடம் நிறைய ஹீரோக்களை சேர்த்து விட்டிருக்கிறேன், அனைவரும் இன்று டாப்பில் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா அம்மா காலத்திலும், கலைஞர் காலத்திலும் சிலம்பம் சிறப்பாக கற்றுக் கொடுக்கப்பட்டு, இன்று சிலம்பம் உலகளவில் உயர்ந்து நிற்கிறது.

சிலம்பம் சாதாரண விசயம் இல்லை. ஒரு சிலம்பத்தை வைத்துக் கொண்டு நூறு பேரை அடிக்கலாம். அப்படிப்பட்ட சிலம்பம் கலையை திரைப்படமாக எடுத்து ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கிய ஜோதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

Our Score