full screen background image

“இதுவொரு ஜனநாயகப் படுகொலை…” – நடிகர் சங்க நிர்வாகிகள் குமுறல்..!

“இதுவொரு ஜனநாயகப் படுகொலை…” – நடிகர் சங்க நிர்வாகிகள் குமுறல்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாமல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை தடாலடியாகத நேற்று முன்தினம் நியமித்தது தமிழக அரசு.

இது குறித்து பேசுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் நேற்று மதியம் பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசும்போது, “நாங்கள் சங்கத்தில் பொறுப்பேற்ற பொழுதே முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

பிரச்சனை என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம்வரையிலும் சங்கத்தில் பென்சன் தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு நடப்பதால் கட்டடம் கட்டுவது தொடர்பான அடுத்தக் கட்ட விஷயங்கள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றால்தான் எல்லாமே நடக்க முடியும்.

ஆனால், நடிகர் சங்கத்தில் உதவி பெறுபவர்கள் சிலரே சங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள் லட்சங்களில் ஃபீஸ் வாங்குபவர்கள். இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலமே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் நான்கு பேர் உறுப்பினர்களாக இருந்த சங்கம்தான் எங்களது தென்னிந்திய நடிகர் சங்கம். நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகுதான் சங்கத்தின் கடனை முழுமையாக அடைத்திருக்கிறோம். சங்கத்திற்கான கட்டிடத்தையும் கிட்டதட்ட முடித்திருக்கிறோம். ஆனால், பிரசவ நேரத்தில் இதனை  நிறுத்தி வைத்துள்ளார்கள்.

ஆனால்,  எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இப்படி தனி அதிகாரியை நியமித்திருப்பதை ஒரு ஜனநாயக படுகொலையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அரசு அதிகாரி இன்று பொறுப்பேற்று கொண்டார் என்கிறபோது அவருக்கு ஒத்துழைத்து கணக்கை ஒப்படைப்பது எங்களது கடமை. அதனால் அதனை நாங்கள் முறைப்படி செய்துள்ளோம். இருந்தாலும் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம்.

இந்த முறை தேர்தல் நேரத்தில் பல பிரச்சனைகள் வந்தபோதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம்.

விஷால் அரசியலில் ஈடுபட்டதால்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று சொல்வது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையாலானது.

விஷால் மீது குற்றமே சொல்லவில்லை எனும்போது ஏதாவது ஆதாரத்தின்படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே.

இந்த விஷயத்திற்காக நாங்கள் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினோம். ஆனால், அது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

சங்கத்தின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் என நம்புகிறோம். அதற்காக சட்டப்படி போராடுவோம்.

இந்தப் பிரச்சினையினால் தமிழக அரசு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்படுகிறதா என்பது பற்றி பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இப்போது நடந்து கொண்டிருப்பது ஜனநாயகப் படுகொலை. இதனை பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும். இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்ல முடியுமென்று நம்புகிறோம்…” என்றனர்.

Our Score