தமிழ்த் திரையுலகில் பல வருடங்களாக பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக பணி புரியும் திருமதி.அனு பார்த்தசாரதி இயக்குநர் பொன்ராம் இயக்கியிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்திற்கு உடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
‘சீமராஜா’ படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி திருமதி அனு பார்த்தசாரதி பேசுகையில், “ஒரு கதாபாத்திரத்தின் தன்மை, குண நலன், பராக்கிரமம் ஆகியவை அந்த கதாபாத்திரம் அணியும் ஆடைகளின் மூலமாகதான் ரசிகர்களுக்கு சென்று அடையும்.
வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றி பாடல் காட்சிகளில் வண்ண மயமான பார்த்தவுடன் கவரும்வகையில் ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு காட்சிகளின் பின்னணி அமைப்புக்கும் தோதாக இருக்க வேண்டும்.
பொன்ராம் படம் என்றாலே அது வண்ண மயமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கதை உருவாகும் காலக் கட்டத்திலேயே ஆடை வடிவமைப்பாளரையும் கலந்தாலோசித்து வரும் கலாச்சாரத்தை இயக்குநர் பொன்ராம் கொண்டு வந்து இருக்கிறார். இது எங்களது பணியை சுலபமாக்கியது.
நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் தனது கேரக்டருக்கும், தோற்றத்திற்கும் ஏதுவான ஆடைகளையே அணிந்து நடித்திருக்கிறார். மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடைகள் இரண்டுமே அவருக்குக் கச்சிதமாக பொருந்துகிறது.
இயக்குநர் பொன்ராமும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியமும் மிகுந்த கவனத்துடன் உடைகளை தேர்ந்து எடுத்தார்கள். இன்று எல்லோராலும் பெரிதளவு விவாதிக்கப்படும் அந்த இளவரசன் தோற்றத்துக்காக மிகவும் உழைத்தோம்.
படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல் காட்சியும் வெவ்வேறு பின்னணியில் படமாக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்றவாறு உடைகளை தேர்ந்தெடுத்து பாடல்களை படமாக்கி உள்ளோம்.
குறிப்பாக அவருடைய அறிமுக பாடலில் அவர் அணிந்து இருந்த குர்தா உட்பட மற்ற எல்லா அணிகலன்களும் கவனமாக தேர்ந்து எடுக்கப்பட்டவை. குழந்தைகள், இளைஞர்கள் என பலரையும் கவரும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் மூலம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவருவார்.
செப்டெம்பர் 13-ம் தேதி விநாயக சதுர்த்தி அன்று வெளிவர இருக்கும் ‘சீமராஜா’ நிச்சயம் வசூல் ராஜாவாக திகழ்வான்..” என உறுதியாக கூறுகிறார் திருமதி.அனு பார்த்தசாரதி.