நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் சத்யராஜ் தயாரித்துள்ள திரைப்படம் ‘சத்யா.’
இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாயகி ரம்யா நம்பீசன் பேசும்போது, “மிகவும் ஒழுக்கமான, நேர்மையான ‘சத்யா’ படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி. ’சத்யா’ திரைப்படம் ஒவ்வொரு நிமிடமும் ஒரு ட்விஸ்ட் டர்ன் என்று பரபரப்பாக இருக்கும்..” என்றார் ரம்யா நம்பீசன்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசும்போது, “இந்த ‘சத்யா’ படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நான் இல்லாவிட்டால் அதில் சத்யராஜ் அண்ணன்தான் நடித்திருக்க முடியும். சத்யாராஜ் அண்ணன் இன்னும் பல ஆண்டு காலம் நன்றாக வாழ வேண்டும்.
இந்த தலைமுறை நடிகர்கள் அனைவரும் தங்களுடைய சீனியர் நடிகர்களை மதிக்கும் பண்பை கடைப்பிடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெரியவர்களை மதித்தாலே போதும். அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் செல்வார்கள். இதேபோல் படவுலகில் அனைவரையும் மதிக்கும் குணமுடைய தம்பி சிபிராஜ், தமிழ்ச் சினிமாவுலகத்தில் நிச்சயமாக அடுத்தக் கட்டத்துக்கு செல்வார்…” என்றார்.
நடிகர் சிபிராஜ் பேசும்போது, “தெலுங்கில் வெளியான ‘ஷணம்’ திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில்தான் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு என்னுடைய அம்மாவும், தங்கையும் படத்தை பார்த்தனர். அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி ‘ஷணம்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம்.
நான் ‘ஷணம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன். இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அப்போது, ‘படத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா?’ என்று கேட்டார். ‘இல்லை. இன்னும் முடிவு பண்ணவில்லை. பார்த்துக் கொண்டிருக்கிறோம்..’ என்றேன். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த ‘சைத்தான்’ திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார்.
அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். நாங்கள் முதல்முறை பேசும்போது படத்தை பற்றி அதிகம் பேசவில்லை. தமிழை பற்றியும் அதன் வரலாறு பற்றியும்தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தை பற்றி கதையை பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது, ‘நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன். உங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்கு தெரிய வேண்டும் அல்லவா?’ என்று கூறினார்.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ‘சத்யா’ படத்தின் டைட்டிலை அவரிடம் கேட்டு முறைப்படி வாங்கித்தான் இந்த படத்துக்கு வைத்துள்ளோம். கதையில் கதாநாயகனின் பெயர் ‘சத்யா’ என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம்.
படம் ஆரம்பிக்கும்போது ‘என்னை புதுவிதமாக காட்ட வேண்டும்’ என்று கூறினார் இயக்குநர். சொன்னது போலவே என்னை நிஜமாகவே வேற மாதிரி காட்டியுள்ளார்.
என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலை வாங்கினார் இயக்குநர் பிரதீப். ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை. அவரைக்கூட இப்படித்தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே இயக்குநர் என்றுகூட நான் யோசித்தேன்.
வரலட்சுமி சரத்குமாரிடம், இயக்குநர் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து ‘போயா’ என்று கிண்டலாக கூறிவிட்டார். இப்படி சீரியசாகவும், ஜாலியாகவும் சென்றது ‘சத்யா’வின் படபிடிப்பு.
நீங்கள் கேட்பதுபோல் படப்பிடிப்பின்போது ‘லிப் லாக் முத்தக் காட்சியில் நான் நடிக்க மாட்டேன்’ என்று கூறியது உண்மைதான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன்தான். அவன் இப்போது சிறுவன். என்னை ரோல் மாடலாக பார்க்கிறான். நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்குத்தான். அதனால் இப்போதைக்கு அது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப் லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம்…” என்றார் சிபிராஜ்.
தயாரிப்பாளர் சத்யராஜ் பேசும்போது, “நான் ‘பாகுபலி’ படத்தின் படபிடிப்பில் இருந்தபோது சிபி என்னை தொடர்பு கொண்டு ‘ஷணம்’ என்ற தெலுங்கு படம் பற்றி விசாரிக்கும்படி கூறினார்.
நான் பிரபாஸிடம் ‘ஷணம்’ படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் ‘ஷணம் நல்ல படம். எதற்காக கேட்குறீங்க..?’ என்றார். அதற்கு நான், ‘என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார்’ என்றேன். ‘ஷணம் தரமான படம். கண்டிப்பாக வாங்கலாம்’ என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின்தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம்.
நான் ‘சத்யா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கி பத்து நாட்கள் கழித்துதான் ‘ஷணம்’ படத்தை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்துடன் ‘சத்யா’ திரைப்படம் நன்றாக வந்துள்ளது. ‘சத்யா’, கமல்ஹாசன் படத்தின் டைட்டில். நிச்சயமாக அந்த டைட்டிலுக்கு பெருமை சேர்க்கும் படமாகவே ‘சத்யா’ இருக்கும்…” என்றார் உறுதியான குரலில்.