இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’. இந்த படத்தின் ஆடியோ வெளியிடு விழா சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.
படத்தின் இசையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட மேடையில் இருந்த அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இயக்குநர் சசியுடனான தனது நட்பு பற்றி கொஞ்சம் உருக்கமாக பேசினார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, “தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய இயக்குநராக உருவாக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அப்போது கையில் பணம் இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும் சென்னையில் ஒரு பிச்சைக்காரனை போல் சுற்றிக் கொண்டிருந்தேன்.
இயக்குநர் சசியை நான் உதவி இயக்குனராக இருக்கும்போதே எனக்கு நன்றாக தெரியும். எனது நல்ல நண்பர். எனக்கு ‘தீனா’ படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, சசியை சந்தித்தேன்
அப்பொழுது அவரிடம் ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்றேன். அவர் என்னிடம் ‘நல்லா பண்ணு’ என்று என்னை உற்சாகப்படுத்தி சொல்லிவிட்டு இயக்குநர் ஸ்டான்லியுடன் டூவிலரில் கிளம்பிச் சென்றார். சிறிது தூரம் சென்றபின், வண்டியை நிறுத்திவிட்டு என்னை அழைத்தார். ‘படம் பண்ணப் போறேன்னு சொல்ற.. கையில காசு இல்லைன்னா கூச்சப்படமா கேளு. கூச்சப்பட்டுக்கிட்டு பட்டினி கிடந்துறாத..’ என்று சொல்லி எனக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தார்.
அவர் அன்றைக்கு அப்படி என்னிடம் சொல்லியபோது, நான் இருந்த நிலைமை இந்த டைட்டில்தான். அவர் கூறிய வார்த்தைதான் அதில் உள்ள கிரீடம்.
‘இந்த படத்திற்கு ‘பிச்சைக்காரன்’ என்று நெகட்டிவ் டைட்டில் வைத்ததை கேள்விப்பட்டு முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். அது பற்றி அவரிடம் பேசவும் செய்தேன். ஆனால் அவரும் விஜய் ஆன்டனியும் இந்த டைட்டிலில் உறுதியாக இருந்தார்கள்.
அதற்கப்புறம் யோசித்தபோது ‘நீர்க்குமிழி’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என நெகட்டீவான டைட்டிலை கொண்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த ‘பிச்சைக்காரன்’ படமும் சம்பந்தப்பட்டவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கும் என்பதை இப்படத்தின் டிரைலரையும் பாடல்களையும் பார்த்தபோது உணர்ந்துகொண்டேன்.
சசியோட ஒவ்வொரு படத்திலும் மனித நேயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சசியோட ஒரு கதையை ஹிந்தியில் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. அது விரைவில் நடக்கும்…’’ என்றார்.