தமிழ் சினிமாவின் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், மீண்டும் திரையுலகில் ‘பொன்னியின் செல்வனில்’ ‘பெரிய பழுவேட்டரையர்’, ‘ருத்ரனில்’ எதிர் நாயகன் ‘பூமி’ என்று நடிப்பில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது.
மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார்.
‘பொன்னியின் செல்வன்’, ‘ருத்ரன்’ திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாகவும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நடிகர் சரத்குமார்.
இந்நிகழ்வினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள். மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ்தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலைதான் என் தொழில்.
பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன்.
‘பொன்னியின் செல்வன்’ பட புரமோசனில் நான் கலந்து கொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச் சிறந்த கதாப்பாத்திரத்தை எனக்குத் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. ‘பொன்னியின் செல்வன்’ வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு, ‘லைகா புரொடக்சன்’ சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி.
இன்றைய தலைமுறையினருக்கு என்னை எடுத்து சென்ற ‘வாரிசு’ படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ‘ருத்ரன்’ படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் என்றபோது தயங்கினேன். ஆனால், இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை. அந்தக் கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள். அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன்.
நான் நாயகனாக நடித்த காலத்தைவிட இப்போது அதிகப் படங்களில் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும்.
அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி. ..” என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சரத்குமார் பதிலளித்தார்.