நடிகை சஞ்சனா சிங் பத்திரிகையாளர் மத்தியில் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். கவர்ச்சி உடையில் வந்து கேக் வெட்டி அவர்களுக்கு கேக்கையும், கிக்கையும் ஊட்டி மகிழ்ந்தார்.
அதுமட்டுமல்ல ஆர்வமாகத் தமிழ் கற்ற பஞ்சாபி நடிகையான அவர், ‘தமிழ் அழகான மொழி இனிமையான மொழி. நான் நன்றாக தமிழ் கற்று அழகாகப் பேச ஆசைப்படுகிறேன்’ என்று தமிழில் பேசியும்… கேள்விகளுக்குத் தமிழில் பதிலளித்தும் அட போட வைத்தார் சஞ்சனாசிங்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ” நான் ‘ரேணிகுண்டா’வில் அறிமுகமானேன். பெரிய ரோல் இல்லை என்றாலும் பெயர் சொல்லும்படி அடையாளம் தரும்படி அமைந்தது. இயக்குநர் பன்னீர்செல்வம் தந்த அந்த முதல் வாய்ப்பை மறக்க முடியாது.
நான் நடிக்க வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரையிலும் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன். கதாநாயகியாக நடிக்கவே வந்தேன். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும்வரை நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. சிறிது நேரம் வந்தாலும் நினைவில் நிற்கும்படியான வேடத்திலும் நடித்தேன். அதன் மூலம் சில நடிப்பு அனுபவங்கள் கிடைத்ததை மறக்க முடியாது.
‘ரேணிகுண்டா’வில் நடித்தஅந்த கிராமத்து கேரக்டரை மறக்க முடியாது. அதேபோல ஆனால் சிட்டி பின்னணியில் இப்போது ‘மீகாமன்’ படத்தில் நடிக்கிறேன்” என்றார். சஞ்சனாசிங் நடித்து ‘ரேணிகுண்டா’ தவிர ‘கோ’, ‘ரகளபுரம்’ ‘ போன்ற படங்களும் வெளியாகியுள்ளன. இப்போது ‘மீகாமன்’ ‘வெயிலோடு விளையாடு’ ‘விஞ்ஞானி’ ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘யாருக்குக் தெரியும்?’, ‘வெற்றிச் செல்வன்’, மயங்கினேன் தயங்கினேன்” ரெண்டாவது படம்’, ‘அமளி துமளி’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
நடித்து வரும் படங்கள் பற்றிச் சஞ்சனா பேசும்போது. ” ஜெயம் ரவியுடன் நடிக்கும் ‘தனியொருவன்’ படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். ‘விஞ்ஞானி’ ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். மீரா ஜாஸ்மின் கதாநாயகி. நான் 2-வது கதாநாயகி. இந்தப் படத்துக்காக சமீபத்தில் பாங்காக் போய் வந்தேன். அண்டர்வாட்டர் காட்சியில் நடித்தேன். ஹெலிகாப்டர் காட்சி எல்லாம் எடுத்தார்கள். பாடல் காட்சியும் எனக்கு உண்டு. விவேக் சாருடன் நடித்தது மறக்க முடியாது. அவர் நிறைய சொல்லிக் கொடுத்தார்… ” என்றார்.
“நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் இங்கு சென்னை வந்தபோது ஒல்லியாக இருந்தேன். எனக்குத் தமிழும் தெரியாது. இந்த இரண்டு பிரச்சினையையும் முதலில் எடுத்துக் கொண்டேன். இங்கு ஒல்லியாக இருந்தால் பிடிக்காது. ரசிக்க மாட்டார்கள். கொஞ்சம் குண்டாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் ரசிப்பார்கள் என்று சொன்னார்கள். எனவே முதலில் கொஞ்சம் வெயிட் போட்டேன். தமிழ் கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாக இருந்தேன் ‘ரேணிகுண்டா’வில் நடித்தபோதே டைரக்டரிடம் எனக்கான வசனத்தை முதல் நாள் கொடுத்து விடும்படி கேட்பேன். வாங்கி வந்து மறுநாளே தமிழில் பேசி நடித்துக் காட்டி விடுவேன். அவரே ஆச்சரியப்பட்டு பாராட்டுவார். இப்படி என் முதல் பட அனுபவம். அவர் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்ததால்தான் எனக்கு உங்கள் முன் நிற்கும் இந்த இடம் கிடைத்துள்ளது…” என்றார்.
“தமிழ் மொழி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு போகும்போது பேச வேண்டியதை முன்பே தயார் செய்து மனப்பாடம் செய்து பேசி வந்தேன். அப்போது சொந்தமாக திக்கித் திணறியாவது பேசி விடுவேன். இப்போது தமிழ் மீது எனக்கு ஆர்வம் வந்து விட்டது. தமிழ் ஸ்வீட் லாங்வேஜ். ஆமாம் இனிமையான மொழி. அது மட்டுமல்ல க்யூட் லாங்வேஜ். அழகான மொழி. நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு சரளமாக அழகாகப் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நிச்சயம் பேசுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது…” என்கிற சஞ்சனா சிங்கை இதற்காகப் பாராட்டலாம்.
தாய்மொழி தமிழைப் பேச கூச்சப்படும் நம்மவர்கள் மத்தியில் வட இந்தியாவிலிருந்து வரும் நடிகை இப்படி ஆர்வம் காட்டுவது பாராட்டப்பட வேண்டும்.
குத்துப் பாடலில் ஆடுவது பற்றிக் கேட்டபோது. “முன்பு ஆடினேன். இரண்டு, மூன்று படங்களில்தான் ஆடியிருப்பேன் ஆனாலும் எனக்கு அது பிடிக்கவில்லை. கதாநாயகியாகவே ஆசை. குறைந்தபட்சம் 2-வது கதாநாயகி வேடமாவது வேண்டும் ” என்று தெளிவுடன் கூறுகிறார்.
ஊடக நண்பர்களுக்கு நன்றி கூறியவர், தனக்கு தமிழும் கற்றுக் கொடுத்து திரையுலகில் தனக்கு குடும்ப நண்பராக இருந்து வழிகாட்டும் மேலாளர் ஜானுக்கும் நன்றி கூறினார்.
ஊடக வெளிச்சத்தில் மேலேறிச் சென்று இன்று கோடி கோடியாக சம்பளம் வாங்கும் பல நடிகைகளிடம் இல்லாத நன்றியுணர்வு சஞ்சனா சிங்கிடம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.