பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’.
நாயகியாக ‘தாமிரபரணி’ பானு நடிக்கிறார். மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோசித்ரா, ஜார்ஜ், நிப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ராசாமதி, வசனம் – ஆ.வெண்ணிலா, கலை – சகு, நடனம் – பாபி ஆண்டனி, சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், ஆக்ஷன் பிரகாஷ், படத் தொகுப்பு – வி.டி.விஜயன் – என்.கணேஷ்குமார், தயாரிப்பு மேற்பார்வை – மோகன், கணேசன், கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் -P.V.பிரசாத். இவர் மாபெரும் வெற்றி பெற்ற ‘காதலில் விழுந்தேன்’ படத்தை இயக்கியவர்.
‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் இயக்குநரும், நடிகருமான p.v.பிரசாத் இந்தப் படம் பற்றி பேசியபோது, “ஒரே வீட்டில் காந்தியும், ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கான திரை வடிவமே இந்தப் படம். காந்தி தனது பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும், ஹிட்லர் தனது பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும்தான் கதை.
இதை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லி இருக்கிறோம். சொல்ல வந்த இந்த கதையை ஐந்து கோணங்களில் ஐந்து சம்பவங்களில் உள்ளடக்கி சொல்லி உள்ளோம்.
‘காதலில் விழுந்தேன்’ எப்படி ஜனரஞ்சகமான படமாக வெற்றி பெற்றதோ, அதேபோல் இந்த ‘சகுந்தலாவின் காதலனும்’ வெற்றி பெறும். இதில் அத்தனையும் சமமாக கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பையும் நான் ஏற்றிருக்கிறேன். எனக்கும் என் கதாபாத்திரத் தன்மைக்கும் என்ன மாதிரியான இசை ஒத்து போகுமோ, அதை மட்டுமே நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அதை போல இதில் ஹரி கிருஷ்ணன் என்கிற என் கதாபாத்திரம் வித்தியாசமாக உணரப்படும்.
110 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது…” என்றார் இயக்குநரும், நடிகருமான p.v.பிரசாத்.