சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மனோகரி’.
இதே தயாரிப்பாளர் ஏற்கெனவே அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் ‘சிட்தி’ என்ற படத்தை தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் அத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து இவர் தயாரிக்கும் இந்த ‘மனோகரி’ திரைப்படத்தில் நடிகை தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது சிறப்பம்சமாகும்.
இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகனின் மனைவியான கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் வில்லனாக அறிமுகமாகிறார்.
ஆண்டி இந்தியன் ஜெயராஜ், தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – K .V.மணி, இசை – கார்த்திக் ராஜா, பாடல்கள் – சினேகன், படத் தொகுப்பு – SP அஹமது, கலை இயக்கம் – தென்னரசு, சண்டை இயக்கம் – S.சுரேஷ், நடன இயக்கம் – ராதிகா, தயாரிப்பு மேற்பார்வை – ஹக்கீம் சுலைமான், மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – மகேஷ்வரன் நந்தகோபால், தயாரிப்பு நிறுவனம் – சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ், லைன் புரொடியுசர் P.V.தமிழ்செல்வன் & வேலவன் தியாகு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவாஸ் அஹமது.

படம் பற்றி இயக்குநர் நவாஸ் அகமது பேசும்போது, “நடிகர் திலகம் சிவாஜிக்கு ‘மனோகரா’ போல் நடிகை தன்ஷிகாவுக்கு இந்த ‘மனோகரி’ படம் அமையும். இன்றைய நவீன தொழிற் நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த அளவில் இந்த ‘மனோகரி’ திரைப்படத்தை உருவாக்க இருக்கிறோம். தன்ஷிகா இதுவரையிலும் நடித்திருக்காத கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கிறார். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. படப்பிடிப்பு கம்பத்தில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல், திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது…” என்றார்.