full screen background image

“மன்னன் தலைமையிலான அணியை நான்தான் உருவாக்கினேன்” – எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!

“மன்னன் தலைமையிலான அணியை நான்தான் உருவாக்கினேன்” – எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!

வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடக்க உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றனர்.

மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ‘நலன் காக்கும் அணி’ என்ற அணியும், இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரின்  ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் ‘உரிமை காக்கும் அணி’யும் போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் ‘நலன் காக்கும் அணி’யில் தற்போது தலைவராக இருக்கும் முரளி ராமநாராயணன் தலைமையிலும். ‘உரிமை காக்கும் அணி’யில் தற்போதைய பொருளாளரான மன்னன் தலைமையிலும் போட்டியிடுகின்றனர்.

இந்த இரண்டு அணிகளுமே தற்போது வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இரண்டு அணிகளிலும் சில மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு அந்தந்த அணிகளுக்கு ஆதரவளிப்பதாக சொல்லியுள்ளனர்.

முரளி இராமநாராயணன் தலைமையில் போட்டியிடம் தயாரிப்பாளர்களின் ‘நலன் காக்கும் அணி’யின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை தி.நகர் அக்கார்டு ஹோட்டலில் நடந்தது.

அதேபோல் மன்னன் தலைமையிலான ‘உரிமை காக்கும் அணி’யின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு மன்னன் அணியினருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தக் கூட்டத்தில் பேசும்போது, “நான் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் இங்கே வருவதற்குத் தாமதமாகிவிட்டது. நான் இங்கு வர மாட்டேன். என்னை வர விடாமல் எதிரணியினர் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள்.

ஏனென்றால், கடந்த மூன்று நாட்களாக என்னிடம் ‘நலன் காக்கும் அணி’யில் இருந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எனக்கு எப்போதுமே எதிர்நீச்சல் போடுவதுதான் பிடிக்கும். ஆகையால்தான் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால், பின் வாங்க மாட்டேன். அது அவர்களுக்கும் தெரியும்.

மன்னன் அவர்கள் இந்த அணியினருக்கு ஆசி வழங்கச் சொன்னார். நான் ஆசி வழங்கும் அளவிற்கு பெரிய சாமியார் இல்லை. ‘இந்த அணியை உருவாக்கியதே நான்தான்’ என்று இந்த மேடையில் நான் தைரியமாக சொல்கிறேன்.

அதுமட்டுமில்லாமல், இந்தத் தேர்தலில் நான் நின்று வெற்றி பெற்றால் சங்கத்தில் உட்கார்ந்து பணிகளை செய்ய முடியாத நிலையில் என் உடல் தற்போது ஒத்துழைப்பு தராது என்ற காரணத்தினால் நான் நிற்கவில்லை..” என்றார்.

Our Score