சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை இன்றைக்கு சினிமா கலை நிகழ்த்தி இருக்கிறது.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் ‘தமிழரசன்’ படத்தில் ‘இசை ஞானி’ இளையராஜாவின் இசையில் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் நியூஸ்.
இந்தப் படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் கோபி, ராதாரவி சோனு சூட், யோகி பாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், ‘கும்கி’ அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ் கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – ‘இசைஞானி’ இளையராஜா, பாடல்கள் -பழனிபாரதி, ஜெய்ராம், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அனல் அரசு, படத் தொகுப்பு – புவன் சந்திரசேகர், நடன இயக்கம் – பிருந்தா, சதீஷ், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாபு யோகேஸ்வரன், தயாரிப்பு – கெளசல்யா ராணி.
இதே படத்திற்காக வெகு நாட்களுக்குப் பிறகு ‘இசை ஞானி’யின் இசையில் ‘கானக் குயில்’ கே.ஜே. ஜேசுதாஸூம் ஒரு பாடலை பாடியது குறிப்பிடத்தக்கதாகும்.
பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜா இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார்.
இசைப் பாடல்களுக்கான ராயல்டி பற்றிய பிரச்சினையில் சில மாதங்களுக்கு முன்பாக ‘இசை ஞானி’ இளையராஜாவுக்கும், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் இடையில் பிரச்சினை எழுந்திருந்தது.
அந்தப் பிரச்சினை இப்போது முடிந்து போன நிலையில்தான் இந்தத் தமிழரசன் படத்திற்காக ‘இசை ஞானி’யின் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இந்த அதிசய இசை நிகழ்வு இன்று காலை பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரில் நடைபெற்றுள்ளது.
இந்தப் பாடல் பதிவின்போது ‘இசை ஞானி’யும், எஸ்.பி.பி., அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள்.
“இசை தேவனின் இசையில் எஸ்.பி.பி. பாடிய மெலடிகள் அனைத்தும் ஆல் டைம் ஹிட். அதே வரிசையில் பழனிபாரதி எழுதியிருக்கும் ‘வா வா என் மகனே’ என்னும் இந்த தாலாட்டு பாடலும் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…” என்கிறார்கள் படக் குழுவினர்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று, தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.