இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம். அதனாலேயே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இணைகிறது ‘ரூபம்’ திரைப்படம்.
எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். இதனாலேயே ‘அறம்’ தொடங்கி சமீபத்திய ‘க/பெ.ரணசிங்கம்’வரையில் அந்நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.
அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே தயாரிப்பில் இறங்கியுள்ளது. அடுத்த காட்சியை யூகிக்க முடியாத அளவுக்கு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் இந்த ‘ரூபம்’ திரைப்படம் தயாராகவுள்ளது.
இந்தப் படத்தில் பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
த்ரில்லர் படங்கள் என்றாலே தொழில் நுட்பக் கலைஞர்கள் பிரதானமாக இருக்க வேண்டும். ‘ரூபம்’ கதைக்கு அழகு சேர்க்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், படத் தொகுப்பாளராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக் குழு பணிபுரிந்து வருகிறது.
2021-ம் ஆண்டில் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்துக் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்…!