பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’..!
இந்தப் படத்தில் விமல், சூரி, பிரியா ஆனந்த் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். மேலும் நாசர், தம்பி ராமையா, சிங்கம்புலி, சாஷா, சுருதிரெட்டி, அனுபமா சுப்பிரமணியம், ஜோஸ்னா மற்றும் பலரும் நடிக்கிறார்கள். இசை டி.இமான். ஒளிப்பதிவு பி.ஜி. முத்தையா. எழுதி இயக்கியிருக்கிறார் கண்ணன்.
படம் பற்றி கூறும் இயக்குநர் கண்ணன், “என்னுடைய சினிமா பயணத்தில் இதுவொரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தின் கதைக்காக சுமார் ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொண்டேன். நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வேலை செய்யும் இசையமைப்பாளர் டி.இமானும், நான்காவது முறையாக என் படங்களுக்கு தோள் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் எனக்கு, இரண்டு தண்டவாளங்களைப் போன்றவர்கள்.
டைட்டிலில் வரும் இரண்டு ராஜாக்களில், விமல் முதல் ராஜா. இரண்டாவது ராஜா சூரி. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் விமல், சூரி, ப்ரியாஆனந்த் மூவரும் சந்திக்கிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம், அவர்களின் வாழ்கையையே மாற்றுகிறது.
கதை தண்டவாளத்திலிருந்து இறங்கி கார் பயணம், துரத்துதல், காதல், கலகலப்பு, விறுவிறுப்பு என ஓடுகிறது. கடைசியில் மூவரின் இலக்கை அடைய வைக்கிறதா… இல்லையா… என்பதுதான் கதையின் சுவாரஸ்யம்.
ப்ரியா ஆனந்த் மருத்துவக் கல்லூரி மாணவியா நடிக்கிறாங்க. லூசு பெண், வாயாடி, ஹீரோவுடன் இரண்டு, மூன்று பாடல்களுக்கு நடனமாடிவிட்டு செல்லும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமால், ஒரு ஊர்ல இரண்டு ராஜா, ஒரு ராணி என்று சொல்லும் அளவுக்கு இவருடைய கேரக்டர் சிறப்பாக இருக்கிறது. விமல் – பிரியா ஆனந்த் காதல் இதில் கவிதையாக இருக்கும். இரண்டே நாளில் நடக்கிற கதையில், பார்த்ததும் காதல் என்றால் செயற்கையாக இருக்கும். அதனால் யதார்த்தத்தின் எல்லை மீறாமல்… ‘இருவருக்கும் இடையிலான காதலில் நாகரீகம், நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தது’ என்று வைரமுத்து எழுதிய வார்த்தைக்கு உதாரணமாக இருக்கும்
என் படங்களில் அரிவாளால் வெட்டுகிற ஆளையோ, பெண்ணிடம் வன்முறை செய்யும் வில்லன்களைப் பார்க்க முடியாது. ராமாயணம், மகாபாரதத்தில் ‘இவர்தான்’ வில்லன் என்று யாரையும் சொல்ல முடியாது. அது போன்ற கேரக்டரைத்தான் இந்தப் படத்தில் நாசர் செய்திருக்கிறார். பெரும் தொழிலதிபரான அவர் ஒரு பக்கா சுயநலவாதி. அது வில்லத்தனம் மாதிரி தெரியுமே தவிர, அவரை வில்லன் என்றும் சொல்ல முடியாது.
பயணம் என்பதே சுவாரஸ்யமானதுதான். அதிலும் ரயில் பயணம் அலுக்கவே அலுக்காதது. சின்ன பிள்ளைகளுக்கு ரயில் தரும் சந்தோசத்தை போல அனைத்து வயது உள்ளவர்களுக்கும் இந்தப் படம் ஒரு இனிய அனுபவத்தைக் கொடுக்கும்….” என்று உறுதியாகக் கூறுகிறார்.