தெலுங்கு திரையுலகிற்கு சிவகார்த்திகேயனை முதல்முதலாக அறிமுகப்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘ரெமோ’.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த ‘ரெமோ’ திரைப்படம், கடந்த நவம்பர் 25-ம் தேதி அன்று, தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் வெளியானது.
வெளியான நாள் முதல் இன்றுவரை தெலுங்கு ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருவது மட்டுமில்லாமல், தரமான விமர்சனங்களையும் ‘ரெமோ’ பெற்று வருவது மேலும் சிறப்பு.
இத்திரைப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தில் ராஜு வெளியிட்டிருக்கிறார்.
“கடந்த 25-ம் தேதி ஆந்திரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ‘ரெமோ’ வெளியிடப்பட்டது. வெளியாகி மூன்று நாட்கள் ஆகி இருந்தாலும், இன்னும் நிலையான வசூல் பயணத்தில்தான் ‘ரெமோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது நிலவி வரும் 500, 1000 பிரச்சனையில், வர்த்தக ரீதியாக நல்லதொரு வெற்றியை ‘ரெமோ’ தழுவி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தெலுங்கில் அறிமுகமாகி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு மிக பெரிய வெற்றி. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அனைத்து தெலுங்கு ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…..” என்கிறார் விநியோகஸ்தர் தில் ராஜு .
“ரெமோ திரைப்படம் தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் வலுவான கதைக் களம். சிறந்த கதையம்சம், புத்தம் புதிய விளம்பர ஏற்பாடுகள். இவை இரண்டும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று இருக்கிறது. நிச்சயமாக அவர்களின் ரசனைகளை பூர்த்தி செய்து, அவர்கள் விரும்பக்கூடிய ஒரு திரைப்படமாக ரெமோ இருக்கும் என்று நாங்கள் எண்ணினோம். ஆனால் நினைத்ததைவிட மிக பெரிய வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் எங்களுக்கு தேடி கொடுத்திருக்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகில், ஒரு தரமான திரைப்படத்தை கொண்டு கால் பதித்து இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தெலுங்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் அன்பையும், ஆதரவையும் அளித்து வருகிறார்கள். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….” என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.









