full screen background image

“தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியில் நடக்கும் மொழிப் பிரச்சினைதான் ‘ரெபல்’ படத்தின் கதையாம்”

“தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியில் நடக்கும் மொழிப் பிரச்சினைதான் ‘ரெபல்’ படத்தின் கதையாம்”

ஒரு உண்மை சம்பத்தைத் தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் திரைப்படம் ரெபல்’.

இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். புதுமுக இயக்குநரான எஸ்.ஆர்.நிகேஷ் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் படக் குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில் ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசும்போது, “இந்த ரெபெல்’ திரைப்படம் இயக்குநர் நிகேஷின் கனவு. இந்திய சினிமாவின் உண்மையான ‘ரெபெலான’ ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார்.

ஜீவி மிகப் பெரிய போராளி. தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு  அளப்பரியது.  இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மிகப் பெரியது. அவரைத் திருப்திப்படுத்துவதுதான் எங்கள் வேலையாக இருந்தது.  

தயாரிப்பாளர் ஞானவேல் இங்கு வேலை காரணங்களால் வர முடியவில்லை. மும்பையில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் சில திரைப்படங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனால்தான் வரமுடியவில்லை. அவருக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வருடமாக அமையும்.

இங்கு வாழ்த்த வந்துள்ள எங்கள் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல், அவர் ஒரு நிறுவனம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட அறிமுக இயக்குநர்களைத் திரை உலகிற்குத் தந்துள்ளார். அவரளவிற்கு இல்லாவிட்டாலும் அது போல் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் மூலம் நிகேஷ் பெரிய அளவில் சாதிப்பார்.  1980-களில் நடந்த  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான்  இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படம் கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்…” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் நிகேஷ் பேசும்போது, “நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயதுதான். ஆனால், ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாட்கள் ஷீட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும்வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில்  என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன் சாருக்கும் நன்றி. ஜீவி பிரகாஷ் அண்ணா என்னை நம்பி இந்தக் கதையைக் கேட்டார்.  கேட்டவுடன் “தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன்” என்று வந்தார். அவருக்கு என் நன்றி. இந்த மொத்தப் படமும் அவர் மீதுதான் பயணிக்கிறது.

நாயகி மமிதா பைஜுவுக்கு படத்தில் மிக ஆழமான, அழுத்தமான கேரக்டர். ஆனால், அதைப் புரிந்து நடித்துக் கொடுத்தார். அவருக்கு என் நன்றிகள். பா.ரஞ்சித் அண்ணா என் படத்தின் பூஜைக்கு வந்தார். இப்போது இங்கு வாழ்த்த வந்துள்ளார்.

கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், என ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். அருண்  மிக அற்புதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பளித்த ரஞ்சித் சார் மற்றும் இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி. என்னுடைய குழுவினருக்கு நன்றி, ஜீவி பிரகாஷ் சாருடன் பணி புரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்…” என்றார்.

கலை இயக்குநர் உதய்குமார் பேசும்போது, “இந்தப் படத்தில் நான் பணி புரிய முக்கிய காரணம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்தான். முதலில் அவருக்கு எனது நன்றி. இந்தப் படத்தின் கதை 1980-களில் நடப்பது போல் இருந்தது. அந்தக் காலகட்டத்தைத் திரையில் கொண்டு வருவது எங்களுக்கு அது சவாலாக இருந்தது.

ஒவ்வொரு ஃபிரேமையும் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளோம்.  இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், கண்டிப்பாகப் படம் உங்களுக்கு ஒரு புதுமையான உணர்வைக் கொடுக்கும்…” என்றார்.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை 2-1/2 வருடம் முன்னாடி முடிவானது. இந்த  2-1/2 வருடங்களில் இப்படத்திற்காகப் போராடிப் படத்தை அருமையாகக் கொண்டு வந்துள்ள இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு நன்றி. ஜீ.வி. அண்ணா அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவர் நேரில் தம்பி போல் என்னைப் பார்த்துக் கொண்டார். ரஞ்சித் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  எங்களை வாழ்த்த வந்த அவருக்கும் நன்றி. மமிதா பைஜு இன்னும் நிறைய வெற்றிப் படங்கள் தர வாழ்த்துக்கள். நிறைய மலையாள நண்பர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.  படம் மிக அருமையாக வந்துள்ளது..” என்றார்.

சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசும்போது, “இந்த ரெபெல்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு மக்களிடம் உருவாகியுள்ளது. இப்படத்தின் விழாவில் நாங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்கள் எல்லாம் மிக அருமையாக வந்துள்ளது.  இசையமைப்பாளருக்கும் இயக்குநருக்கும் எனது வாழ்த்துகள்.  ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துகள்..” என்றார்.

நடிகர் கல்லூரி வினோத் பேசும்போது, “ஜீவி பிரகாஷ் சாருக்கு வணக்கம். இந்தப் படத்தில் நான்தான் கடைசியாக சேர்ந்த நடிகன். இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம்.

ரஞ்சித் அண்ணாவின் படங்களைப்போலவே, இந்தப் படமும் ஒரு முக்கியமான அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.  இதில் ரசிக்கும்படி பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளது.  

இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் நன்றி. ஜீவி பிரகாஷ் சாரின் ரசிகன் நான்.  வெயில் படத்தின் பாடல்கள் முதல் இன்றுவரை அவரது பாடல்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவருடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது…” என்றார்.

இயக்குநர், நடிகர் சுப்பிரமணிய சிவா  பேசும்போது, “தனது முதல் படத்திலேயே ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட படமாக, பொதுவுடைமை கருத்தைத் தைரியமாகச் சொல்லும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ். முதல் படத்தில் இதை செய்வது மிகப் பெரிய விசயம். தமிழில் முதல் படத்தில் இவ்வளவு தைரியமாகப் பேசி எடுப்பது பெரிய விசயம்.

நிறைய ஹீரோக்கள் இதைச் செய்யப் பயந்திருப்பார்கள். ஆனால், மிகத் தைரியமாகச் செய்துள்ள ஜீவிக்கு நன்றி. அவர் சமூகத்தில் சின்ன, சின்ன விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரால் மட்டும்தான் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு நாயகன்தான் ஞாபகம் வந்தது. அந்தப் படமும் மும்பையில் தமிழர்கள் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசியது. ரஜினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இது பெயர் சொல்லும் ஆக்சன் படமாக இருக்கும்.

ரஞ்சித் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆர்.பி.சௌத்திரிக்குப் பிறகு அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் ரஞ்சித். அவருக்கு என் நன்றி. இந்தப் படம்தான் உண்மையான ‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’. தமிழ் பசங்க கேரளா போவதுதான் கதை. ஒரு அருமையான போராளிப் படம். இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும்…” என்றார்.

நாயகி மமிதா பைஜு பேசும்போது, “இது எனது முதல் தமிழ்ப் படம். என் மனதுக்கு மிக நெருக்கமான படம். ஜீவி பிரகாஷ் சார் அருமையான கோ ஸ்டார். எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். எல்லோரும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளனர்.  இந்தப் படம் அருமையாக வந்துள்ளது. தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள்..” என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இந்தப் படத்தின் முதல் பிரதியைப் பார்த்தேன். முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் மிரட்டி விட்டார். ஒரு போராளிக் கதை. ஆனால் முழுக்க, முழுக்க கமர்ஷியலான ஒரு படமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ். இது தெறிக்கும் கமர்ஷியல் படம்.

இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் சார் முழுக்க, முழுக்க ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார். படத்தில் 200 பேரை அடிக்கிறார். ஆனால் அதை நாம் நம்பும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் கை தட்டல்கள் பறக்கும்.

ஞானவேல் சாருக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. இடையில் சில வருடங்கள் அவருக்குப் பல கஷ்டங்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும்.  

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு அருமையான புதுமுக  இயக்குநர் கிடைத்துள்ளார். ஜீவியுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் செய்கிறேன். இரண்டுமே அட்டகாசமாக வந்துள்ளது.

பா.ரஞ்சித் சார் இங்கே வந்துள்ளார். அவரின் சமீபத்திய தயாரிப்பான ‘ஜே.பேபி’ படத்தை நான்தான் ரிலீஸ் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்தில்  புதுமுகங்கள் பெயர் பெற வேண்டும் என்பதற்காக, உழைக்கும் அவர் பண்பு வியக்க வைத்தது. தொடர்ந்து சிறப்பான படங்களைப் புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இந்த ரெபல்’ படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி…” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசும்போது, “இந்த ‘ரெபல்’ படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் உண்மையான ரெபல் பா.ரஞ்சித் பற்றிப் பேச நினைக்கிறேன்.

உண்மையில் புதிய முகங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும்  அவரது இந்த புரட்சி பாராட்டுக்கும், மதிப்புக்கும் உரியது.  அவரை ‘சரோஜா’ படத்தில் உதவி இயக்குநராகப் பார்த்தேன். இன்று அவர் பல இயக்குநர்களை உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தக் கட்டத்திற்குப் போவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,  இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய பொருளையும், வெற்றியையும் ஈட்டித் தரும். இந்தப் படம் 1980-ம் வருட காலக்கட்டங்களில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த படக் குழுவினரின் உழைப்பும் படத்தின் டிரெய்லரில் தெரிகிறது, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித்  பேசும்போது, “இது ‘ரெபெல்’ படத்தை புகழும் மேடையா..? அல்லது என்னைப் புகழும் மேடையா? என்று தெரியவில்லை, இந்தப் பாராட்டுக்கள் மூலம் நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன் என்று நினைக்கிறேன்.

இப்படத்தின் விஷுவல்,  டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில், இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில், இந்தக் கதையை அமைத்துள்ளார்கள். நிகேஷ் இப்படத்தில் இரு மொழிப் பிரச்சனையைக்  கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

ஜீவியை எனக்கு ‘தங்கலான்’ மூலமாகத்தான் தெரியும், எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால், நேரில் பழகிய பிறகுதான் தெரிந்தது… மிக மிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். நிறையப் பேருக்கு நல்லது செய்ய வேண்டும்.

தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார். இந்தப் படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது, என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது, ‘சக்தி பிலிம் பேக்டரி’  சக்திவேலன் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அவர் இந்த வேலையை நிறையச் செய்ய வேண்டும்…” என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் பேசும்போது, “இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.

சக்தி அண்ணா ‘ரெபல்’ படம் பார்த்துவிட்டார். அதனால்தான் இவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ் பற்றிப் பேசும் கதை இது. இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது,

இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக் கதையை திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச்  செய்துள்ளார். இந்தப் படத்தின் மையமே ஆதித்யாதான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால்தான், இந்தப் படமே சரியாக வந்துள்ளது. அட்டகாசமாகச் செய்துள்ளான்.

நடிகர் வினோத்  போனில் பேச ஆரம்பித்தால் அரை மணி நேரம் ஆனாலும் வைக்க மாட்டான். நல்ல பையன். நன்றாக நடித்துள்ளான். மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து படம் செய்கிறேன். ஞானவேல்ராஜா சார்தான் ‘டார்லிங்’ படத்தில் நடிகனாக என் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்.  

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய  நிகேஷூக்கு அட்வான்ஸ் தந்துள்ளேன். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். ஓஃப்ரோ  மிகச் சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். சித்துக்குமார் கேரளா பாணி பாடல்களை கொடுத்துள்ளார். அதை நான்தான் டிரெய்லரில் வைக்கச் சொன்னேன்.

வெங்கடேஷ் என்னிடம் எல்லாம் பேச மாட்டான். எப்போதும் பெண்களுடன்தான் பேசுவான். நல்ல நடிகன்.  எல்லோருமே மிக அர்ப்பணிப்போடு உழைக்கும்போது அந்தப் படம் சிறப்பாக வரும். மமிதா பைஜு அழகாக தன்  கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார். ஆண்டனி அண்ணா லவ் ஸ்டோரி சொல்வார். பிரமிப்பாக இருக்கும்.

ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும்…” என்றார்.

த்திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22-ம் தேதியன்று உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score