சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அனிரூத் இசையில் இடம் பெற்ற” ரத்தமாரே ரத்தமாரே ” என்ற பாடலை பாடாத வாய்கள் இல்லை, கேட்காத காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படி பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இந்த பாடல் வரியை தலைப்பாக வைத்து சிறப்பான படம் ஒன்று உருவாகி இருக்கிறது.
TSS Germany Films மற்றும் V2 Creation, New Jersey என்ற பட நிறுவனங்கள் சார்பில் சுமார் 13 ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து crowd funding முறையில் தயாரித்திருக்கும் ‘ரத்தமாரே’ படம்தான் அது.
இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் தினேஷா ரவிச்சந்திரன். வசனம் – ஹரிஷ் நாராயண், பொன். பார்த்திபன், டான் அசோக். ஒளிப்பதிவு: சந்தோஷ் ரவிச்சந்திரன், இசை : விபின்.R,, பாடல்கள் : கபிலன், பிரேம்சந்த், எடிட்டிங் : ஹரி சங்கர், சக்தி சரண், ஜிஜேந்திரன். கலை இயக்கம் : குணசேகர்.T, தயாரிப்பு மேற்பார்வை : A.C.சார்லஸ், பத்திரிக்கை தொடர்பு : புவன் செல்வராஜ்.
படம் பற்றி இயக்குனர் தினேஷா ரவிச்சந்திரன் பேசும்போது, “அச்சம், மடம், பயிர்ப்பு என்ற மூன்று நிலைகளில், மனிதர்கள் வாழ்வில் மூன்று கோணங்களில் நடக்கும் சம்பவங்களை, அடர்த்தியான திரைக்கதையைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறோம்.
என் வாழ்வில் நான் பார்த்த, என்னைப் பாதித்த, இந்த சமூகத்தில் மாற வேண்டிய, மாற்ற வேண்டிய சில முக்கிய சம்பவங்களை இதில் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். இந்தப் படத்தின் மூலம் அது மாறும் என்றும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ரத்தமாரே தலைப்பிற்காக மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். அது எங்கள் படக் குழுவினருக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம் என்றார் இயக்குநர் தினேஷா ரவிச்சந்திரன்.









