full screen background image

“அரசியல்வாதிகள் சரியா இருந்தா நாங்க ஏன் அரசியலுக்கு வர்றோம்..?” – நடிகர் விஷால் கேள்வி..!

“அரசியல்வாதிகள் சரியா இருந்தா நாங்க ஏன் அரசியலுக்கு வர்றோம்..?” – நடிகர் விஷால் கேள்வி..!

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனத்துடன் இணைந்தும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ள திரைப்படம் ‘ரத்னம்’.

அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள இந்த ‘ரத்னம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.

இதையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக் குழுவினர் கலந்து கொள்ள வியாழக்கிழமை மாலை சென்னையில் கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசும்போது, “ஹரி சார் இயக்கத்துல விஷால் ஹீரோவா ஒரு படம் தயாரிப்போம்னு நினைக்கவே இல்லை.  இது எல்லாம் அமைஞ்சது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்வேன். சந்தோஷத்தோடு பண்ணியிருக்கிற‌ படம் இது. தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். அடுத்த வாரம் படம் வருது, உங்கள் எல்லோருக்கும் இது பிடிக்கும்.  என் மாப்பிள்ளை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் என் குடும்பத்துக்கு என் நன்றிகள்.” என்றார்.

இன்வீனியோ ஆரிஜன் நிறுவனத்தின் சார்பில் அலங்கார் பாண்டியன் பேசும்போது, “ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் உடன் எங்களோட இரண்டாவது கூட்டணி இது. ‘ஜிகர்தண்டா 2’ அடுத்து இப்போ ‘ரத்னம்’. எனக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ விஷால். ஹரி சார் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக‌ பெரிய வெற்றி கொடுக்கும் என்று நம்புறோம்.  அனைவருக்கும் நன்றி.“ என்றார்.

ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் சி.ஜே. பேசும்போது, “விஷால் என்னுடைய 6 வருட கால நண்பர், அவருடன் படம் செய்ய வேண்டுமென  பேசிக் கொண்டிருந்தோம்.  அந்த நிலையில்தான் அவர் ஹரி சாரை அறிமுகப்படுத்தி வைத்து “இவருடன் நாம் இணைந்து படம் செய்யலாம்” என்றார். இந்த மாதிரி ஒரு வெற்றிக் கூட்டணியில் இணைவது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். இப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் பேசும்போது, “ஹரி சார் இதுவரையில் இல்லாத வகையில் கடுமையாக உழைத்திருக்கிறார். சிங்கிள் ஷாட்டில் ஒரு விஷ‌யம் செய்துள்ளோம், பாருங்கள் பிடிக்கும். விஷால் சார் எப்போதும் எனர்ஜியாக எத்தனை டேக் போனாலும் அசராமல் செய்வார். விஜய் சாருக்கு பிறகு, விஷால் சாரிடம்தான் இவ்வளவு எனர்ஜியைப் பார்க்கிறேன். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசும்போது, “ஹரி சார்கூட முதலில் ‘பூஜை’.  இது மூணாவது படம். விஷால்கூட முதல் படம் ‘சண்டைக்கோழி’ இப்பவும் அவர் சண்டைக் கோழிதான். அவ்வளவு எனர்ஜி. இந்தப் படத்தில் ஒரே ஷாட்டில் ஒரு ஆக்சன் சீன் கேட்டார். அதற்காக ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். ஹரி சார் படங்கள் பரபரப்பாக இருக்கும் இந்தப் படம் எல்லாப் படத்தையும்விட பரபரப்பாக இருக்கும்.” என்றார்.

நடன இயக்குநர் தினேஷ் பேசும்போது, “ஹரி சார் ‘சாமி’ டைமில் இருந்து அவரது படத்தில் ஒரு பாடலானது பண்ணி விடுவேன். பயங்கர ஸ்பீடாக வேலை பார்ப்பார். ‘சாமி’, ‘அருள்’, ‘பூஜை’ முதல் இப்போதுவரை அவர் வேகம் குறையவே இல்லை. விஷால் சாரை ‘செல்லமே’வில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் சகோ சமுத்திரகனி இதிலும் நடித்துள்ளார். விஷால் சார் முதல் படத்தில் டான்ஸில் தடுமாறினார். ஆனால் அடுத்த படத்திலேயே அசத்தினார்.  

தேவி ்ரீ பிரசாத் சாரை ஸ்கூலிலிருந்து தெரியும். அவரது மியூசிக்கில் நிறைய தெலுங்குப் படங்களை செய்துள்ளேன். இந்த ‘ரத்னம்’ படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்கு இந்தப் படம் ரொம்ப கம்ஃபர்டபிளாக இருந்தது. படம் மிக அட்டகாசமாக வந்துள்ளது.” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “மகிழ்ச்சியான தருணம். இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். ஹரி அண்ணன், தம்பி விஷால் எல்லாரும் நெருக்கமானவர்கள். ஹரி அண்ணனிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன். உழைப்பு, உழைப்பு அயராத உழைப்பு. விஷால் என் தம்பி. தயாரிப்பாளர் கார்த்திக் அவர்களிடம் இருக்கும் உண்மை எனக்குப் பிடிக்கும். ஹரி அண்ணனும் நானும் ஒரே ஸ்கூல். அவர் கூப்பிட்டார். வந்துவிட்டேன். விஷாலுடன் ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது, அது நடந்தால் பெரிதாக பேசப்படும். இந்தப் படம் தீ மாதிரி வேகமாக இருக்கும், அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசும்போது, “இந்த ரத்னம்’ பட டீமிற்கு நன்றி. தேசிய விருது பாராட்டுகளுக்கு என் நன்றிகள். ஹரி உடன் நிறையப் படங்களில் வேலை செய்துள்ளேன். ‘ஆறு’ படத்தில் ஆரம்பித்து இப்போது இது 6-வது படம்.

கதை எழுதி ஒரு படம் உருவாவது எல்லாமே ஒரு இயக்குநர் கையில்தான், அவரால்தான் நாங்கள் எல்லோரும் வேலை செய்கிறோம். ஹரி எனக்கு குடும்பம் மாதிரி. அந்த உறவுதான் எங்கள் பாடல்களில் பிரதிபலிக்கிறது. இந்தப் படம் அவர் படத்தில் இருந்து வித்தியாசமாக இருந்தது. விஷால் சாருடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு வேலை செய்கிறேன். அதுவும் எங்களுக்குப் பிடித்த‌ ஹரி சார் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் மிக அன்பானவர், அவருக்கு நன்றி. சமுத்திரக்கனி சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருமே இந்தப் படத்தில் கலக்கியுள்ளனர்.

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் ஆக்ஷ‌ன் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். எப்படி செய்தார்கள் என்றே தெரியவில்லை. இதுதான் மிகப் பெரிய சிங்கிள் ஷாட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிரமிப்பாக இருந்தது. இசையமைப்பாளராக நான் ரொம்பவும் எஞ்சாய் செய்தேன்.

ஹரி சார் ஸ்பீட் அவரது சிந்தனையிலேயே இருக்கிறது. அவர் படத்தில் இது எனக்கு பிடித்த படம். விஷால் சார் இதில் கலக்கியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர் நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் பிடித்த படமாக இப்படம் இருக்கும்…” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “தமிழ் சினிமாவில் படு பயங்கர ப்ளாக் பஸ்டர் வெற்றிகளைத் தந்த ஹரி சார் இயக்கியுள்ள ‘ரத்னம்’ படத்தின் டிரெய்லரே அவ்வளவு நன்றாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக மிகப் பெரிய‌ வெற்றியாக இருக்கும். விஷால் சார் இரண்டு நாள் முன்னாடி ஒரு இண்டர்வியூ தந்தார். அதுதான் இப்போது வைரல். அவர் படத்திற்கு பிரச்சனை வரும் என்றார். ஆனால் இப்படம் அதைத் தாண்டி பெரிய வெற்றியைப் பெறும்.

விஷால் சாருக்கு ஒரு வேண்டுகோள். மார்க் ஆண்டனி 100 கோடி அடுத்து 300 கோடி அள்ளுற மாதிரி படம் தரணும். அரசியல் வேண்டாம். இதை வேண்டுகோளாக வைக்கிறேன். சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெற்றிப் படம் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதை உடைத்து இந்தப் படம் பெரிய வசூலைக் குவிக்கும் படமாக அமைய வாழ்த்துகள்..” என்றார்.

இயக்குநர் ஹரி பேசும்போது, “இது எனது 17-வது படம், விஷாலுடன் மூன்றாவது படம். விஷால் தயாரிப்பாளர் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார். அந்தக் கம்பெனியில் கார்த்திக் சுப்பராஜ் இருந்தார். ஒரு இயக்குநர் இருக்கும் கம்பெனியில் வேலை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது.

இந்தப் படம் இந்தக் கால ஆடியன்ஸுக்கு பிடிக்கும் வலையில் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும். விஷால் ஆக்ஷ‌ன் செய்வார். ஆனால், எமோஷனிலும் அசத்தியுள்ளார். எல்லா ஆர்டிஸ்டும் நன்றாக வேலை பார்த்துள்ளனர்.

சிங்கிள் ஷாட் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில் எட்டு சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர். காட்சிகளில் எதார்த்தம் இருக்கணும்னு ஆசைப்படுவேன். ஏன் வைத்தார் என யாரும் கேட்கக் கூடாது என்று நினைப்பேன். அந்த எண்ணத்தில்தான் இந்தக் காட்சியை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியுள்ளோம்.  

3.5  கிமீ தூரத்திற்கு நான்கு இடங்களில் மாறி மாறி ஹீரோ ஹீரோயினோடு போய் ஆக்ஷ‌ன் செய்துள்ளார் விஷால். இதை செய்யவே முடியாது என்றார்கள். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் ராவாக தருகிறார்கள். அது மாதிரி செய்ய ஆசைப்பட்டேன். விஷால் உழைத்து தந்தார். அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர்.

ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து மூன்றாவது ஷாட்டில் எடுத்து முடித்தபோதுதான் நிம்மதியாக இருந்தது.  ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம். பார்க்கும்போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்..” என்றார்.

நடிகர் யோகிபாபு பேசும்போது, “ஹரி சாருடன் ‘யானை’ படத்தில் வேலை பார்க்கும்போது அவரது படங்களை பற்றி கேட்டுக் கொண்டே இருப்பேன். “யோகி உழைப்புதாண்டா ஜெயிக்கும்” என்பார். அவர் இன்னும் நிறையப் படங்கள் செய்ய வேண்டும்.

விஷால் சார்  என்றும் மாறாதவர். அறிமுகமானதிலிருந்து இன்றுவரை ஒரே மாதிரி பழகுகிறார். தேவி ்ரீபிரசாத் சார் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார். சமுத்திரக்கனி அண்ணா எப்போதும் எனக்கு நல்லது நினைப்பவர். தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் ஸ்டோன் பெஞ்சுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர்  விஷால் பேசும்போது, “இந்த மேடையை அமைத்து தந்த உங்களுக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி. உங்களால்தான் இந்தப் பயணம் சாத்தியமானது.

இந்த ‘ரத்னம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி ரிலீஸாகிறது. நாளை அதைவிட முக்கியமான நாள் ஓட்டுப் போட வேண்டிய நாள்.  நகரங்களில்தான் வாக்குப் பதிவு கம்மியாக இருக்கும் அது மாற வேண்டும். சினிமாவை வேண்டுமானால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குத் தள்ளிப் போடலாம், ஆனால் ஓட்டுப் பதிவை அப்படி தள்ளிப் போட முடியாது. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் எனக்கு ஒரு புதிய கதவைத் திறந்தது, 100 கோடி வசூலால் மரியாதை கிடைத்துள்ளது. அந்தப் படம் ஆதிக்கிற்கு ஒரு வாழ்க்கையை தந்துள்ளது. ஹரி சார் சொல்வது மாதிரி எதுவானாலும் காது கொடுத்து கேட்க வேண்டும். நம்மை பற்றி என்ன சொல்வார்கள் என நல்லது, கெட்டது எல்லாவற்றையும் கேட்க வேண்டும்.

என் வீட்டில் என் அப்பா என் பெயர் வந்தாலே,  அந்த பேப்பரை கட் பண்ணி வைத்து விடுவார். என் அம்மா ஹரி சாரின் தீவிர ரசிகை. “எப்போ ஹரி சார் கூட படம் செய்வாய்..?” எனக் கேட்பார். ‘மார்க் ஆண்டனி’க்கு பிறகு, பழைய விஷாலை பார்க்க முடியவில்லை என்று சொன்னபோது, ஹரி சார்கூட படம் பண்ணலாம் என சொன்னார்கள். நானே அவருக்கு போன் பண்ணி நான் சார் நாம் படம் பண்ணலாம் என்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

மூன்றாவது படம் என்னும்போது எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவர் சொன்ன கதையை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியொரு சர்ப்ரைஸ் அந்தக் கதையில் இருந்தது. உடனே இதைப் பண்ணலாம் என்றேன். சரியான தயாரிப்பாளராக ஸ்டோன் பெஞ்ச் வந்தார்கள். ஜீ ஸ்டூடியோஸ் வந்தது. எல்லாம் நன்றாக அமைந்தது.

ஹரி சார் எப்போதும் ஹீரோவுக்கு முக்கியம் கொடுப்பார். அதே நேரம், அவர் ஒவ்வொரு படத்திலும், ஒரு பெண்மணிக்கு முக்கிய பாத்திரமாக வைப்பார். அது மிகப் பெரிய விஷ‌யம். சமுத்திரகனி அண்ணன் உண்மையிலேயே அண்ணன். அவர் ஒரு கதை சொல்லியுள்ளார். அது படமாவதற்காக தான் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். யோகிபாபு மிகச் சிறந்த நண்பர், அவர் வீட்டில் எப்போதும் என் வீட்டில் இருப்பது மாதிரி இருப்பேன்.

சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸை தந்துள்ளார்.  ஹரி சார் என்றாலே உழைப்புதான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஷாட் 5 நிமிடம் நினைத்தே பார்க்க முடியாது. அதை கேட்டு செய்கிறார். சுகுமார் அதை அட்டகாசமாக எடுத்துள்ளார்.

என் டார்லிங் கனல் கண்ணன், என்னை எல்லோரும் “நல்ல ஆக்ஷ‌ன் ஹீரோ” என சொல்லக் காரணமே அவர்தான்.  என் உடம்பில் இதுவரையிலும் 100 தையல் போட்டிருக்கு. இதில் பாதி தையலுக்குக் காரணம் அவர்தான். அவர் அமைத்த காட்சிகளைப் படத்தில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.  

கேப்டன் சொன்ன மாதிரி, நான் என்ன சாப்பிடுகிறேனோ அதேதான் கடைசி லைட் மேன்வரைக்கும். அதை கடைசிவரை கடைப்பிடிப்பேன்.  நான் பேசுவது பிரச்சனையாகிறது என்கிறார்கள். ஆனால், நான் என் படத்திற்காக பேசவில்லை. தனஞ்செயன் சார் சொன்னாரே ஒரு சின்னப் படம் வருகிறது என்று.. அதற்காகத்தான் போராடுகிறேன். சினிமாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சினிமா எல்லோருக்குமானது. யார் வேண்டுமானாலும் வரலாம். அவ்வளவுதான்.

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் இன்னொரு கொடியைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கு வரப் போகிறோம்..? எனக்கு இப்போது சினிமாவில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. அதை விட்டுட்டு நான் ஏன் அரசியலுக்கு போகணும்? அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்.

இந்தப் படம் ஹரி சாரின் உழைப்பு. அவர் யுனிவர்ஸில் நாங்கள் வேலை பார்த்துள்ளோம். உங்களுக்கு ஒரு நல்ல எண்டர்டெயினர் காத்திருக்கிறது..” என்றார்.

Our Score