full screen background image

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..?” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..?” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம்(FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம்,  தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியை நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்தின.

முன்னதாக கலைஞரின் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும்விதமாக அவருக்காக 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடுத்து வந்திருந்த அனைத்து கலைஞர்களும் மறைந்த கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த இரங்கல் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், S.S.துரைராஜ்,  நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி,  மற்றும்   தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன்,  நடிகர்-நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டி பத்மினி, ஜீவா, கணேஷ், ஆர்த்தி, பூச்சி முருகன், குட்டி பத்மினி, லலிதா குமாரி, சிவகாமி, சோனியா, சங்கீதா, A.L.உதயா, நந்தா, ரமணா, ஸ்ரீமன், ஹேமச்சந்திரன், பிரேம், ஆயுப்கான், மருது பாண்டியன், வாசுதேவன், பசுபதி, அஜய் ரத்தினம், M.A.பிரகாஷ், பிரபா, ஜீவிதா ராஜசேகரன், லிஸி, ஜோதிமீனா, காஞ்சனா, பசி சத்யா, சஞ்சிதா செட்டி, சஞ்சனா சிங், காயத்திரி, வசுந்தரா, மீனாள், விஜயகுமார், மயில்சாமி, விக்ரம் பிரபு, நட்டி நடராஜ், ஜீவா, பாபி சிம்ஹா, கிருஷ்ணா, உதயநிதி ஸ்டாலின், நிழல்கள் ரவி, J.P, ராதாரவி, ராமகிருஷ்ணா, சௌந்தர்ராஜன், ப்ளாக் பாண்டி, ஆனந்தராஜ், Dr.ராஜசேகர், மாரிமுத்து, மாஸ்டர் சோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0J3A1694

தயாரிப்பாளர்களில் தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன், S.S.துரைராஜ், கே.ராஜன், KR,சோழா பொன்னுரங்கம், R.B.சௌத்திரி, K.T.குஞ்சுமோன், மயிலை குருபாதம், ராஜேஸ்வரி, S.V.தங்கராஜ், படத் தொகுப்பாளர் மோகன், மிட்டாய் அன்பு, K.பார்த்திபன், கலைப்புலி தாணு, K.பாக்யராஜ், திருமலை, பழனிவேல், சண்முகம், அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர்கள் விக்ரமன், ரமேஷ் கண்ணா, P.வாசு, பேரரசு, சந்தனபாரதி, சித்ரா லக்ஷ்மண் மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் தளபதி, செயலாளர் N.சிவன் ஸ்ரீநிவாசன், பிலிம் சேம்பர் L.சுரேஷ், காட்றகட்ர பிரசாத்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

director s.p.muthuraman

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, “அந்தக் காலத்தில் கலைஞர் வசனம் என்று பெயர் போட்டால்தான் படம் பார்க்கவே வருவார்கள். இறுதி காலத்தில் ராமானுஜர் தொலைக்காட்சி தொடருக்கும் வசனம் எழுதினார். கலை, பத்திரிக்கை, அரசியல், சினிமா மற்றும் எழுத்து போன்ற ஐந்து துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர்…” என்றார்.

0J3A1658

நடிகர் விஷால் பேசும்போது, “அந்த மாமனிதருக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை. பொது வாழ்க்கை, சினிமா, அரசியல், போன்ற எதுவாக இருந்தாலும், கலைஞர் அவர்களை மறக்க முடியாது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்த முதல் தலைவர் கலைஞர். அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்…” என்றார்.

radharavi

நடிகர் ராதாரவி பேசும்போது, “கலைஞர் என்ற பட்டப் பெயர் கொடுத்ததே எனது தந்தை எம்.ஆர்.ராதா அவர்கள்தான் என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எல்லோரிடமும் பேசக் கூடிய ஒரு தலைவர். ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர்கள் இவையாவும் இருக்கும்வரை கலைஞர் இறக்க மாட்டார்..” என்றார்.

actor naasar

இரங்கல் நிகழ்ச்சியில் நடிகர் நாசர் பேசும்போது, “ஒரு தனி மனிதரின் ஒரு தலைமுறை முடிந்திருக்கிறது, ஒரு சகாப்தம் முடிந்திருகிறது, தொண்ணுறு ஆண்டுகளிலேயே இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போல் செயல்கள் செய்திருக்கிறார். பாடம் நடத்தியிருக்கிறார் என்பதைவிட, பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்கு தழைத்திருகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள்தான் காரணம்…” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “கலைஞர் இல்லாத நாட்டை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரிய விழா என்றால் இனி யாரை அழைப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று யாரை சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

actor rajinikanth

மேலும், நாற்பத்தைந்து வயதில் ஒரு கட்சிப் பொறுப்பை ஏற்று எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக் காப்பாற்றி ஐம்பது ஆண்டு காலங்கள் தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.

ஐம்பது ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடையில் நின்று அரசியல் களத்தில் யாராவது வந்தால் என்னோடு நட்பு கொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் தாளங்கள் போட்டு புகுந்து விளையாடியவர் கலைஞர்.

அவரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் தொண்டர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள், அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள். யாரும் தவறாகக் கொள்ளக் கூடாது,

அ.தி.மு.க. வின் ஆண்டு விழா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். அ.தி.மு.க. உருவானதே கலைஞரால்தான். அவர் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார். அதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

அத்தனை வஞ்சனைகளையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார். அவர் அரசியல் பயணங்களைப் பற்றி பேச இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.

IMG_0887

இலக்கியம் பார்த்தால் அதில் அவர் செய்யாத சாதனை இல்லை. இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம்படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும், எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர்வரை கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர்.

சினிமா பயணம் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு பெரிய இமயங்களை உருவாக்கியது கலைஞர்தான். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது ‘மலைக்கள்ளன்’ படத்தில். சிவாஜி கணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர்தான்.

கலைஞர் மறைந்தார் என்ற செய்தி கேட்டவுடனே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருடன் நான் கழித்த நேரங்கள் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. டிவியில் பார்த்தேன். கோபாலபுரத்தில் பெரும் மக்கள் கூட்டம், இருந்தாலும் பரவாயில்லை என்று சென்றேன். ஆனால் என்னால் பார்க்க முடியாமல் திரும்பி வந்துவிட்டேன்.

0J3A1685

மீண்டும் அதிகாலையிலேயே ராஜாஜி மண்டபம் சென்றேன். ஆயிரம் பேர் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள்? அவர்களுக்காக எவ்ளோ உழைத்திருக்கிறார் என்று தமிழக மக்கள் மீது கோபம் வந்தது. வீட்டுக்கு சென்று படுத்துவிட்டேன்.

அதன்பிறகு எழுந்து டி.வி.யை பார்த்தபோது அலை அலையாக கூட்டம். கட்டுக் கடங்காத கூட்டம். அந்த கூட்டத்தை பார்த்து சபாஷ். தகுந்த மனிதருக்கு தகுந்த மரியாதை. தமிழர்கள் தமிழர்கள்தான். மறக்கமாட்டார்கள் அவரை என்று நினைத்து எனது கண்ணில் கண்ணீர் வந்தது.

அவரது இறுதி சடங்கில் இந்திய தலைவர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள். 21 குண்டுகள் முழங்க முப்படை தலைவர்கள் மரியாதை அளித்தனர். அதில் ஒரே ஒரு குறை.

கவர்னரில் இருந்து எல்லா மாநில முதல்-அமைச்சர்கள் வந்தனர். பிரதமர் வந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2, 3 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டின் முதல் பிரஜை முதல்-அமைச்சர் அங்கு வர வேண்டாமா..? மந்திரி சபையே அங்கு இருக்கக் கூடாதா…? இதை பார்த்த மக்கள் என்ன நினைப்பார்கள்? நீங்களெல்லாம் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? அப்போது ஜாம்பவான்கள் இருந்தார்கள். இப்போது இல்லை.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது. மேல் முறையீட்டுக்கு போகவில்லை. மேல் முறையீட்டுக்கு போய் இருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன்.

ஸ்டாலின் குழந்தை போல் கண்ணீர் வடித்ததை பார்த்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த மாமனிதரின் ஆத்மா உங்களுக்கு வழிகாட்டும். அவருடன் நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன், நிறைய  விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி…” என்றார் ரஜினிகாந்த்.

கூட்டத்தில் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

Our Score