“என் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்’’ என்று தனது ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வருகிற 12-ந்தேதி 65-வது பிறந்த நாள் ஆகும். கடந்த வருடம் அவர் உடல் நலம் குன்றி இருந்ததால் அவரது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடவில்லை. என்றாலும் ரசிகர்கள் முன்பு தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த வருட பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அவரது ரசிகர் மன்றத்தினர் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே செய்து வந்தார்கள். கொடி, தோரணங்கள் கட்டுதல், கட்-அவுட், பேனர்கள் அமைத்தல், சுவரொட்டிகள், வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆனால், இப்போது தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை சூப்பர் ஸ்டார் ரஜினியே ரத்து செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசினாராம். அப்போது, ‘‘எனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குங்கள்…’’ என்று வேண்டுகோகோள் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரஜினியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை அவரது ரசிகர் மன்றத்தினர் ரத்து செய்துள்ளனர். ரஜினிகாந்தின் வேண்டுகோள்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் இறங்கி உள்ளனர்.
ரஜினிகாந்தும் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக உணவு, துணிமணிகள், போர்வை, மருந்து மாத்திரைகள், பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் இதுவரை 5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் அனுப்பி வைத்து இருப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ரஜினி தனது பிறந்த நாளையொட்டி தனது குடும்பத்தினர், மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து இருந்தார். அதையும் ரத்து செய்துவிட்டாராம்.