பேய் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ். இவரது ஸ்ரீராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘காஞ்சனா’ பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றி வாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
அந்த படங்களின் மூலம் குழந்தைகளாக இருப்பவர்கள் முதல்கொண்டு பெரியவர்களையும் குழந்தைகள் மனநிலைக்கு கொண்டு சென்று ரசிக்கச் செய்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு.
அவர் அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தானே தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘துர்கா.’ படத்தின் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை இன்னமும் முடிவு செய்யவில்லையாம்.
ராகவா லாரன்ஸ் தற்போது ‘ஆடுகளம்’ கதிரேசன் தயாரித்து, இயக்கும் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றி மாறன் கதை எழுத, ‘ஆடுகளம்’ கதிரேசன், வெற்றி மாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘அதிகாரம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.