இயக்குநர்கள் பாலா, வெற்றி மாறன் வரிசையில் ‘கேமிரா கவிஞர்’ பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து, மற்றொரு இயக்குநரும் திரையுலகத்தில் இயக்குதல் பணியில் இறங்குகிறார்.
ஆர்.பி.சாய் என்ற அந்த இயக்குநர் இயக்கும் முதல் படத்தின் தலைப்பு ‘முதல் முத்தமே இறுதி முத்தம்’..!
இப்படத்தை ஜே.சி. மீடியா நிறுவனத்தின் சார்பில் வசந்த குமார பிள்ளை மற்றும் K.N.முரளி கிருஷ்ணா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பாளர்களாக மணிகண்டன், மகாதேவன் இணைந்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியனும், நாயகியாக மேக்னா எலனும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாம் ஆண்டர்சன், ரோஹித் பாலையா, எஸ் கௌதம், ஜூனியர் டிஆர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
இசை – மோகன்ராம் , ஒளிப்பதிவு – ஹரிகாந்த், படத் தொகுப்பு – பொன் மூர்த்தி, கலை இயக்கம் – மணி வர்மா, சண்டை இயக்கம் – டைகர் காளி, நடன இயக்கம் – ராதிகா மற்றும் ட்ரீம்ஸ் காதர், தயாரிப்பு மேற்பார்வை – வெங்கட்ராமன்.
இப்படம் பற்றி இயக்குநர் சாய் பேசுகையில், “கோவையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இத்திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மாவுக்கும், மகனுக்குமான பாசம்தான் படத்தின் மையக் கரு…” என்றார்.
இப்படம் பற்றி நடிகர் விஷ்ணுப்பிரியன் கூறுகையில், “நான் ‘கேமிரா கவிஞர்’ பாலுமகேந்திராவிடம் பணியாற்ற மிகவும் ஆசைப்பட்டேன். அது முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அந்த ஆசையை அவரது உதவி இயக்குநரான ஆர்.பி. சாய் மூலம் இப்படத்தில் பணியாற்றுவதில் நிறைவேற்றிக் கொள்கிறேன்…” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னை, கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது.