‘வாலி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமாகிய S.J. சூர்யா ‘நியூ’ திரைப்படம் மூலம் ஹீரோவானார். ‘இறைவி’ படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டினார்.
இப்போது ‘மான்ஸ்டர்’ மூலம் அனைவரும் கொண்டாடும் குடும்ப நாயகனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா, தன் அடுத்த பயணத்தை தமிழ்ச் சினிமாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராதா மோகனுடன் பயணிக்கிறார்.
இயக்குநர் ராதா மோகன் இயக்கும் இந்தப் புதிய படத்தினை, தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ்(Angel studios MH LLP) சார்பில் தானே தயாரித்து, அதில் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறார் நடிகர் S.J.சூர்யா.
குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குநர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.
சமீபகாலமாக மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் S.J.சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘கோமாளி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M.நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் கலை இயக்குநர் இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று காலை மிக எளிய முறையில் நடைபெற்றது.
வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ராதா மோகன், நடிகர் S.J.சூர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மூவரும் இணைந்திருக்கும் இந்த பிரம்மாண்டமான கூட்டணி, 2020 பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
நடிகர் S.J.சூர்யா தற்போது ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், இவரது நடிப்பில் ‘இரவாக்காலம்’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளன.