full screen background image

ராட்சசன் – சினிமா விமர்சனம்

ராட்சசன் – சினிமா விமர்சனம்

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், அமலா பால் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ராதாரவி, முனீஸ்காந்த், காளி வெங்கட், நிழல்கள் ரவி, சூசன் ஜார்ஜ், எலிசபெத் சூரஜ், வினோதினி, மோனிகா, ப்ரியா, திரிஷாலா, தங்கம், கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரில்லர் படத்தை ‘முண்டாசுப்பட்டி’ வெற்றிப் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் – ஜி.டில்லிபாபு, எழுத்து, இயக்கம் – ராம்குமார், ஒளிப்பதிவு – பி.வி.ஷங்கர், இசை – ஜிப்ரான், கலை இயக்கம் – கோபி ஆனந்த், படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், நிர்வாகத் தயாரிப்பு – கே.தினேஷ், கே.பூரனேஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஷ்ரிதர், தயாரிப்பு மேற்பார்வை உதவி – பாலா, பாடல்கள் – ஜி.கே.பி., கு.உமாதேவி, ராம்குமார், கிரியேட்டிவ் டிஸைனர் – சந்துரு, சண்டை இயக்கம் – விக்கி, உடைகள் வடிவமைப்பு – கீர்த்தி வாசன், உடைகள் – கபீர், ஒலிக் கலவை  – கண்ணன் கனபத், ஒலி வடிவமைப்பு – ஸிங்க் சினிமா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, ஸ்டில்ஸ் – ராஜேந்திரன், கிராபிக்ஸ், அனிமேஷன் – ஆக்சல் மீடியா, அக்சா அனிமேஷன், துணை / உதவி இயக்குநர்கள் – ஷாஜி சலீம், சுரேஷ்குமார், மணிமாறன், பார்த்திபன், சட்டநாதன், பூபேஷ், சுபாஷ் சுப்ரமணி, லட்சுமி வேணுகோபால்.

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களின் அலுவலகத்திற்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் விஷ்ணு விஷால். சந்திக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ‘இப்போ; அப்போ’ என்று அவரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருடைய தந்தை போலீஸ் வேலையில் இருந்தபோதே இறந்து போனதால் கருணையின் அடிப்படையில் ஒரு அரசு வேலை அந்தக் குடும்பத்திற்கு உண்டு என்பதால் அந்தப் பணிக்குப் போகும்படி விஷ்ணு விஷாலின் அம்மா அவரை வற்புறுத்துகிறார்.

விஷ்ணு விஷாலுக்கோ கோடம்பாக்கத்தின் கோட்டையைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை. மீண்டும், மீண்டும் படையெடுக்கிறார். முடியவில்லை. கடைசியாக ஒரு தயாரிப்பாளர் ‘நாம படம் பண்றோம் தம்பி’ என்று வாக்குறுதி கொடுக்கிறார்.

இதை நம்பி மகிழ்ச்சியோடு இருந்தவருக்கு அடுத்த நாளே விஷ்ணுவின் ராசிப்படி இப்போது அவருடன் இணைந்து படத் தயாரிப்பு தொழிலில் இறங்கினால் தனக்கு நஷ்டமாகும் என்று தனது ஆஸ்தான ஜோதிடர் சொல்லிவிட்டதாகச்  சொல்லி தயாரிப்பாளர் ஜகா வாங்க.. விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறார் விஷ்ணு.

இனி அம்மா சொல்படி போலீஸ் வேலைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறார் விஷ்ணு. சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார். அவருடைய அக்காள் கணவரான முனீஸ்காந்த் ஏற்கெனவே அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அதே ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக போஸ்டிங் வாங்கி வருகிறார் விஷ்ணு.

அதே நேரம் சென்னையில் பள்ளி மாணவிகள், அதுவும் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மாணவிகள் சிலர் கடத்தப்படுகிறார்கள். மறுநாள் அவர்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டு அவர்களுடைய உடல்கள் கிடைக்கின்றன.

பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மீடியாக்கள் கதறுகின்றன. போலீஸ் விசாரணையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்போது தனது கதைத் திறனின் அடிப்படையில் விஷ்ணு இந்த வழக்கை இந்தக் கோணத்தில் விசாரிக்கலாம் என்று அஸிஸ்டெண்ட் கமிஷனரான சூசன் ஜார்ஜிடம் சொல்கிறார்.

ஆனால் சூசனோ அதை உதாசீனப்படுத்தி அவரை அவமானப்படுத்துகிறார். இரண்டாவது மாணவியும் படுகொலை செய்யப்பட இப்போது கமிஷனரே நேரில் வந்து விசாரிக்கிறார். இப்போது விஷ்ணு தனது கருத்தை முன் வைக்கிறார். “இந்தக் கொலைகளை செய்பவன் நிச்சயமாக ஒரு மன நோயாளியாகத்தான் இருப்பான். இரண்டாவது பெண்ணின் மரணத்தை வெளியில் சொல்லாமல் மறைத்து வைப்போம். அப்போது கொலைகாரன் தடுமாறுவான். ஏன் அந்தக் கொலை சம்பவம் வெளியில் வரவில்லை. என்னாச்சு என்று யோசிப்பான். அந்த நேரத்தில் ஏதாவது தவறு செய்வான். அப்போது அவனை நாம் எளிதாகப் பிடிக்கலாம்…” என்கிறார்.

கமிஷனரும் இதற்கு ஒப்புக் கொள்கிறார். சூசன் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறார். இடையில் முனீஸ்காந்தின் பெண் வேறொரு பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்கிறாள். அந்த வகுப்பின் கணக்கு ஆசிரியர் சாடிஸ்ட்டாக இருக்கிறான். அவன் மாணவிகளை மதிப்பெண்களைக் காட்டி மிரட்டி அவர்களை தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துகிறான்.

3-வதாகவும் ஒரு மாணவி காணாமல் போகிறார். இவர் ஏறிச் சென்ற ஆட்டோவை அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் அமலாபால் பார்த்திருக்கிறார். அவருக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையில் முன் பழக்கம் உண்டு என்பதால் இது பற்றி அமலா பாலிடம் விசாரிக்கிறார். தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் அமலாபால், ஒரு கட்டத்தில் விஷ்ணு மீது நல்லெண்ணம் வந்து அந்த வழக்குக்கு உதவுகிறார்.

அந்த மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோவில் எழுதியிருந்த வாசகங்களை அமலா பால் ஞாபகப்படுத்திச் சொல்ல.. அந்த ஆட்டோவை எதேச்சையாக கண்டறிகிறார் விஷ்ணு. ஆட்டோ டிரைவரை ஸ்டேஷனில் வைத்து லாடம் கட்ட.. அழைத்துச் சென்றது அந்த சைக்கோ பள்ளி வாத்தியார் என்பது தெரிகிறது.

அந்தப் பள்ளி வாத்தியாரை தேடி பள்ளிக்கே ஓடி வருகிறார் விஷ்ணு. அங்கே அவர் முனீஸ்காந்தின் மகளை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். இதைக் கண்டு கோபமடையும் விஷ்ணு வாத்தியாரை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கிறார். அவரிடம் நடத்திய விசாரணையிலும் மேற்கொண்டு எந்தத் தடயமும் சிக்காமல் போகிறது.

அந்த சைக்கோ கொலைகாரன் வாத்தியார் இல்லை என்பது தெரிய வர.. வேறு வழிகளில் யோசிக்கத் துவங்குகிறார் விஷ்ணு. இந்த நேரத்தில் அவர் மீது மனித உரிமை கமிஷன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. பள்ளி ஆசிரியரை தேவையில்லாமல் சுட்டுப் பிடித்தமைக்காக அவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள்.

ஆனாலும் விஷ்ணு தனித்துவிடப்பட்ட நிலையிலும் சைக்கோ கொலைகாரனை கண்டறிய அலைகிறார். இந்த நேரத்தில் முனீஸ்காந்தின் மகளையே கடத்திக் கொலை செய்துவிடுகிறான் சைக்கோ கொலைகாரன். கொலை வெறியாகிறார் விஷ்ணு விஷால்.

தான் நடத்திய தனிப்பட்ட விசாரணையின் ஒரு கட்டத்தில் கடத்தப்பட்ட மாணவிகளெல்லாம் அந்தந்த பள்ளிகளின் ஆண்டு விழா முடிந்த பிறகே கடத்தப்பட்டிருக்கும் ஒற்றுமையை கண்டறிகிறார் விஷ்ணு.

இதை மேலும் நுணுக்கமாக விசாரிக்கும்போது ஆண்டு விழா கொண்டாடிய அனைத்து பள்ளிகளிலும் ஒரு பெண்மணி மேஜிக் ஷோ நடத்தியிருப்பது தெரிய வருகிறது. அந்தப் பெண்மணியைத் தேடுகிறார் விஷ்ணு. அவருடைய புகைப்படத்தை வைத்துப் பார்க்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்னால் கொடைக்கானலில் ஒரு மாணவியைக் கொலை செய்ததாக தனது மகனுடன் கைது செய்யப்பட்ட ஒரு பெண்மணியின் ஒத்த உருவமாக இந்த மேஜிக் பெண்மணி தெரிகிறார்.

இவர்தான் அந்த சைக்கோ கில்லராக இருப்பார் என்று நினைத்து விஷ்ணு விஷால் தனது போலீஸ் நண்பர்களை வைத்து தேடுகிறார். அதே நேரம் இவரை மனித உரிமை கமிஷன் முன்பு  ஆஜர்படுத்த துணை கமிஷனர் சூசன் ஜார்ஜூம் நினைத்து விஷ்ணுவை தேடுகிறார். சைக்கோ கொலைகாரனோ இதற்கிடையில் இன்னொரு பெண்ணையும் கடத்தும் நிலைக்கு போகிறான்.

கடைசியில் என்ன ஆனது..? சைக்கோ கொலைகாரன் யார்..? அவனுடைய பின்னணி என்ன..? ஏன் இந்தக் கொலைகள் இப்படி நடக்கின்றன..? விஷ்ணு விஷால் கண்டறிந்தாரா இல்லையா என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திகில், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தின் திரைக்கதை.

எடுக்கக் கூடாத கதையை, எடுக்கக் கூடாத விதத்தில் வழங்கியிருக்கிறார் இயக்குநர் ராம்குமார். இவருடைய முந்தைய படமான ‘முண்டாசுப்பட்டி’யில் இருந்து 360 டிகிரி கோணத்தில் விலகியிருக்கிறது இத்திரைப்படம். வித்தியாசம் தேவைதான். ஆனால் அதற்காக இத்தனை காத தூரம் வித்தியாசம் தேவையா இயக்குநரே..?

உங்களுடைய அழுத்தமான, மனதைப் பிசையும் அளவுக்கான இயக்கத்தினால் படம் மிகவும் கொடூரமாக உள்ளது. இதனை இளகிய மனதுடையவர்கள் யார் பார்த்தாலும் நிச்சயமாக தூங்க மாட்டார்கள். அதேபோல் ஊசலாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் மன நோயாளிகளை இத்திரைப்படம் நிச்சயமாக குற்றவாளியாக்கும் அளவுக்கு இருக்கிறது. அதனால்தான் சொல்கிறோம்.. சொல்லக் கூடாத கதை..  சொல்லக் கூடாத விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று..!!!

படத்தில் லாஜிக் குறைகளும் இல்லாமல் இல்லை. இவ்ளோ பெரிய சென்னையில் நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமிராக்களே இல்லையா.. மாணவிகள் சின்னக் குழந்தைகள் இல்லை. காரில் ஏறும்போது தென்படும் காட்சிகள் சிக்கவில்லையா.. என்பதையே சொல்லாமல் திரைக்கதையே பேய் ஓட்டத்தில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

ஒரு பெரிய பாலத்தின் கீழே இருக்கும் குப்பைத் தொட்டியில் பிணம் கிடக்கிறது. அந்த வழியில் சென்ற, வந்த வாகனங்களை கேமிராவில் கண்டுபிடிக்க முடியாதா என்ன..?

இதேபோல் முனீஸ்காந்தின் வீட்டு முன் நிற்கும் அம்பாசிடர் காரின் டிக்கியில் கிடக்கும் பிணத்தைக்கூட இவர்களால் முன்பே கண்டறிய முடியவில்லை என்றால் எப்படி..? அந்தத் தெருவில் எப்படி கேமிராக்கள் இல்லாமல் போகும்..?

கிளைமாக்ஸில் எப்படி மிகச் சரியாக அமலாபாலின் குழந்தையும், கொலையாளியும் இருக்குமிடத்தை விஷ்ணு விஷால் கண்டறிகிறார் என்பதும் சர்ச்சையானதுதான்..! திரைக்கதைக்கு மிக எளிதாக்கப்பட்டதாகவே நமக்குத் தோன்றுகிறது..!

இப்படி சில லாஜிக் இடறல்களைத் தவிர மற்றவைகளில் நேர்மைக்கு பக்கமாக வைத்துக் கொண்டு பரபரவென்று திரைக்கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

விஷ்ணு விஷாலுக்கு இதுவொரு முக்கியமான படம். ஒரு திரைப்பட இயக்குநருக்குரிய ஆய்வு செய்யும் மனப்பான்மையோடு வழக்கை அணுகும் தன்மையுடன் இருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சுவையானது. முதல் நாள் ஸ்டேஷனுக்கு வந்த உடனேயே ஒரு அக்யூஸுட்டுக்கு லத்தி மரியாதை கொடுக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சினிமா ஷூட்டிங்கில் தான் பேசியதும், செய்து காட்டியதும் அவருக்கு நினைவுக்கு வருவது சாலப் பொருத்தம்.

அமலா பாலுடனான முதல் சந்திப்பின் இறுதியில் பல்பு வாங்கும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள் இருவரும். வழக்கிற்குள் வந்தவுடன் அந்தக் குற்றவாளியை கண்டறிந்தே தீர வேண்டும் என்கிற வெறியில் இயங்கும் விஷ்ணு விஷாலின் அடுத்தடுத்த ஆக்சன்கள்தான் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன.

வீட்டில் இருந்து தப்பித்து காரில் செல்லும் கொலையாளியை விஷ்ணு விஷால் துரத்திச் செல்லும் காட்சிகளும், அடுத்தடுத்த டிவிஸ்ட்டுகளும் படம் பார்ப்போரை நெஞ்சாங்கூட்டில் ‘திக்’ என்ற உணர்வுடன் கை வைக்க வைத்திருக்கிறது.

அமலாபால் படத்திற்குத் தேவையான ஒரு நாயகிக்கான லுக்கைக் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான். அதிகமாக நடிப்புக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் படத்தின் வேகத்திற்கு டிவிஸ்ட்டாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

காது கேளாதோர் பயன்படுத்தும் ஹியரிங் எய்டில் இருக்கும் ஒரு சில வசதிகளைக்கூட இயக்குநர் திரைக்கதைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சரவணன்தான் உண்மையில் பயமுறுத்தியிருக்கிறார். அவருடைய கொடைக்கானல் எபிசோட் மிகவும் சோகமயமானது. மாணவப் பருவத்தில் புறக்கணிப்பும், கேலியும், கிண்டலும் மிகக் கொடூரமானது. அது மனதை திசை மாற்றினால் இப்படித்தான் பேரழிவைத் தரும் என்பதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சண்டை காட்சிகள் மட்டுமே வில்லனுக்கு அமர்க்களமாக இருப்பதால் நடிப்புக்கு மிகப் பெரிதாக வாய்ப்பில்லை. ஆனாலும் பயமுறுத்தியிருக்கிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

இரண்டே பாடல்கள். அதிலும் கதையோடு, கதையை நகர்த்தியபடியே செல்வதால் போரடிக்கவில்லை. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜிப்ரான். தடதட காட்சிகளிலும், படபட காட்சிகளிலும் பார்வையாளர்களுக்கு திக், திக் உணர்வை கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். கடைசிவரையிலும் படத்தின் ஓட்டத்திற்கு மிக்க உறுதுணை பின்னணி இசைதான் என்பதில் ஐயமில்லை.

ஒளிப்பதிவு இயக்குநரான பி.வி.ஷங்கரும், தன் பங்குக்கு நம்மை எப்படியெல்லாம் பயமுறுத்த முடியுமோ.. அப்படி பயமுறுத்தியிருக்கிறார். கொலை செய்யப்பட்ட மாணவிகளின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது எந்தக் கோணத்தில் பார்த்தால் கொடூரமாகத் தெரியுமோ அப்படியே ஷூட்  செய்திருக்கிறார்கள். வில்லனின் இருப்பிடத்தில் நடக்கும் சண்டை காட்சிகள், தேடுதல் காட்சிகளிலெல்லாம் கேமிராவே அதிக பயமுறுத்தலைச் செய்திருக்கிறது.

இத்தனை இறுக்கமான இயக்கத்திற்கு உற்ற துணையால் கொடுத்ததையெல்லாம் கச்சிதமாக நறுக்கித் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ். வாழ்த்துகள் ஸார்.

ஒட்டு மொத்தமாய் படம் ஒரு அதிவேக திரில்லர் படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுத்தாலும் குடும்பத்தோடு, குழந்தைகளோடு, மாணவிகளோடு பார்க்க முடியாத படமாக இருப்பதுதான் படத்திற்கு இருக்கும் மிகப் பெரிய பின்னடைவு.

சிறந்த இயக்குநர்களால் நல்ல படைப்பையும் தர முடியும்.. மனதைப் பாதிக்கும் படைப்பையும் தர முடியும்.. இதில் இயக்குநர் ராம்குமார் இப்போது இரண்டாவது விதியைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அடுத்த படத்திலிருந்து மீண்டும் முதல் விதிக்கே போய்விடுமாறு அவரிடத்தில் அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்..!

Our Score