திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் மற்றும் ஶ்ரீக்ரிஷ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கி.சாம்பசிவம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ராஞ்சா’.
இந்தப் படத்தில் பிரஜன், இவானா, வருண், அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த ‘ராஞ்சா’ படத்திற்கு ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சூது கவ்வும்-2’ திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின் ‘ராஞ்சா’ படத் தொகுப்பை கையாளுகிறார்.
காதலை மையமாகக் கொண்டு துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த ‘ராஞ்சா’ படத்தை சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசும்போது, “ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது..? இதன் பின்னணியில் உண்மையில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில் ‘ராஞ்சா’ உருவாகி வருகிறது.
காதலின் சக்தி அசாத்தியமானது. அபிரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றலை கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம் அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்” என்றார்.
தற்போது இந்த ‘ராஞ்சா’ திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.