க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அனுமந்தங்குடி பி.முருகேசன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கன்னி மாடம்’ புகழ் வெலினா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ‘ஜீ தமிழ்’ புகழ் பேபி பிரிதிக்சா, ‘குக்கூ’ புகழ் ஈஸ்வர், ‘100% காதல்’ புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத் தொகுப்பில், மணிஅமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. ஹென்றி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
“பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது” என்ற ஒரு மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
அதே நேரம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தையும் ஒருங்கே இணைத்து, அழகான கலகலப்பான படமாக உருவாகியிருக்கிறார் இயக்குநர் ஹென்றி.
மகள் கேட்கும் விஷயத்தை அவளிடம் கொடுக்க அவளுடைய தந்தை எப்படிப் போராடுகிறார் என்பதைக் காட்டுவதாக நகர்கிறது. படம். எல்லாவற்றையும் நிறைவேற்றிய தந்தை. மகள் ஒரு வீடு கேட்கிறாள் அதை நிறைவேற்றினாரா இல்லையா என்பதை படத்தின் மீதிக் கதை.
சென்னையில் சாதாரணமான செல்போன் சர்வீஸ் கடையை நடத்தி வருகிறார் முருகதாஸ். இவருடைய மனைவி வெலினா. இவர்களின் 7 வயது மகள் ப்ரதிக்ஷா. 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மகள் மீது அளவில்லாத பாசத்தைக் காட்டுகிறார் முருகதாஸ். மகள் எதைக் கேட்டாலும் முடியாது என்று சொல்லாமல் உடனேயை வாங்கித் தந்து விடுவார். கணவர் கொடுக்கும் அதீத செல்லம் மகளது வாழ்க்கையை வீணாக்கிவிடும் என்று மனைவி வெலீனா மட்டுமல்ல, முருகதாஸின் அம்மா, அப்பா இருவருமே வருத்தப்படுகிறார்கள். ஆனாலும் முருகதாஸ் மனம் மாறவில்லை. மாறாக தனது பெற்றோர்கள் மற்றும் மனைவியையும் திட்டுகிறார். மகள் மீது பாசத்தைக் கொட்டுகிறார். மகளும் தன் அப்பா மீது அதீத நம்பிக்கையுடன் பெரும் பாசத்தில் இருக்கிறாள்.
பள்ளியில் தன்னுடன் படிக்கும் பணக்கார வீட்டுப் பையனின் பிறந்த நாளுக்காக அவனது வீட்டுக்குப் போன மகள் பிரதீக்ஷா அந்த வீடு போலவே நமக்கும் ஒரு வீடு வேணும்ப்பா என்று அப்பா முருகதாஸிடம் கேட்கிறார்.
முருகதாஸூம், தன் வீட்டிற்குப் பக்கத்தில் இரு ஒரு பங்களா போன்ற வீட்டை மகளிடம் காட்டி இதை விரைவில் வாங்கித் தருவதாக சொல்லி விடுகிறார். இதையடுத்து தனது பிறந்த நாளை அந்தப் புதிய பங்களா வீட்டில்தான் நடத்த வேண்டும் என்று கனவு காண்கிறாள் ப்ரதிக்ஷா.
வீட்டுப் பிரச்சினையில் இருந்து மகளை திசை திருப்ப முடியாமல் தவிக்கிறார் முருகதாஸ். அதே நேரம் நாள் நெருங்க, நெருங்க.. புது வீட்டுக்கு எப்போ போகணும் என்று மகள் அனத்த ஆரம்பிக்க இது அவளது உடல் நிலத்தையும் பாதிக்கிறது.
இப்போது மகளைப் பார்ப்பதையே தவிர்க்கிறார் முருகதாஸ். அப்பாவைப் பார்க்காமல் ஏங்கித் தவிக்கிறாள் மகள். இவர்கள் இருவருக்குமிடையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார் அம்மாவான வலீனா.
ப்ரதிக்ஷாவின் வீட்டுக் கனவு நிறைவேறியதா.? அந்த வீட்டை அப்பா முருகதாஸ் வாங்கிக் கொடுத்தாரா.. இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
இதுவரையிலும் ‘ஆடுகளம்’, ‘குட்டிப்புலி’ போன்ற பல படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த முருகதாஸுக்கு இந்த படத்தில் கதையின் நாயகன் வேடம் கிடைத்திருக்கிறது.
அந்தத் துணைப் பாத்திரங்களையே சிறப்பாக செய்திருந்த முருகதாஸ் இந்த நாயகன் வேடத்தில் தனது அனுபவ நடிப்பைக் கொடுப்பினால் கதாப்பாத்திரத்துடன் ஒன்றி நடித்திருக்கிறார்.
மகளை சந்தித்தால் வீடு பற்றிக் கேட்பாளே என்றெண்ணி மகள் தூங்கியதும் வீட்டுக்கு வந்து, அவள் எழுவதற்கு முன் கடைக்கு ஓடிச் செல்வதும், மாலையில் பள்ளிக்கு வந்து மறைவாக நின்று அவள் முகத்தை பார்த்து அழுவதும் சிறப்பான காட்சிகள். இதில் தனது அப்பாவித்தனமான அப்பா நடிப்பைக் காண்பித்திருக்கிறார் முருகதாஸ்.
மகளுக்காக தனக்கு எட்டாத ஏணி என்று தெரிந்தும் அந்த வீட்டு ஓனரிடம் சென்று வீட்டை லீஸுக்குக் கேட்பதும், எப்பாடுபட்டாவது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்து கடன்களை வாங்கத் துவங்குவதிலும் ஒரு வேகத்தைக் காட்டும் முருகதாஸை நமக்குப் பிடித்துதான் போகிறது.
மகள் மீது அளவு கடந்த பாசத்தை காட்டும் போதும், தனது மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் பரிதவிப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் முருகதாஸ்.
படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டே சிறுமியாக நடித்த ப்ரதிக்ஷாதான். தன்னுடைய கண் பார்வையிலேயே பலவித நடிப்புக்களைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார் ப்ரதிக்ஷா. அப்பாவிடம் பேசும் பாசமான பேச்சும், பள்ளியில் நண்பர்களிடத்தில் விடும் சவால் பேச்சும், அம்மாவிடம் பேசும் எதிர்ப்பேச்சுமாய் இப்படியொரு பெண் குழந்தை நம் வீட்டில் இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை படம் பார்ப்போருக்குக் கொடுத்திருக்கிறார் இந்தக் குழந்தை.
கன்னி மாடம் படத்தில் தனது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கும் வெலினா, இந்தப் படத்திலும் ஒரு அம்மாவாக தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். மகளின் புரியாத ஆசைகளையெல்லாம் நிறைவேற்றத் துடிக்கும் கணவனைக் கண்டிக்கும் அதே நேரம், மகளையும் செல்லம் கொடுத்துக் கெடுக்கக் கூடாது என்று சொல்லும் அக்மார்க் அம்மாவாக தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார் வெலினா. கடைசியில் முருகதாஸின் வீடு வாங்கும் தீவிரம் புரிந்து ஒரு சிறிய வீடாவது வாங்கி விடலாம் என்று நினைத்து கணவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது சிறந்த திரைக்கதைதான்.
பள்ளியில் பிரதிக்ஷாவின் உடன் படிக்கும் குண்டுப் பையனும் சிறப்பாக நடித்திருக்கிறான். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், தான் இருக்கும் காட்சிகளில் தன்னைப் பெரிதும் பார்க்க வைக்கிறார் பக்ஸ். சிறுமி பிரதிக்ஷாவிடம் அவர் சொல்லும் நியாயங்கள்தான் இயக்குநர் சொல்ல நினைத்த கருத்துக்களைச் சொல்கிறது.
ஒளிப்பதிவாளர் நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாய் அமைந்துள்ளது. ஒரேயொரு ஒண்டுக் குடித்தன வீட்டின் உட்புறத்தை பலவித கோணங்களில் படமாக்கி அழகாக்கியிருக்கிறார். சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
திரைக்கதையை விறுவிறுப்பாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹென்றி. இருந்தாலும், மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டி திரைக்கதை ஒரே இடத்தில் நிற்பது மாதிரியான காட்சிகள்தான் சற்று தொய்வை தந்திருக்கிறது.
மகளிடம் வீடு வாங்கித் தருவதாக முருகதாஸ் ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், தங்களது பேத்தி போனில் சொன்னதை உண்மை என்று நம்பி முருகதாஸின் பெற்றோர் ஓடோடி வந்து அவரிடம் சண்டையிடுவது ரசனையானது.
மகள்தான் அறியாமல் கேட்கிறார் என்றால் இவர் ஏன் அதை ஒப்புக் கொள்கிறார்.. பொய் சொல்கிறார். மகளிடம் உண்மையைச் சொல்லிவிடலாமே என்று பார்வையாளர்களாகிய நாம் மனதுக்குள் நினைப்பது உண்மைதான். ஆனால், இதை வெளிப்படையாகச் சொல்ல பக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தை வைத்து சொல்லியிருப்பதும் சிறப்புதான்..! என்னவொரு பகடியென்றால் இதை அழுத்தமாக அப்பாவிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மகளிடம் சொல்கிறார் பக்ஸ்..!
ஒரு கட்டத்தில் முருகதாஸ் வெளிப்படையாக தன்னால் முடியாது என்று சொல்வார் என்று நாம் எதிர்பார்த்தாலும் அதை அவர் சொல்லாமலேயே தவிர்க்க… கடைசியாக எதனால் மகள் மனம் மாறி அப்பாவை புரிந்து கொள்கிறார் என்பதை மட்டும் அழுத்தமாக இயக்குநர் சொல்லாமல்விட்டது ஏன் என்று தெரியவில்லை.
வாடகை வீட்டில் வசித்து வரும் மக்களின் ஏகோபித்த கனவு சொந்த வீடாகத்தான் இருக்கும். அந்த சொந்த வீடு கனவிலேயே தினம் தினம் ஏங்கும் அப்பாமார்களுக்கு இந்தப் படம் சொற்ப நேரத்தில் ஒரு நினைவூட்டலையும், கவலையையும் ஏற்படுத்தினாலே இந்தப் படம் ஜெயித்ததாகத்தான் அர்த்தம்..!
RATING : 3.5 / 5