2014-ம் ஆண்டு இந்தி மொழியில் வெளிவந்து மிகப் பெரிய ஹிட்டடித்த ‘குயீன்’ திரைப்படம், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.
இதுபோல் ஒரு திரைப்படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராவது இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்திப் படத்தில் ‘குயீனாக’ நடித்திருந்க கங்கணா ரணாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்புப் பெற்ற இத்திரைப்படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன், நான்கு மொழிகளிலும் பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வருகிறார்.
தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘தட்ஸ் மஹாலக்ஷ்மி’, கன்னடத்தில் ‘பட்டர்ப்ளை’, மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.
தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் ‘குயீன்’ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
‘குயீன்’ இந்தி படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் அமீத் திரிவேதியே, இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ – சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குநரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.
ஐரோப்பாவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
படம் பற்றி தயாரிப்பாளர் மனு குமரன் பேசுகையில், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான கதாபாத்திரம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்” என்றார்.
இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் ‘பட்டர்ப்ளை’ படத்தின் நாயகியுமான பருல் யாதவ் கூறுகையில், “இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது” என்றார்.
வரும் அக்டோபர் மாதம் ‘பாரிஸ் பாரிஸ்’, ‘தட்ஸ் மஹாலக்ஷ்மி’, ‘பட்டர்ப்ளை’, ‘ஜாம் ஜாம்’ படங்கள் வெளியாகவுள்ளது.